Showing posts with label சில விசயங்கள். Show all posts
Showing posts with label சில விசயங்கள். Show all posts

தேவமலர் - ஸெல்மா லாகர்லெவ் - தமிழில் க.நா.சு.

மீண்டுமொரு மொழிபெயர்ப்பு. இதை நாவல் என்பதா? இல்லை சிறுகதையா? என்பதை அவரவரின் மனதின் ரசனைக்கே விட்டுவிடுவதுதான் நல்லது. மயிலிறகால் வருடுவது போன்றொரு எழுத்து. மிக எளிமையான எழுத்துநடை.

சிறு வயதில் ஊருக்குள் கிறிஸ்துவ மதத்தினர் பிரசங்கம் செய்ய வருவார்கள்.அப்போதைக்கு அரைகிளாஸ் எனப்படும் பால்வாடி பள்ளியை அவர்கள் வைத்து நடத்திக்கொண்டிருந்தார்கள். அங்குதான் நான் படித்தேன். படித்தேன் என்பதைவிட உணவு உண்டுவிட்டு விளையாட்டு முடிந்தவுடன் தூக்கம் பின்பு வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கு சொல்லிக் கொடுப்பவர்களை அக்கா என்றுதான் அழைப்போம். அவர்கள் கன்னியாஸ்திரிகள்.அன்பை அப்படியே போதிப்பவர்கள். இப்போது இருப்பவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அந்த வயதில் நடந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. அத்தனை பிள்ளைகளையும் சமாளித்து கவனித்துக்கொண்டது அப்போது அவரது முகத்தில் ஒரு சலிப்போ கோபமோ நான் கண்டதே இல்லை.

இடையே கதை சொல்லுவார்கள். பெரும்பாலும் கிறிஸ்துவ நீதிக்கதைகள்தான். அதிலும் அன்புதான் இருக்கும். மிகச் சாதாரணமாக நீ அவனை அடித்தால் கடவுள் உன்னை தண்டிப்பார், அப்படி செய்யக்கூடாது. நல்ல பிள்ளையாக இருந்தால் கடவுளின் அன்பு உனக்கு எப்போதும் இருக்கும். இந்த மாதிரியான கதைகள் அந்த வயதுக்கு போதுமானதாக இருந்தது. சில நேரங்களில் பெரிய கதைகளாகவும் இருக்கும். அவர்கள் சொல்லும்விதைத்தான் நானிங்கு சொல்ல வருகிறேன். அந்த வயது மழலைக்கு எப்படி சொன்னால் புரியுமென்பதை நன்றாக உணர்ந்து அந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகிப்பார்கள்.

மயிலிறகால் வருடுவதுபோல இருந்ததால் சில பிள்ளைகள் தூங்கிவிடுவார்கள். அதற்கும் சளைக்காமல் அவர்களை எழுப்பி தனது கதையைத் தொடர்வார்கள். இறுதியில் சத்தமாக ஒரு கேள்வியைக் கேட்பார்கள். ஒரு சில பிள்ளைகள் வாய்க்கு வந்ததை கத்தும். அதிலும் சந்தோசமடைவார்கள்.

அந்த கனமில்லாத மென்மையான கதை சொல்லும் பாணி இந்த எழுத்தில் என்னால் உணரமுடிந்தது. இதுவும் நீதிக்கதைதான். ஆனால் மிக அழகாக எழுதப்பட்ட ஒன்று. அவ்வளவு எளிய நடை, எழுத்தின் மேன்மை என எல்லாமே இந்த எளிய கதையில் இருக்கிறது.

குறைந்த நேரத்தில் வாசித்து மனதுக்கு நிம்மதியும்,இன்பமும் தரக்கூடிய ஒரு எழுத்து.

இறைவன் என்பவன் மிகச் சாதாரணமாவான். அவனிடத்தில் எந்தவொரு பேதமுமில்லை. அவனுக்கு முன்னால் மதபோதகரும்,திருடனும் ஒன்றுதான். சொல்லப்போனால் மதபோதகருக்கு கிட்டாத ஒரு பாக்கியம் திருடனுக்கு இருந்திருக்கிறது. அதைக் காண செல்லும் மதபோதகர் அதிசயித்து இதல்லவா எனக்கு கிடைத்த பாக்கியம் என்றென்னி மண்டியிட்டு சரணடையும் வேளையில் அவருடன் வந்த சீடனின் நம்பிக்கையின்மை தேவனை சாத்தனாக மனதில் என்ன வைத்து அங்கு நடந்துகொண்டிருந்த அதிசயங்களை கன நேரத்தில் மறைந்துபோகச் செய்துவிடுகிறான். தேவனின் மீதுகொண்ட நம்பிக்கை யாருக்கு இருக்குமோ அவர்களுக்கு அந்த தேவவனம் மீண்டும் பூத்து குலுங்கும்.

தேவமலரை பறித்துக் கொண்டுபோய்க் கொடுத்தால் தேவவனத்தில் வாழும் ஒரு திருடனை மக்களோடு சேர்ந்து வாழ சம்மதிக்கும் ஒருவருக்காக,தனது சீடனின் தவற்றால் அழிந்துவரும் தேவ வனத்தின் ஓர் கடைசி பூவை பறிக்க கீழே விழும் அந்த போதகர் அந்த இடத்திலியே மரணத்தை தழுவுகிறார். ஆனால் அவரது கையில் கிழங்குகள் இருக்கின்றன அதனை அவரது தோட்டத்தில் நட்டுவைக்க, அவரால் உயிருக்கு உயிராக வளர்க்கப்பட்ட தோட்டத்தில் எல்லா செடிகளும் அழிந்து விட அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் முந்தைய நாளில் இந்த செடி மட்டும் அமோகமான மலர்களோடு பூத்துக்குழுங்குகிறது. ஆம் அதுதான் தேவமலர். அதனை வைத்து போதகர் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி அந்த திருடனை ஊருக்குள் கொண்டுவர சம்மதிக்கிறார்கள். தான் செய்த தவறுக்கு சீடன் அந்த திருடனின் குகையில் போய் வாழ்கிறான் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு தவம் செய்து மன்றாடுகிறான்.

எளிய கதையை எளிய நடையில் மிக அழகாக எழுதியிருக்கிறார்கள். க.நா.சு வின் மொழிபெயர்ப்பில் இந்த மாதிரியான எத்தனை படைப்புகளையும் வாசிக்கலாம். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய மிகச்சிறிய நூல்.






உருமாற்றம் - ஃப்ரன்ஸ் காஃப்கா

உருமாற்றம் - ஃப்ரன்ஸ் காஃப்கா (மொழிபெயர்ப்பு - வின்சென்ட்)
அன்றாட வாழ்வில் இரண்டு ஷிப்ட், மூன்று ஷிப்ட் வேலைக்குச் சென்று நமது குடும்பத்தையோ அல்லது நமது கனவையோ துரத்திக்கொண்டிருக்கும் நாம் திடீரென்று, சுருண்டு விழுந்து ஏதாவதுவொரு நோயால் படுத்துவிட்டால் அதற்கு அடுத்துவரும் நாட்கள் நமக்கு எப்படியிருக்கும் என்பதை என்றாவது நாம் யோசித்திருப்போமா? அப்படி யோசித்தால் அந்த நாட்கள் நீங்கள் நினைத்ததைவிட மிகக் கொடூரமாகவே இருக்குமென்பது என் கருத்து. 

என்னதான் ரத்த உறவுகள் தொடக்கத்தில் உதவிகள் செய்தாலும், ஒருகட்டத்தில் அவர்களின் மனதில் நாம் எங்கோ ஒரு மூலையில் பாரமாக அமைந்துவிட்டால் அங்கேயே தோற்றுப் போய்விடுகிறோம். அதுவும் இந்தக் காலத்தில் கேட்கவே வேண்டாம். என்னதான் நீங்கள் குடும்பத்துக்கு மாடாய் உழைத்து முன்னேற்றியிருந்தாலும், முடியாத நிலையில் கட்டிலில் படுத்திருக்கும் உங்களால் செய்ய முடிந்ததெல்லாம் மனதுக்குள் சிந்தனை மட்டுமே. அதுவும் உங்களைச்சுற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் எப்படி உங்களை நடத்துகிறார்கள் என்பதையே மனது அசைபோடும். அது திருப்தி ஏற்படுத்தாத பட்சத்தில் மிஞ்சுவது என்னவோ ஏமாற்றமே.இந்த ஏமாற்றமே உங்களுக்கு அதிகமான தொல்லைகளைக் கொண்டுவந்து சேர்க்கும். துன்பத்தை விடத் துன்பம் இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்ற பயமே மிகக் கொடுமையானது. 

உலகத்தை எதிர்த்துப் போராட வலுவில்லாத நிலையில் கட்டிலில் படுத்திருக்கும் உங்களுக்கிருக்கும் ஒரே ஆறுதல் மன நிம்மதி. அது கிடைப்பது உங்களின் சுற்றுப்புறத்திலிருந்து. அதுவே கொஞ்சம் சிக்கலாக இருந்துவிட்ட நிலையில் மரணத்தின் வேகம் வேகமாக உங்களை நெருங்காதா என்றே மனம் எண்ணத்தோன்றும். என்னதான் விழுந்து விழுந்து கவனித்தாலும் கதவை மூடின பிறகு அவர்கள் உங்களுக்குக் கேட்காது என நினைத்துப் பேசும் பேச்சில்தான் இருக்கிறது உண்மை நிலை.
சரி என்னதான் செய்யலாம் என்று யோசித்தால், ஒன்றும் செய்ய முடியாது. வருவது வந்தே தீரும். நன்றாக வாழும்வரை ஒரு நிறைவான வாழ்வை வாழ முயற்சி செய்வோம். அதுவே நம்மால் முடியும். காலமொரு எதிர்வரும் ட்ரெயின் போல, நீங்களே தடுத்தாலும் அது ஒரே சீராகப் போகுமிடம் போய்த்தான் தீரும். 

சரி இப்போது இந்தக் கதைக்கு வருவோம். ஒரு விற்பனைப் பிரநிதியான ஒருவன் காலையில் எழும்போது யாரும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத ஒரு பூச்சியாக மாறிவிடுகிறான். அது பூச்சியா? ஏதும் வேறொன்றா என அந்தக் கதையில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. அவன் கண்விழிக்கும்போதுதான் அந்த நிலையை அவன் உணர்கிறான். இருந்தும் அவனுக்கு இருக்கும் ஒரே பயம் மேலதிகாரியிடம் எப்படி இன்றைக்கு ஒரு நாள் விடுப்பு கேட்பது ? நம்புவாரா? என்ற மனா உளைச்சல் தான் இருக்குமே தவிரத் தன்னிலைக் குறித்தவொரு எந்த எண்ணமும் இருக்காது.
ஒன்றுமே முடியாத பட்சத்தில்தான் நேர்த்திருப்பது அவனுக்குத் தெரியவரும். பெரும் போராட்டத்திற்குப் பின் தனது நிலையைக் குடும்பத்துக்குத் தெரிவித்தவுடன் முதலில் துக்கமடையும் அவர்கள் சிறிது காலத்தில் வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். இத்தனைக்கும் இவன் ஈட்டும் வருமானத்தில்தான் குடும்பம் நடந்துவந்திருக்கிறது. இப்போது இவனுக்குத் திடீரென்று இப்பெடியொரு வித்தியாசமான நிலை. முதலில் நன்றாகப் பார்த்துத் தவறாமல் உணவளிக்கும் தங்கையும் ஒருகட்டத்தில் மாறுகிறாள்.
குடும்பமே சேர்ந்து அவன் ஏன் இங்கிருந்து நமக்குக் கஷ்டம் கொடுக்கிறான் என்று எண்ணத்தொடங்க செத்துமடிகிறான் அந்தப் பூச்சி மனிதன். அந்தக் குடும்பமும் பெருமூச்சியடைகிறது.
பல்வேறு மன எண்ணங்களைக் கிளறிவிடும் இந்த மாதிரியான படைப்புகள் வாசிக்கக் கிடைப்பது அரிது. அருமையான நூல். வாசிப்போடு நிறுத்தாமல் முடிந்த பிறகு கொஞ்சம் நம்மையும் அந்தக் கதாநாயகனோடு பொருத்தி யோசித்துப் பார்த்தால் ஆசிரியரின் எழுத்தின் வெற்றி முழுமையடையும்.


மீண்டும் சொல்கிறேன் கண்டிப்பாக வாசித்தே ஆகவேண்டிய நூல் இல்லை இல்லை இலக்கியம்.

சில விசயங்கள் -17

புத்தகங்களும் திரைப்படங்களும்.

The Alchemist வாசித்தேன். மிகையாகச் சொல்லியிருந்ததால் அதிக எதிர்பார்ப்பினுடே ஆரம்பித்தேன். எப்போதுமே ஒரு புதிய வாசிப்பை ஆரம்பிக்கும்போது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆரம்பிக்கவேண்டுமென்பதே எனது விருப்பமும் பழக்கமும். ஆனால் ஒரு சில இடங்களில் விதிவிலக்காக முன்னரே தேடிப்படிக்க மனசு அலைபாயும். அந்த வகையில் இதன் விமர்சனங்களை வாசித்ததால் வந்த விளைவே மேலே சொன்ன என்னுடைய எதிர்பார்ப்பு.

மிக எளிய நடையில் எழுதப்பட்ட ஒரு இளைஞனின் கனவை நனவாக்கும் பயணம் சார்ந்த கதை.

ஸ்பெயினில் தொடங்கும் அவனது பயணம் எகிப்துவரை சென்று அவனது கனவில் வரும் ஒரு புதையலை அடையவேண்டும். அந்தப் பயணத்தில் அவன் சந்திக்கும் இன்னல்கள்,வாழ்க்கைப் பாடங்கள், அவனால் சிலர்க்கு ஏற்படும் அதிர்ஷ்டங்கள்/உதவிகள் என அவனது பயணம் அப்படியே நமது கண்முன்னால் விரிகின்றது. போகிறபோக்கில் அந்தப் புதையலை அடைகிற வெறி அவனைவிட நமக்கு அதிகமாகத் தொற்றிக்கொள்வதுதான் கதையின் வெற்றி.

ஸ்பெயினில் இருந்து tangier எனும் ஊருக்குச் செல்கிறான். அது மொரோக்கோவில் இருக்கிறது. அங்கு ஆடுவிற்ற பணத்தை உதவி செய்வதுபோல் வந்து ஒருவன் பிடிங்கிவிட வேறுவழியில்லாமல் அங்குள்ள கண்ணாடிக் கடையில் வேலைக்குச் சேர்ந்து, இவனால் அந்த முதலாளிக்கு அதிக லாபம் கிடைக்க அவர் இவனுக்கு அதிகமாகப் பணம் கொடுக்கிறார். அந்தப் பணத்தை வைத்து அவன் இரண்டு முடிவுகளை எடுக்கலாம். ஒன்று அவன் இழந்த ஆடுகளை வாங்கிக்கொண்டு சொந்த ஊரில் பழையபடி தனது இடையன் வாழ்க்கையைத் தொடர்வது. மற்றொன்று அவனது கனவுப் பாயணத்தைத் தொடர்வது. அவன் இரண்டாவதையே தெரிந்தெடுத்துப் பயணத்தைத் தொடர்கிறான்.

இங்கு அவன் tangier ல் பணத்தை இழந்த தருணத்தை யோசிக்கும்போது, எனக்கும் அங்குச் சென்றிருந்தபோது நடந்தது நினைவில் வருகின்றது. தங்கியிருந்த ஓட்டலிருந்து வழக்கமாகச் சாப்பிடும் உணவகத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது இரண்டுபேர் வந்து வழிமறித்து அங்கு இப்படியிருக்கும்,அப்படியிருக்கும், பெண்கள் இருக்கிறார்கள் என்கிற தோணியில் ஆரம்பித்தவர்கள் நாங்கள் ஒத்துவராததால் ஒரு கட்டத்தில் கைகளைப் பிடித்துக் கட்டயாமாகப் பணம் கேட்கத் தொடங்கினர். அந்தச் சாலையில் யாரும் நடமாட்டமில்லாமல் இருந்ததால் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் நாங்கள் இருவரும் நின்றிருக்க எங்களைச் சுற்றி மூன்று பேர் வட்டமாக நின்றிருந்தனர்.

ஒருவன் சட்டைப்பையில் கையைவிட்டு ஏமாந்த நிலையில் அடுத்துப் பணத்தை எங்கு வைத்திருப்பான் என்ற யோசனையில் இறங்கினான். ஏற்கனவே எங்களுக்குச் சொல்லியிருந்தார்கள், வெளியே செல்லும்போது அதிக உள்ளூர் பணமும், பாஸ்போர்ட்ம் எடுத்துச் செல்ல வேண்டாமென்று. ஏதாவது பிரச்சினையென்றால் ஓட்டல் பெயரைச் சொல்லி இங்கு வந்துவிடுங்கள் அப்புறம் பார்த்துக் கொள்ளலாமென்று. எனவே சாப்பாட்டுக்குத் தேவையான திராம்ஸ் மட்டுமே எடுத்துச் சென்ற நாங்கள் வைத்திருந்தது என்னவோ கொஞ்சம் சில்லறைகளைத்தான்.

கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் கடந்த நிலையில் நாங்கள் சாப்பிட்ட உணவகத்திலிருந்து இரண்டுபேர் வெளியில் வந்து எங்களை மடக்கிப் பிடித்ததைப் பார்த்த நிலையில் ஏதோ அவர்கள் பாஷையில் கத்திக் கொண்டே எங்களை நோக்கி ஓடிவந்ததைக்கண்ட இந்த மூன்று பேர் நழுவ ஆரம்பித்தனர்.வந்தவர்கள் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள். தற்செயலாக வெளியில் வந்தவர்கள் நாங்கள் நிற்பதைப் பார்த்துவிட்டு வந்ததைச் சொன்னார்கள். இறுதியாக இந்த வழியை இனிமேல் உபோயோகிக்க வேண்டாமென்றும், கொஞ்சம் தொலைவாக இருந்தாலும் வேறொரு வழியைக் காட்டினார்கள். அந்த வழியில் சாதாரணமாக மக்கள் நடமாட்டம் இருந்தது.

இந்த ஒரு சம்பவம் தவிர்த்தால் tangier ஒரு அழகான நகரம். அங்குதான் ஹெர்குலஸ் குகை இருக்கிறது. Mediterranean கடலும் Atlantic கடலும் ஒன்றையொன்று சந்தித்தாலும் இரண்டும் கலக்காது. இரன்டும் வெவ்வேறு நிறத்திலிருக்கும்.அந்நாட்டு ராஜாவின் அரண்மனையும் அங்குதான் இருக்கிறது. இன்னும் நிறைய இடங்கள் இருக்கிறது பார்ப்பதற்கு ஆனால் மேலே சொன்னவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரைதையாக இருக்க வேண்டும். கதையில் வரும் அந்தப் பையன் கவனமில்லாமல் தான் கொண்டுவந்த துட்டை இழந்துவிட்டான்.

சரி கதைக்கு வருவோம், எகிப்து நோக்கி பயணிக்கும்போது இடையில் பல இன்னல்களைச் சந்திக்கிறான். சகாரா பாலைவனத்தில் தொடரும் அவர்களது பயணத்தில் சில அமானுஷ்யங்களும் நடக்கின்றன. ஒரு இடத்தில இயற்கையைக் கட்டுப்படுத்துவது போல வரும். இது நமது சித்தர்களை நினைவில் கொண்டுவந்தது. மனதைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் இயற்கையோடு பேசி புயலை வருவிப்பது கதையில் நடக்கும். இவனோடு சேர்ந்து பயணிக்கும் ஆங்கிலேயர்கள் உலோகத்தைத் தங்கமாக்கும் ரஸவாதியை காணச் செல்வதாகச் சொல்லி, அந்தக் கலையைப் பற்றி இவனுக்கு விளக்குவார்கள். அவனுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள அவர்கள் சந்திக்க நினைக்கும் ரஸவாதியை இவன் சந்திக்கும் நிலைமைக்கு ஆளாகி, அவர்களே இவனுக்கு உதவிகளும் செய்து சகுன அடிப்படையில் எப்படியோ எகிப்து சென்றடைந்து புதையலை அடைந்தானா? இல்லியா? என்பதுதான் மீதிக் கதை.

என்னைப் பொறுத்தவரை இதுவொரு pulb fiction. வாசித்துப்பாருங்கள். அருமையான ஒன்று.

அடுத்து டால்ஸ்டாய் எழுதிய மனத்தத்துவ / உளவியல் சார்ந்த எழுத்துக்கள் மிகவும் பிடித்தவொன்று. பைத்தியத்தின் நாட்குறிப்புகள், சூரத்தின் காஃபி கவுஸ், ரெண்டு கிழவர்க்ள, மூன்று கேள்விகள் போன்ற சிறிய படைப்புகளையே வாசித்தேன். மனதின் ஓட்டங்களை அப்படியே எழுத்தில் வார்ப்பது டால்ஸ்டாய் க்கு கைவந்த கலை. நிகழ்வினை எந்த வகையிலெல்லாம் மனது யோசிக்குமென்பதை அப்படியே எழுதுவது சாதாரணமான விசயமில்லை. முக்கியமாகப் பைத்தியக்காரனின் நாட்குறிப்பில் வரும் மரணம் பற்றிய சிந்தனைகள். சூரத்தின் காபி கவுஸ் நம்மூர் நீதிக்கதை போல இருந்தாலும் வாசிக்க நன்றாக இருக்கும். மூன்று கேள்விகளும் அப்படித்தான். விருப்பமிருந்தால் இவருடைய உளவியல் சார்ந்த படைப்புகளை வாசியுங்கள் அருமையாக இருக்கும்.

அடுத்து பார்த்த படங்களில் இரண்டை மட்டும் இங்கு எழுதுகிறேன். ஒன்று Twelve Monkeys. ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு science fiction படம் பார்க்க வேண்டுமென்றால் கண்டிப்பாக இதனைப் பார்க்கலாம். அருமையான படம். இப்போது இருக்கும் கொரோன தொற்றுதல் இப்படியும் முடியுமோ என்ற சிந்தனையைத் தூண்டும் படம்.எடுத்துக்காட்டாக இப்போது கொரோன வந்து உலகமே அழியும் தருவாயில் தப்பிப் பிழைத்த கொஞ்ச மக்கள் பூமிக்கடியில் வாழுகின்ற நிலையில், சுமார் 30 வருடம் கழிந்த பிறகு அப்போது இருக்கும் மருத்துவ விஞ்சானிகள் மருந்து கண்டுபிடித்துப் பூமியின் மேற்பரப்பில் வழக்கம்போல வாழ்வை வாழலாம் என்றெண்ணும்போது கோரோனோ வைப் பற்றிய முழுத்தகவலும் அவர்களுக்கு வேண்டும் பட்சத்தில், ஒருவனை வைரஸ் பாதித்த 2020 வருடத்திற்குக் காலப்பயணம் மூலம் அனுப்பி வைரஸைப் பற்றிய முழுத்தகவலையும் சேகரித்துக் கொண்டுவரும்படி செய்து பின் அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதுதான் கதை.

படத்தின் முடிவு வரும்வரை எனது மனதில் ஓடியது என்னவென்றால், 2035 வருடத்தில் இருப்பவர்கள் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகத் தொல்லையடைந்து எப்டியாவது ஒரு விதத்தில் மக்கள் தொகையைக் குறைக்க எண்ணி, ஒரு மனிதனை முன்னெய் அனுப்பி ஆட்கொல்லி வைரஸ்களைப் பரப்பி மக்கள் தொகையை அழிப்பதாக நினைத்திருந்தேன்.ஆனால் இறந்தகாலத்தை மாற்றமுடியாது என்ற விதி இருக்கிறது. ஒரு காட்சியில் தனது இறப்பை சிறுவயதாக இருக்கும் தானே சோகமான முகத்துடன் பார்த்து பரிதாபப்படும்படி இருப்பது அருமையான காட்சி.படம் சுமுகமான முடிவுதான்.கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

அடுத்து The prestige. நோலன் படம். ஏன்?ஏன்? என்ற கேள்விகளுக்குக் கடைசியில் வரிசையாகப் பதில்களை அடுக்கும் ஒரு கதையமைப்பு. உண்மையில் மேஜிக் செய்வதற்கு இவ்வளவு மெனக்கெடணுமா என்பதே இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் எனக்குத் தெரிய வந்தது. சுருக்கமாகச் சொன்னால் ஒருவரின் மேஜிக் நுணுக்கத்தைத் திருடுவது அல்லது எப்படியென அறிந்துகொள்வதில் ஏற்படும் போட்டிதான் கதை.

ஒரு மேடையில் தூரமாய் இருக்கும் இரண்டு தனித்தனி கதவுகளில், ஒரு வழியாகச் செல்லும் ஒருவன் அடுத்த நொடியில் மற்றொரு கதவின் வழியாக வெளியில் வருவது எல்லோராலும் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.இதனை அறிந்துகொள்ள மற்றொருவர் அலைந்து திரிந்து இறுதியில் டெஸ்லாவிடம் செல்கிறார். ஆம் அதே விஞ்சானிதான். அவரும் போராடி மனிதனை அப்படியே காப்பிச் செய்யும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி கொடுக்கிறார். அதில் செல்லும் ஒன்றின்மீது மின்சாரம் பாய்ந்து அடுத்த நொடியில் அதே போல மற்றொன்று வந்துவிடும். முதலில் தொப்பி,பூனை எனச் சோதித்துப் பார்க்க வெற்றியடையும் அதைவைத்து மேடைகளில் நிகழ்ச்சிகளைச் செய்கிறார்.


ஆனால் முதலில் செய்பவர் இந்தளவுக்கு மெனக்கெடவில்லை. அவர்களை ரெட்டையர்கள். இந்த இயந்திரத்தின் மூலம் வெளிவரும் மற்றொருவர் என்ன ஆகிறார்? அந்த இன்னொரு மனிதனை வெளிவந்தவுடன் தண்ணித்தொட்டியில் இறக்கி கொல்கிறான் மற்றொருவன். இதையெல்லாம் non linear ல் சொல்லி கடைசியில் முடிவை விளக்குவதில் அப்பாடா என்று தெளிகிறது. பாருங்கள் அருமையான படம்.

சில விசயங்கள் - 16

    அந்த ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட விசயம் நடந்த விதம் பற்றி சொல்வதாக சொல்லியிருந்தேன். அதில் எழுதியிருந்தது என்னவென்றால் ஆயிரம் வருடம் ஆனாலும் இந்த ஊரின் அழிவு இந்த ஆற்றால் தான்” என்பதுதான். இதைப் பார்த்தவுடன் பொதுவாக நமது மனதுக்குத் தோன்றுவது ஆற்றில் பெரும் வெள்ளம் வந்து ஊரை அழித்துவிடும் என்றுதான். ஆனால் இதற்கு நேர்மாறாக நடந்தாலும் ஊர் அழியும் என்ற ஒன்று இருக்கிறது. உண்மையில் அதுதான் நடந்தது.

    ஆம் தொடர்ந்து ஐந்து வருடம் இந்த ஆற்றில் ஒரு பொட்டுத் தண்ணீர் வரவில்லை. மணலுக்கடியில் இருந்த நீர் அதிக பட்சமாக இரண்டு வருடங்கள் வரை உதவியது. அதன்பிறகு ஏற்கனவே இருந்த கிணற்றில் முடிந்தவர்கள் ஆழ்துளை போட்டுப் பார்த்தார்கள். சிலருக்கு கைகொடுத்தது, பலருக்கு கைவிரித்தது. கிணற்றில் நீர் இருப்பர்வகளிடம் நீர் பெற்று சிலர் விவசாயம் செய்தனர். மொத்தமாக நீர் இல்லையென்ற நிலை வந்த போதுதான் நான் சொன்ன அழிவு நேர ஆரம்பித்தது.

   குடிக்கவே நீர் இல்லாத நிலையில் விவசாயத்திற்கு யோசிக்கவே முடியாத நிலை. அதனால் நீரினால் கொளிக்கும் வயல் வெளிகள் எல்லாம் வானத்தை ஏந்தி பார்க்கும் நிலங்களாக மாறின. இதனால் வருடம் முழுதும் விவசாயம் செய்பவர்கள் தத்தளித்தனர். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே வெள்ளாமை செய்ய முடிந்தது. மீதி காலங்களில் அவர்களின் நிலங்களைபோலவே வானத்தைப் பார்த்து தவம் இருந்தார்கள். நிலம் மழைக்கு,அவர்கள் கடவுளுக்காக. ஆனால் இரண்டிலுமே ஒன்றும் நடக்கவில்லை.

    சுத்தமாக மழையில்லை. இந்த வருடமாவது மழை வரும் என்ற நமபிக்கையில் விதைத்தவர்களுக்கு அந்த வருடம் ஏமாற்றம் மிஞ்சினாலும் ஒரு குருட்டு நம்பிக்கையில் அடுத்தவருடமும் அதே முயற்சி மீண்டும் அதே தோல்வி பண இழப்பு.மூன்று வருடங்கள் தொடர் ஏமாற்றத்தில் கற்ற பாடம் அடுத்து வந்த ஆண்டுகளில் வருடம் முழுதும் எந்தவொரு வெள்ளாமையும் நடக்கவில்லை. விவசாயம் இல்லையென்றால் வாழ்வின் ஆதாரம் இல்லை. ஊரைவிட்டுக் காலி செய்தார்கள். வெளியூருக்குச் சென்றவர்கள் அவர்களின் தகுதிக்கு ஏற்றார்போல் வேலையை தொடர்ந்தார்கள். கடைகளில்,வாகனங்ககளில் என அவர்களின் வாழ்க்கை ஒட்டிக்கொண்டது.

     ஊரில் நிலங்கள் அதே தவநிலையில் இருந்தன.அனால் விவசாயிகள் இல்லை. அங்கே இருந்தவர்களும் தனது அடிப்படைத் தேவைகளுக்கான நீருக்கே அலைய வேண்டிய நிலையில் விவசாயத்தை மறந்தே இருந்தனர். இதற்கு இடையில் எப்போதாவது மழை முகம் காட்டினால் இந்த வருடம் ஏமாற்றாது என்ற நம்பிக்கையில் விவசாயம் பார்த்தவர்கள் சந்தித்தது பெரும் சேதம். முடியாதவர்கள் நிலபுலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு கிளம்பினார்கள்.

    எங்குமே எப்போதும் பசுமையாகக் காணக்கிடைத்த நிலங்களை தரிசாக பார்க்க ஒருவித மனோதைரியம் வேண்டும் அதுவும் விவசாயியாக இருந்தால். அந்த தைரியம் இருந்தவர்கள் மட்டும் அந்த ஊரில் இருந்தார்கள். ஏற்கனவே சேமித்து வைத்ததை வைத்து வாழ்க்கையை ஓட்டினார்கள்.

    இதே நிலமை எவ்வளோ நாள் நீடிக்கும் என்று பார்க்க நினைத்தவர்களும் அதில் அடங்குவார்கள். அவர்களின் நம்பிக்கை என்றாவது ஒரு நாள் மழை பெய்யும் இந்த ஆற்றில் வெள்ளம் வரும் என்பதுதான். ஆனால் இதற்கிடையில்தான் நடந்து மணல் கொள்ளை. இதைப் பார்த்தவர்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போனது. மணலை சுத்தமாக வழித்து எடுத்தபிறகு எவ்வளவு நீர் வந்தாலும் ஆறு என்பது ஒரு வடிகாலைப் போல மாறிவிடும். அதில் வருகின்ற நீர் அப்போதைக்கு மட்டும் அந்த ஆற்றில் வடிந்து கடலில் சேருமே தவிர பூமிக்கு அடியில் தங்காது. ஆற்றுமணலில் நீர் தங்கினால்தான் உட்புற நிலங்களுக்கு நீர் கசிந்து அங்குள்ள கிணறுகளுக்கு பாசனம் கிடைக்கும்.

     ஆக இருந்த ஒரு நம்பிக்கையும் போன சமயத்தில் அரசாங்கம் கொண்டுவந்த நூறு நாள் வேலைத்திட்டம் வந்தது. உழைத்தவர்களை சோம்பேறிகளாக ஆக்கிய முக்கியமான ஒன்று. அதுவும் மழையில்லாத காலத்தில் வேறுவழியின்றி அந்த வேலைக்கு போக வேண்டிய நிலை வந்தாலும் மழை பெய்ந்த காலத்தில் யாரும் விவசாயம் பார்க்க முன் வரவில்லை. வறட்சியோடு சேர்த்து ஆள் இல்லாத திண்டாட்டமும் சேர மொத்தமும் சுருண்டு போய்விட்டது.

   அந்த வேலைத்திட்டம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். பெயர் கொடுத்துவிட்டு தான் நின்ற இடத்தில் இருக்கும் புல்லை மட்டும் அகற்றிவிட்டு சம்பளம் வாங்கிக் கொள்ளலாம். மீதி நேரம் நல்ல உறக்கம். உடல் நல்ல சுகம் கண்டதில் விவசாய வேலைகளை செய்ய முடியாமல் போனது. இந்த திட்டத்தை பற்றி தனியாக எழுதாலாம்.

    இவ்வளவு பிரச்சினையில் அந்த பெருமாளை நான் மட்டும் எழுத மறக்கவில்லை, அங்கிருந்தவர்களும் மறந்தே இருந்தனர். அப்போதைய நிலையில் அவர்களின் மனதில் இருந்த ஒரேயொரு விசயம் இன்றாவது மழை வராதா என்பதுதான்.

    மொத்தமாக ஐந்து வருட முடிவில் அதாவது போன வருடம் மோட்சம் கிடைத்தது. பாதியழிந்த அந்த ஊருக்கு ஒரு மோட்சம்.  நல்ல மழை பெய்தது. ஆற்றில் நீர் வந்தது. அதுவும் ஒரு மாத காலத்துக்கு நீர் ஓடியது.. இன்னொரு பிரச்சினை அங்கு விவசாயம் பார்க்க ஆட்கள் இல்லை. முக்கியமாக கூலிக்கு வேலையாட்கள் இல்லை. இருந்தாலும் யாரும் உள்ளூர் வேலைக்கு வராமல் வெளியூர்களில் அதிக சம்பளத்துக்குச் சென்றனர். காரணம் குறைந்த வேலை நேரம் அதிகச் சம்பளம்.  அதிக சம்பளம் கொடுப்பவர்களையும் ஒன்றும் சொல்வதுக்கில்லை. அவர்களும் நிலத்தில் போட்டதை எப்படியாவது எடுத்தே ஆகவேண்டிய நிலை. இதே நிலையில் தான் இப்போதும் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

    மணலைக் கொள்ளையடித்துவிட்டு பழி ,பாவத்துக்கு அஞ்சினார்களோ தெரியவவில்லை ஆற்றில் குறிப்பிட்ட தூரத்துக்குள் சிறிய தடுப்பு அணைகளைக் கட்டினார்கள். நீர் வந்தால் வேகமாக கடந்து செல்லாமல் தடுப்புச் சுவற்றில் தடுத்து பெருகி அருகில் உள்ள நிலங்களுக்குள் கசிந்து செல்லும். ஒரு நல்ல விஷயம் மழைக்கு முன் அதை முடித்தது.

   இப்போது மீதியிருக்கும் விவசாயிகள் கொஞ்சம் சந்தோசத்தோடு விவசாய வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள். வேலைக்கு ஆட்கள் இல்லாவிட்டாலும் முடிந்த வரை ஆற்றில் நீர் வந்ததுக்கவாது ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இறங்கி விட்டார்கள். ஒருவேளை ஊரை விட்டுப்போனவர்கள் திரும்பி வரலாம்.

   இந்த நிலையில் யாராவது அந்த பெருமாளையும் அதனோடு வந்த அந்த ஓலைச்சுவடியும் நினைத்துப் பார்த்திருப்பர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு தோன்றியது.  ஒருவேளை அதில் சொல்லப்பட அழிவென்பது இதுவாக இருக்குமோ என்று. அதே நேரத்தில் அதில்  சொல்லப்பட அழிவென்பது இந்த நிலையோடு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அது ஒரு முறை நிகழ்ந்துவிட்டது, இனியேதும் நடக்குமா என்பதை இயற்கையும், அந்த பெருமளுமே சொல்ல முடியும்.

   அதே நேரத்தில் சிதிலமடைந்த அந்தக் கோயிலை செப்பனிட பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே எட்டப்பர் வைத்த கற்களை கொஞ்சம் செப்பனிட போகிறார்கள். இந்த இரண்டு சம்பவத்துக்கும் தொடர்பு இருந்தாலும் இருக்கலாம். இதுதான் நான் ரசித்த விசயங்களின் இப்போதைய நிலை.

    இந்த ஊருக்கு போயிருந்த போது ஆற்றில் வெள்ளம் ஓடுவதைப் பார்க்கும்போது அப்படியொரு ஆனந்தம். ஒருநாளைக்கு நான்கு முறை சென்று பார்த்துவிடுவேன் தண்ணி கூடியிருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா? என்று. சிறுவயதில் ஆற்றில் நீர் வந்தவுடன் இருந்த நிலையில் இப்போது பாதியைத்தான் உணர முடிந்தது. காரணம் ஆற்றில் மணல் இல்லாத பெரும் பள்ளங்கள் நீரும் அவ்வளவு சந்தோசமாக வேகமாக குடித்து ஓடமுடியாத நிலை. இதே மாதிரி அடுத்தவருடமும் தண்ணீர் வரவேண்டும் என்பதே என்னோடு சேரத்து பலரின் ஆசையும். பார்க்கலாம் என்ன நடக்கின்றது என்று.

ஆற்றில் வெள்ளம்  வந்தபோது எடுத்த புகைப்படங்கள். அப்போது எனக்குத் தெரியாது இதை எழுதப் போகிறேன் என்று. எப்படியோ இதற்கு பயன்பட்டது.












சில விசயங்கள் - 15


       முழுதும் கற்பனையில் கதையை ஒருவரால் எழுத முடியாது என்பதை சுஜாதா எழுதி வாசித்ததாக நினைவு. இது உண்மையும் கூட. அந்த வகையில் நான் அதிகம் பயன்படுத்தியது எங்கள் ஊரில் உள்ள பெருமாள் கோயிலும், ஊரைச் சுற்றி ஓடும் ஆறும் தான். என்னதான் அதீத கற்பனை இருந்தாலும் அதனைக் கொஞ்சம் உயிருள்ளதாக மாற்ற நாம் கண்ணில் கண்ட நிகழ்வுகளின் பாதிப்பு, மனிதர்களின் குணங்கள், அல்லது நாம் ரசித்த அல்லது நம்மை  பாதித்த இடங்கள் இவற்றில் ஏதாவதொன்றை  கண்டிப்பாக நமக்கே தெரியாமல் ஒரு இடத்தில் வெளிப்படுத்தியே விடுவோம்.

   அந்த விதத்தில் நான் சேர்த்தது சிறுவயதில் அதிகமாக நான் ரசித்த இரண்டு விசயங்கள். ஒன்று ஊரை ஒட்டியே ஓடும் ஆறு, வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோயில். இந்த இரண்டுக்கும் ஒரு மிகப்பெரிய சம்பந்தம் உண்டு. கொஞ்சம் கதைபோல இருந்தாலும் இறுதியில் உணமையான ஏதோ ஒன்று தனித்து இருப்பதை உணரமுடியும். முதலில் அந்த ஆற்றில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.

    வைப்பாறு என்ற பெயருடன் கேரளத்தில் இருந்து உருவாகி எங்கள் ஊர் வழியாகப் பயணித்து கடலில் சேரும். ஆறு என்றால் எப்போதும் நொங்கும் நுரையுமாக தண்ணீர் செல்லாது. வருடத்தில் எப்படி ஒரு தீபாவளி,ஒரு பொங்கல், ஒரு பிறந்த நாளோ அதே மாதிரி வருடத்திற்கு ஒரு தடவை வெள்ளம் வரும். அப்படி வந்தால் நாங்கள் புண்ணியவான்கள். ஒருவகையில் காட்டாறு என்று கூட சொல்லலாம். ஆனால் அதனையொட்டியக் கிராமங்களுக்கு ஒரு ஜீவநதி. தண்ணீர் வரும் நேரம் மட்டுமில்லாமல் திறந்த மணல்வெளியில் தனக்குள் நீரை தேக்கிவைத்து கோடை காலங்களில் விவசாயத்திற்கும், குடிக்கவும் நீர் வழங்கும் ஓர் ஜீவ நதி.

   ஆனால் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தண்ணி வரவே இல்லை யார் பெற்ற சாபமோ தெரியாது. இடையில் நடந்த மணல் கொள்ளையில் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் போல மாறியது. ஆம்  ஆடை கிழிக்கப்பட்டு கந்தல் கோலமாக கிடக்கும் ஒரு அபலையை விட மோசமாக ஆக்கிவிட்டார்கள். உயிரோடுள்ள  உடலை ஒரு இரும்புக்கரம் கொண்டு துளைத்து ஒவ்வொரு உறுப்பாக வெளியே எடுத்து விற்ற பிறகுத் தூக்கிப் போட்ட ஒரு சடலம்தான் இப்போது இருக்கும் நான் ரசித்த ஆறு.

  முதலில் எங்கும் ஒரே சமமான சமவெளி. கடைசியாக வந்த வெள்ளம் வரைந்து விட்டுச்சென்ற ஓவியமாக சிறு பள்ள மேடுகள். அந்த ஓவியத்துக்கு வண்ணம் சேர்க்கும் விதமாக வெள்ளையான குருமணல், கொஞ்சம் மங்கலான சரல், கருப்பான கூழாங்கற்கள் என அங்கங்கே பரவிக்கிடக்கும். கரையில் இருந்து பார்த்தலே கால் வைப்பதுக்கு முன் கொஞ்சம் ரசிக்கத் தூண்டும் அழகு. கரையோரம் உள்ள ஊர்களின் குடிநீர் தேவைக்கு ஆங்காங்கே போடப்பட்டக் கிணறுகள். இதைத்தவிர ஒரு காக்கா நின்றால் கூட துல்லியமாகத் தெரியும் அளவுக்கு இருந்த ஆற்றின் நிலைமைதான் நான் மேலே சொன்ன உயிரோடு உறுப்புகளைப் பிடுங்கி போடப்பட்ட உடலைப்போல மாறியிருக்கிறது. மாற்றிவிட்டோம்.

    பனைமரத்தின் பாதியளவுக்குக் குதறி மணலை எடுத்துவிட்டார்கள். அதற்கு மேல் சுண்ணாம்புப் பாறைகள்  கண்ணில் பட்டதால் அத்தோடு நிறுத்தியிருக்கிறார்கள். இல்லையென்றால் பூமியின் மறுபக்கம் வரைத் தோண்டியிருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சுத்தமான ஆற்றுமணலில் பெரும்பாலும் எந்தவித மரமும் அதிகமான செடிகளும் முளைக்காது. அதிக பட்சமாக நாணல் எங்காவது பார்க்கலாம். மரங்கள் வளர வாய்ப்பில்லை. ஆனால் இப்போது ஆறு அங்கே இல்லை வெறும் மரங்கள் அதுவும் வேலி மரம் எனப்படும் கருவேலம் மரங்கள் இறந்த உடலை மொய்க்கும் புழுவைப் போல ஆற்றை படர்ந்திருக்கின்றன.

   காரணம், வெறும் மணலாக இருந்தால் இந்த மரம் வராது, அதிக ஆழம் தோண்டியதில் ஆற்றுமணல் முடிந்து சாதாரண மண் வெளியில் வந்ததுதான் இவை அதிகம் வளர்ந்ததுக்கு கரணம். தூரத்தில் இருந்து பார்த்தால் கரையெது ஆறெது எனத் தெரியாமல் போய்விட்டது.ஆற்றுமணலைப் பார்ப்பதென்பது அங்கே முடியாத காரியம்.    

   சரி இதுக்கும் அந்த பெருமாள் கோயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், சம்பந்தமில்லாத விசயத்தைதான் இதுவரையில் உங்களை வாசிக்க வைத்திருக்கிறேன். மணல் கொள்ளைக்கும் அந்த கோயிலுக்கும் சம்பந்தமில்லை ஆனால் ஆற்றுக்கும் அதுக்கும் இருக்கிறது. அதைச் சொல்ல வரப்போய்தான் கொஞ்சம் நிகழ்காலம் நீண்டுவிட்டது. ஆம் நான் சொல்ல வேண்டிய சம்பந்தப்பட்ட விஷயம் இறந்தகாலத்தில் நிகழ்ந்த ஒன்று. அதாவது எனது காலத்துக்கு முன் நடந்தது ஆனால் எனது காலத்தில் என்னால் செவிவழிக்  கேட்கப்பட்டது.

    அதே ஆற்றில் ஒருமுறை வெள்ளம் வரும்போது வெள்ளமென்றால் அக்கரைக்கும் இக்கரைக்கும் நொங்கும் நுரையுமாக நீர் ஓடியதாம். வெள்ளம் வடியும் காலத்தில் ஏதாவது ஒரு கரையோரத்தில் குறைந்த அளவு நீர் சென்று கொண்டிருக்கும். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவரால் ஒரு பெரிய கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் சோதனை செய்துவிட்டு அது ஆற்று நீரில் அடித்துவரப்பட்ட ஒரு கற்சிலை என்பதை உறுதி செய்துகொண்டு ஊருக்குள் தெரியப்படுத்தியிருக்கிறார். வந்து அதனை கரைசேர்த்துவிட்டுப் பார்க்கும்போது அந்தச் சிலையில் இருந்து ஒரு ஓலைச்சுவடி பிரியாமல் மாட்டிக் கொண்டிருந்திருக்கிறது. அதில் எழுதியிருந்த விசயம் என்னவென்றால்,” ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இந்த ஊரின் அழிவு இந்த ஆற்றால்தான்” என்றிருந்ததாம்.

   அப்படியெடுத்து வரப்பட்ட சிலை பெருமாள் சிலை. பெருமாள் என்றால் ஒரு பொதுவான பெயரல்லவா அதனால் அந்தக் கடவுளின் பெயர் வெங்கடாஜலபதி அதாவது திருப்பதியில் இருக்கின்ற அதே சாமி என்று எனக்கு புரியும்படி எளிதாகச் சொன்னார்கள். அதனை வைத்துச் சிறியதாக ஒரு கோயில் கட்டினார்கள்.  ஆனால் அந்த ஓலைச்சுவடியை பற்றி யாரும் எதுவும் கண்டுகொள்ளவில்லை போல. அது கிடைத்த விசயத்தோடு அதன் பங்கு முடிந்திருந்தது.

    ஆனால் அந்தச் சிலை இன்னும் கம்பீரமாய் ஒரு பெரிய கோயிலை தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டுள்ளது. பெரிய கோயிலைக் கட்டியது அப்போதைய எட்டையபுர ராஜாவாம். அவர் அதிகமான ஆன்மிக திருப்பணிகளை எட்டையாபுரத்தை சுற்றிச் செய்திருந்தாலும் மிகப்பெரியவைகளில் ஒன்று இந்தக் கோயிலும் அடங்கும்.   

    கோயிலைக் கட்டியதோடு இல்லாமல் ஒரு பெரிய தேர் மற்றும் அதனை இழுக்க ஒரு யானை என அந்தக் கோவிலுக்கு கொடுத்திருக்கிறார். வருடாவருடம் நடக்கும் திருவிழாவின் போது யானை கட்டித் தேர் இழுத்திருக்கிறார்கள். அந்தத் தேர் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்வரை தேரடியில் இருந்தது. பின்னர்தான் அதனை பிய்த்து அடுப்பெரித்து விட்டார்கள். மிகப்பெரியது. கலைநயம் கொண்டது. 

    தேர் ஊரைச் சுற்றும்விதமாக வழித்தடங்கள் இருக்கும். அதாவது ஊருக்கு வெளியில் ஒரு நீள்வட்ட வடிவிலான ஒரு பாதை. திருவிழாக்கள் நடக்கும்போது மிக சிறப்பாக இருக்குமாம். அந்த ஊரில் அக்ரகாரம் ஒன்றும் இருந்தது. அந்த காலத்தில்தான் திருவிழா மிகச் சிறப்பாக நடந்ததாம். போகபோக கால மாற்றத்தில் மனிதர்கள் இடம்பெயர்ந்து அக்ரகாரம் காலியானது. அதன்பிறகு அந்தக் கோயிலை கண்டுகொள்ளாமல் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விட்டது.

    இந்தக் கோயிலைப் பற்றி அதிகமாவே கதைகளில் வர்ணித்து இருக்கிறேன். அவ்வளவு அழகான அமைப்பைக் கொண்டது. எனக்கு மிகப் பிடித்தமான ஒன்றும் கூட. ஆனால் மனிதன் அதையும் விட்டுவைக்கவில்லை. அதன் கோபுர கலசங்கள் கூட திருடப்பட்டன.வெளிப்புற சுவர்கள் இடிந்து விழ சிலரால் அது மீண்டும் கட்டப்பட்டது. இப்போது சென்று பார்க்கும்போது கோயில் கூரையில் உள்ள பெரிய அளவிலான பாறைகளால் செதுக்கப்பட்ட கற்கள் சரியும் நிலையில் உள்ளன. கோயிலைச் சுற்றியிருக்கும் இந்த மாதிரியான கற்களில் அதிகமான சிற்பங்களைக் காணமுடியும்

    இப்போதைக்கு இங்கு நிறுத்திவிட்டு, அந்த ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட விசயம் நடந்த விதத்தையும், அந்த ஆற்றைப் பற்றிய பல விசயங்களையும் அடுத்த பதிவில் எழுதுகிறேன். உண்மையில் நான் சொல்ல வந்த விசயம் ரெண்டு பத்திகளில் அடங்கும் என்றுதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஆறு போல நீண்டு பாய்ந்தது எப்படியென்றுதான் தெரியவில்லை. கண்டிப்பாக அடுத்த பதிவில் கடல் சேர்த்துவிடுகிறேன். .



கதைசொல்லிகள்

   
    புத்தகக் கதைகள் வாசித்து அறியாத காலமது. படிக்கின்ற புத்தகங்கள் தவிரப் பக்கத்தில் உள்ள கடையில் சாமான் மடித்துக் கொடுக்கும் ஏதாவது ஒரு தாளில் உள்ளதை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தால் ஒழிய வேறேதும் அப்போதைக்கு வாசிக்க இருக்காது. அப்போதெல்லாம் வாசிக்கும் ஒருவித ஆசை இருந்தாதகக் கூட நினைவில்லை.

    அந்த நிலையில் வரமெனக் கிடைத்த ஒன்றுதான் எனது தெருவில் இருந்த வாயதன பாட்டிகள் சொல்லும் கதைகள். அவர்களாகச் சொல்வதில்லை நாம்தான் சொல்ல வைக்க வேண்டும். அதற்கும் நிறையா வழிமுறைகள் இருக்கவே செய்தன.

    அவர்கள் சொல்லும் கதைகளில் பெரும்பாலும் ராஜா,ராணி, அவர்களில் யாருக்காவது ஒருவருக்குப் பிடிக்காத சில எதிரிகள், அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் அல்லது என்ன செய்து தனது வாழ்வை வாழ்கிறார்கள் என்பதுதான் அதிகமாக இருக்கும். கொஞ்சம் அடர்ந்த காடு ஏதாவது மிருகம் எங்களைப் பயம் காட்ட அல்லது கதையில் விறுவிறுப்புக் கூட்ட அடிக்கடி வந்துபோகும்.

    கதையின் இறுதியில் ஏதாவது அறிவுரை இருக்கும். அம்மா சொல்வதைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்/ ஒழுங்கா படிக்க வேண்டும் . இல்லையென்றால் கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் மாதிரியாக நேரிடும் என்ற எடுத்துக்காட்டுப்பாடம் கிடைக்கும்.

    ஆச்சர்யமான ஒன்றென்றால் சில தொடர்கதைகளும் உண்டு. சில மணிநேரங்களாகச் சொல்லி நான்கு நாட்கள் வரையிலும் நீளும். ஒவ்வொருநாளின் கதைத் தொடக்கத்தின் போதும் ம்ம்ம் நேத்து எதுல விட்டேன் என்று கேட்டுவிட்டு நாங்கள் சொல்லும் இடத்தில் இருந்து அதே கதை மீண்டும் தொடங்கும் விதம் என எல்லாமே இப்போதும் ஒரு அருமையான நினைவாக இருக்கவே செய்கிறது. ஒருவேளை அந்த நினைவுக்காகத்தான் இதை எழுதுகிறேனா??

    அல்லது அந்த வயதில் என்னில் பல கேள்விகளையும் ஆர்வத்தையும் தூண்டிவிட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பாட்டிமார்களை நினைவு கூறவா? இந்த இரண்டையும் செய்யவே விளைகிறேன்.

    முதலில் எனது கதை சொல்லி பாட்டிகளை ஒரு சிறு அறிமுகம் செய்து எனது மனதையும் கொஞ்சம் கிளறி விட்டுக்கொள்கிறேன். மழைக்கு ஏங்கி நின்ற பயிர்களுக்கு மழை பொழிந்த பிறகு பயிரடிப்புச் செய்து மண்ணைக் கிளறதுவது போலதத்தானே இதுவும் அவ்வளவு சுகமானது இல்லியா?

     நான் அதிகம் கதைகேட்ட ஒரு பாட்டி என்றால் அது கோட்டூர் பாட்டி தான். அவர்களுடைய உண்மையான பெயர் இதுவரையிலும் எனக்குத்தெரியாது. எனக்கு மட்டுமில்லை ஊரில் அப்போது இருந்த பலருக்கும் அவருடைய பெயர் தெரிந்திருக்க வாய்பில்லை. காரணம் அப்போது அனைவரையும் அடைமொழி அல்லது பட்டப்பெயர் வைத்தே கூப்பிடுவது அல்லது அடையாளப்படுத்துவதுதான் வழக்கம். பட்டப்பெயர் என்றால் பெயருக்கேற்றபடி அது அவர்களுக்குக் கிடைத்த பட்டம் மாதிரியேதான் அவர்களும் அதைப் பாவித்து என்னைப் போன்ற சிறுவர்கள் உபோயோகித்தாலும் அவர்களிடத்தில் எந்தச் சலனமும் இருக்காது.

    அவர்களுக்கு அந்தப் பெயர் வந்த காரணம், அவர்கள் பக்கத்து ஊரான கோட்டூரில் இருந்து வந்து அந்த ஊரில் குடியேறியவர்கள். இந்த மாதிரி ஊரில் பலபேருக்குப் பெயரில்லாமல் அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த ஊரின் பெயரே அமைந்துவிடுவதுண்டு.

      இந்தப் பாட்டி எனது தெருவில் எனது வீட்டுக்கு அருகிலேயே முதல் வீட்டில் இருந்தார்கள். எனது வீடு தெருவைப் பார்த்தபடியிருக்கும். அந்தத் தெருவே எனது வீட்டின் வாசலில் இருந்து தொடங்கி ஒரு பிரதான தெருவோடு இணைவாதாக இருக்கும். தெருவின் இருபுறமும் வீடுகள் இருக்கும். அதில் முதல் வீடுதான் இவர்களுடையது.

        ஏதோ சில காரணங்களுக்காகத் தனியாகத்தான் ஒரு மண்வீட்டில் இருந்தார்கள். ஏனென்று புரிந்துகொள்ளும் வயதும் ஆர்வமும் அப்போதைக்கு இருக்கவில்லை. அதிக வயதானவர்கள். எத்தனை வயதென்று கேட்டால் அவர்களுக்குச் சொல்லத்தெரியாது. ஆனால் அவர்கள் வயதொத்தவர்களோடு இணைத்து நான் அவளை விட இத்தனை வருடம் சிறியவள்,பெரியவள் என்று தனது காலத்தை அறிந்து கொள்வார்கள். இல்லையென்றால் குத்துமாதிப்பாக ஒரு தோராய வயதைச் சொல்லுவார்கள். அதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருப்பதில்லை.

        இந்தப் பாட்டியும் இதே வகைதான். வயது தெரியாது. யாராவது காட்டுவேலைக்குக் கூப்பிட்டால் முடிந்தால் போவர்கள். முடியவில்லையென்றால் வழக்கம் போலக் கம்மங்கஞ்சி குடித்துவிட்டுத் திண்ணையில் படுக்கைதான். காதில் பெரிய பாமடம் போட்டிருப்பார்கள். கொஞ்ச காலம்வரை அது முழுதும் கட்டித்தங்கம் என்றே நினைத்திருந்தேன்.ஆனால் உண்மையில் அது அப்படியில்லை. அதற்குக் காரணமும் இருக்கவே செய்தது, அந்த அளவுக்குப் பாட்டியின் காது இழுத்து தோள்பட்டைவரைத் தொங்கும்

      இந்தப் பாமடம் எனும் அணிகலன் பற்றி எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியவில்லை. பெரும்பாலும் பாட்டிகள் அணியும் ஒரு அணிகலன். பெரிய அளவில் இருக்கும். பெரிய அளவென்றால கையை மடித்தால் உள்ளங்கை அளவுக்கு. மத்தியில் சதுரமாகவும் அதனைச்சுற்றி உருண்டை உருண்டையான கோலிக்குண்டுகள் போன்று ஒரு அமைப்பு. அப்போது பெரும்பாலான கொஞ்சம் வசதியுள்ள எல்லாப் பாட்டிகளும் இந்தப் பாமட பாக்கியத்தைப் பெற்றிருக்கவே செய்தார்கள்.

      எங்கள் வீட்டு வாசலுக்கு முன்னிருந்த இடத்தில்தான் நாங்கள் விளையாடுவோம். வேகின்ற வெயிலென்று சொல்லுவார்கள் அதென்னதென்று அறிய வயதென்பதால் எப்போதுமே ஒரே கூச்சலும் கும்மாளமாய் இருக்கும் அந்த இடத்தில். இது கோட்டூர் பாட்டியின் தூக்கத்துக்குப் பெரும் இடைஞ்சல்.

       அவர்கள் அடிக்கடி புலம்பும் வார்த்தைகள் “பள்ளிக்கூடம் விட்டாசுன்னா இந்தப் புள்ளக்காடு அநியாயம் தாங்க முடில தாயே” என்று எதிர்படும் யாராக இருந்தாலும் சொல்வார்கள். ஒருமுறை அப்படிப் பேயாக ஆடிக்கொண்டிருக்கும்போதுதான் இங்க வந்து உட்காருங்க நான் கதை சொல்கிறேன் என்ற குரல் கேட்டது.

     கொஞ்சப்பேர் பாட்டியை சுத்தி உட்கார்ந்தோம். சுவத்துல சஞ்சபடி காலை நீட்டிக்கொண்டு என்ன கதை சொல்லனும்னு சொல்லுங்க சொல்றேன் என்றார்கள்.

     எதாச்சும் ஒன்னு சொல்லுங்க என்று சொல்லியவர்களில் மொத்தம் மூன்று நான்கு பேர் மட்டுமே இருந்திருப்போம். மீதி அனைவரும் பாட்டியின் பேச்சுக்கு ஏமாறாதவர்கள் அப்போதைக்கு.

      பாட்டிக்கு கடாப்பல்லைத் தவிர வேறு பற்கள் இல்லாத பொக்கையான வாய். இதில் பொடிப்பழக்கம் வேறு. அவர்கள் கதை சொல்ல ஆரம்பிக்கும் முன்னாடி செய்கின்றன செய்கைகளையே ஒரு கதையாக எழுதாலம்.

     சொல்ல ஆரம்பித்தார்கள். முதலில் சொன்ன கதை, குழந்தையாகப் பிறந்த ராணியைக் காட்டில் கொண்டுபோய்க் கொன்றுவரச் சொல்ல, செல்பவன் அங்குக் காட்டில் இருக்கும் முனிவரிடம் கொடுத்துட்டு ஒரு கிளியை கொன்று அந்த ரத்தத்தை அரண்மனையில் வந்து காட்டிவிடுவான். அப்புறம் அந்த ராணி வளர்ந்து பெரியவளாகும் வேளையில் அந்த நாட்டில் பெரிய பஞ்சம் ஏற்பட்டு அனைவரும் அந்த முனிவரை நாடி காரணம் கேட்க, அவர் அந்தப் பெண்ணைக்காட்டி இவள் இந்த நாட்டுக்கு ராணியானால் எல்லாமே சரியாகிவிடும் என்று சொல்ல்வதைகேட்ட அந்த மன்னர் அப்படியே செய்யவதாக ஒப்புக்கொள்கிறார். உடனே நாடு செழிக்கிறது. கொஞ்ச நாள் கழித்து அந்த முனிவர் மன்னரிடம் சென்று அவள்தான் உங்களுடைய மகள், நீங்கள் கொல்லச் சொன்னவன் என்னிடம் கொடுத்தான். அவள் பாவம் பிடித்தவள் இல்லையென்பதை நீருபிக்கவே நான் இப்படிச் செய்தேன் என்று சொல்ல மன்னரும் வணங்கி தனது தவறுக்கு வருந்த, அதுக்குப்பிறகு நாடே சுபிட்சமாக இருந்ததாகக் கதை முடியும்.

       இங்கு நான் ஒரு பத்தியில் சொன்ன கதை பாட்டியினால் குறைந்தது சில மணி நேரங்கள் வரை சொல்லப்பட்டது எனக்கு. நிறைய வர்ணனைகள் அவர்களுடைய கதையில் இருக்கும். இடையிடையே எங்களை ஏமாற்ற அவ்வளவுதான் கதை முடிஞ்சது இத்தோட என்று சொல்லி விரட்ட முற்படுவார்கள். ஆர்வமாகக் கதை கேட்கும் நான் இது என்னாச்சு? அது என்னாச்சு என்று கேட்க கதை தொடரும். அதற்கு அவர்கள் சொல்லும் வசனம்” அய்யயோ இந்தப் புள்ளைங்ககிட்ட கதை ஆரம்பிச்சது தப்பால்ல போச்சி” இதுதான். ஆனாலும் ஒரு கதையையும் முடிக்காமல் விட்டதில்லை.

      தொடக்கத்தில் விடுமுறை நாட்களில் கேட்கத் தொடங்கிய பழக்கம் தினமும் அவர்களைத் தொந்தரவு செய்யும் அளவுக்குப் போனது. கொஞ்ச நாட்கள் சலிக்கலாமல் சொன்னார்கள் அதற்குபிறகு கதை தீர்ந்து போனதாகச் சொல்லி மறுத்தார்கள் அல்லது எனக்குத்தெரிந்த கதைகள் அனைத்தையும் சொல்லிவிட்டதாக விரட்டுவார்கள். கொஞ்சம் பாசமாகக் கெஞ்சினால் கண்டிப்பாகக் கதை கிடைக்கும் என்பதை அறிந்தவன் என்பதால் அதை உபோயோகித்துக் காரியம் சாதித்திருக்கிறேன்.

      எனது பாட்டியும் அவர்களும் கிட்ட தட்ட ஒரே வயதுடையவர்கள். நான் தொந்தரவு செய்வதை “அய்யயே என்னமா இந்தப் புள்ள இப்படிக் கத கதைன்னு பாட படுத்துது” என்று சொல்லும்போதேல்லாம், “நீயென்ன வெட்டியா முறிக்கிற கத சொல்ல வேண்டியதுதானே” என்ற பதில்தான் என் பாட்டியிடமிருந்து வரும்.

   அதற்கு  ”ஏன் உங்க பேரனுக்கு நீங்க சொன்னா என்ன?” என்ற கேள்விக்கு விடையிருக்காது. இருந்தாலும் எனது சொந்த பாட்டிகளிடம் இருந்து எந்தவொரு கதையும் இதுவரையில் கேட்டதில்லை. ஆனால் தாலாட்டு பாடுவதைக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை எங்கு இதைப் படித்தீர்கள் என்று கேட்டதற்கு “ ஆமா படிக்கிறோம், காதுவழி கேட்டதுதான்” என்ற பதில் வரும்.

       தாலாட்டை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால் அன்றாடம் நடப்பதைத்தான் கொஞ்சம் இழுத்து ராகமாகப் படிப்பார்கள். மாமா அதுகொண்டு வாரான், இது கொண்டு வாரான்,அழுகாம தூங்கு, யாரடிச்சா? மாமாட்ட சொல்லலாம் இந்த மாதிரி. ஆனால் நிகழ்வுகள் அனைத்தும் ஒரு தொடர்ச்சியாக வருவதுதான் இதன் சிறப்பு. சின்னக் குழந்தைக்கு எங்கே புரியப்போகிறது என்ற எண்ணத்தில் எந்தப் பாட்டியும் தாலாட்டில் பிசகு செய்வதில்லை. அதுவும் ஒரு கலை அவர்களுக்கு.

      இதே மாதிரிதான் கோட்டூர் பாட்டிக்கும். கதை சொல்லும்போது நாங்கள் எங்காவது பெராக்கு பார்த்தால் அவ்வளவுதான் கதை சொல்வதை நிறுத்திவிடுவார்கள். மீண்டும் நிலமைக்குக் கொண்டுவருவது மிகக் கடினமான விஷயம். சில நேரங்களில் எங்களிடமிருந்து தப்பிக்க இதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டதும் உண்டு.

     இப்படித் தொடங்கியதுதான் எனது கதைகளுக்குள்ளான பயணம். அப்போது எனக்கிருந்த கதைகேட்கும் ஆர்வம் இப்போது வாசிப்பதில் இருப்பதாக உணர்கிறேன். காரணம் பத்திலிருந்து பதினைந்து வயது வரைக்கும் இருக்கும் சிறுமைப் பருவமே ஒருவனுடைய பிற்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதை எங்கோ வாசித்திருக்கிறேன்.( நிகிதாவின் இளம்பருவம் என்ற நாவலில் என்ற நினைவு சரியாகத் தெரியவில்லை)

    பாட்டியின் ஒவ்வொரு முற்றுப்புள்ளிகளுக்கும் “ம்ம்ம்” கொட்டவேண்டும். கதையின் ஆர்வத்தில் அது தானாகவே வந்துவிழும். வந்த காலத்தில் அந்தப் பாட்டியைக் கதை கேட்டுத் தொந்தரவு செய்ததில் நான் மட்டுமே மிஞ்சியிருந்தேன். ஒருவனுக்காக அவர்கள் கதை சொல்லத் தயங்கியதில்லை. அனேகமாக அன்று தொடங்கிய தனிமையின் மீதான ஆசை இன்றும் தொடர்கிறது.

     தனிமைக்கே தனிமையேற்ப்பட்டால் தயங்காமல் என்னிடம் வரலாம் என்ற நிலமையில்தான் நான் இருந்திருக்கிறேன் புத்தகங்களோடும் கதைகளோடும். இந்தப் பழக்கம் எனது வாழ்க்கையை மாற்றிப்போட்டது என்று சொன்னால் அது தகும். போட்டபாதை மிக நல்ல பாதை. காரணம் நான் இன்னும் தனிமையை அதிகமாக விரும்புகிறேன். துளியும் வெறுக்கவில்லை. தனிமைக்கு நான், எனக்கு என்னுடைய புத்தகங்கள்.

      இப்போதைக்கு இந்த ஒரு கதை சொல்லியை மட்டும் சொல்லி முடிக்கிறேன். முடிந்தால் மீண்டுமொரு பதிவில் மற்றவர்களைப் பார்க்கலாம்.

     எனக்குள் இருக்கும் இன்னொரு மிகப்பெரிய கவலை, இந்த மாதிரியான பாட்டிகளிடம் இருக்கும் அர்த்தம் மிகுந்த கதைகள் அப்படியே செவி வழியாக மட்டும் கேட்டுணர்ந்து காலத்தின் பயணத்தில் யாரும் கேட்காமல் அல்லது சொல்ல வாய்ப்புக் கொடுக்காமல் காற்றில் கரைந்து விடுவதுதான். இது சாதாரண இழப்பில்லை என்பதை நீங்களும் பாட்டிகளிடம் கதை கேட்டிருந்தால் உணரமுடியும்.

      எப்படியோ, குறைந்த பட்சம் பாட்டியளவு கதை சொல்லாவிட்டாலும் உங்களின் குழந்தைகளுக்குக் கொஞ்சமமாவது கற்பனை எனும் உலகத்தை விரிக்க உதவுங்கள். அதன் முதல் சாவியே இந்த மாதிரியான சிறுவயது கதைகளில்தான் இருக்கிறது என்பது எனது அனுபவ அறிவு. அடுத்தச் சாவி புத்தக வாசிப்பு. முடிந்தவரை இந்த இரண்டில் ஒன்றாவது செய்ய முயற்சிக்கலாம்.





சில விசயங்கள் - 14

      எதிர்பாராமல் கிடைக்கின்ற அதிர்ஷ்டம் அல்லது வாய்ப்புகளின் சுகமே அலாதியானதுதான். அந்த வகையில் அண்மையில் எனக்குக் கிடைத்த ஒன்று உடையார். இதைப் பாதி அதிர்ஷ்டம், மீதி நல்ல வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். காரணம் இதுவரை நான் பாலகுமாரன் அவர்களின் எழுத்தை வாசித்தது கிடையாது. அதிகமாக அவரைப்பற்றியும் அவரது எழுத்துக்களைப் பற்றியும் படித்திருக்கிறேன். இருந்தாலும் அவரது படைப்பை இதுவரை வாசித்திருக்கவில்லை.

      லா.ச.ரா வின் எழுத்தைச் சில மாதங்களுக்கு முன் வாசிக்க ஆரம்பித்தபோது இருந்த மன நிலையை மீண்டும் என்னுள் ஏற்படுத்தியவர் பாலகுமாரன் அவர்கள். நான் முதன்முதலில் லா.ச.ரா வை படிக்கும்போது இதுவரையில் தமிழில் வாசித்தும், வாசிக்கும் பழக்கம் இருந்தும் இவரது படைப்பை எப்படித் தவறவிட்டுக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதே எனது வருத்தம். அந்த வருத்தம் அடுத்து வந்த காலத்தில் லா.ச.ரா வையே சுவாசித்ததில் போய்விட்டது. இப்போது பாலகுமாரன்.

      இந்த இருவருக்குமே பொதுவான ஒரு ஒற்றுமை இருக்கவே செய்கிறது. காரணம் லா.ச.ரா வை மனதில் வாங்கி வாசித்தவன். கிட்டதட்ட மனதை அவரின் எழுத்தில் அடகு வைத்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். அதே ஒரு உணர்வை மனதில் ஏற்படுத்தியது பாலகுமாரன் அவர்களின் எழுத்து. இந்தவகையான உணர்வு வாசிப்பவர்களின் மன நிலையைப் பொறுத்து மாறும் ஒன்றாக இருப்பினும், நான் உணர்ந்ததைத் தான் இங்கு எழுத முடியும்.

லா.ச.ரா.

    இவரது  எழுத்தென்றால், அதில் வரும் சூழ்நிலை அல்லது அதில் வாழும் கதாபாத்திரமாகவே மாறி, கதையோடு செல்வதுதான் எனது வாசிப்பு. சில சமயங்களில் இவரது எழுத்து புரியவில்லை என்பதை வாசிக்க நேர்ந்ததுண்டு. சற்று ஆச்சர்யமான விசயம் இந்த விளக்கமான, ஆத்மாத்தமான எழுத்தே மனதுக்குள் கிரகிக்கவில்லையெனில் வேறெது? என்ற கேள்வியே எனக்குள் மீதமிருந்தது.

      அத்தோடு நிற்காமல் ஏன் புரியாமல் போனது என்ற காரணத்தையும் அறிய முயன்றபோது என்னுள் எனக்கே பதிலளித்து என்னையே நான் தேற்றிக்கொண்ட பதில்: “வாசிப்பவர்கள் படைப்பை எழுதியவர் ஒருத்தர்(லா.ச.ரா), அதில் வாழ்பவர்கள் சிலர், அதைப் படிப்பவன் நான்” என்று இருப்பதே காரணம். ஆனால் யாரொருவர் இதில் இரண்டைத் தவிர்த்து “நான் வாசிக்கிறேன் அதனால் அந்தப் படைப்போடு ஒத்துப்போய் மனதளவில் சிலமணிநேரங்கள் அதாகவே வாழ்கின்ற நிலையில் அவருக்குப் புரியாததென்று ஏதும் மிஞ்சியிருக்க வாய்ப்பேயில்லை.

இலக்கியமென்பதும் இதுதானே(இந்த உணர்வு) இல்லியா?

     இப்போதெல்லாம் இதுதான் இலக்கியம், இது இலக்கியத்தில் சேராது என்ற செய்தியை படிக்கும்போதே ஏதோவொரு சகிக்காத உணர்வுதான் எழுகிறது. எப்படி இவர்களால் இலக்கியமென்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடிகிறது என்ற கேள்வி என்னுள் இன்னமும் இருக்கிறது.

         இதே வகையில் சில கேள்விகளும் பல வருடங்ககளாகத் தேங்கி நிற்கின்றன. அவற்றில் சிலவற்றை நான் இங்குச் சொல்வதின் மூலம் என்னுள் இலக்கியமென்பது எந்த வகையில் புரிந்ததாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
1.    கடவுள் இருக்கிறாரா? இருந்தால் எப்படித் தெரியும் அல்லது எப்படி உணரமுடிகிறது அந்த உணர்வை எனக்கும் விளக்க முடியுமா?
2.    மற்ற உணவுகளையாவது ஓரளவு விளக்கிவிட முடியும், இந்தக் காதல் என்றால் எப்படி இருக்கும்? மனதில் அதன் பிம்பம் என்ன என்பதைக் கொஞ்சம் சொன்னால் என்னுடைய பல கேள்விகளுக்கான விடை இதிலேயே அடங்கிக் கிடக்கின்றன.

        இந்தக் கேள்விகளுக்கு என்னைத் திருப்திபடுத்தும் வகையில் பதிலளித்துவிட்டால் அவர்கள் இலக்கியமென்று எனது எழுத்தைச் சொன்னால் கூட நான் நம்பத்தாயர்
.
      இலக்கியமென்பது வாழும் வாழ்க்கையின் சூழ்நிலை சார்ந்த தன்மையின் வெளிப்பாடோ அல்லது மொழி சார்ந்த அல்லது அதன் கலாச்சர தாக்கத்தின் வெளிப்பாடக இருக்கலாம் என்ற கருத்து இலக்கியமென்ற முடிவில்லா புத்தகத்துக்கு ஒரு பத்தியாகக் கொள்ளலாம்.

சரி விடுங்கள் கொஞ்சம் தடம் மாறிவிட்டது இல்லையா...? இதை மற்றோர் தனிப்பிரிவாகப் பார்க்கலாம். இப்போது பழைய தடத்திற்கு வருகிறேன்.

          கடைசியாக மனம் முழுதும் லா.ச.ரா வும் தமிழில் வாசிக்க வேண்டிய சில படைப்புகளைத் தேடித்தேடி வாசித்துக்கொண்டும் இருந்த ஒரு தருணத்தில், தாம்பரத்தில் ஒரு பழைய புத்தகக் கடையில் “உடையார் பாகம்-1” என்று கையினால் எழுதப்பட்ட பதிகப்பகத்தார் வெளியீடு இல்லாத ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். எப்போது அந்தப் பக்கம் போனாலும் எதவாது உபோயோகமான ஆங்கிலப் புத்தகங்கள் அந்தக் கடையில் கிடைக்கும் என்பதற்காகவே அந்தக் கடையில் சிறிது நேரம் செலவிடுவது எனது வழக்கம்.

      கையில் எடுத்தபிறகுதான் தெரிந்தது அந்தப் புத்தகத்துக்குப் பின்னால் அதனுடைய மற்ற பாகங்கள் இருந்தன. அதாவது உடையார் பாகம்-2, & 3 & 5 ஏனோ நான்காம் பாகம் இல்லை. கொஞ்சம் முன்னுரையில் வாசித்ததில், தஞ்சை பெரியகோவில் மற்றும் இதை இன்னும் பெரிய அளவில் எழுதப் போவதாகப் பாலகுமாரன் அவர்கள் சொன்னது அதற்குச் சான்றாக அங்கு அதே படைப்பின் பல தொகுதிகளைப் பார்த்தது போன்றவைகளே அந்தப் புத்தகத்தை ஒருமுறை வாசிக்கத் தூண்டியது.

        ஒரே மூச்சில் வாசித்தேன். என்னுடைய பழக்கமா? அல்லது அந்ததந்த படைப்பின் தாக்கமா? என்றெல்லாம் எனக்குத்தெரியாது. சில படைப்புகளையே இந்த மாதிரி வாசித்ததுண்டு. லா.ச.ரா. வின் அபிதா, சிந்தாநதி, பாற்கடல் மற்றும் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் போன்றவைகள்.

       சிலமணி நேரம் பண்டையத் தமிழ்ச்  சமூகத்தில் வாழ்ந்தேன் என்ற உணர்வை என்னுள் விட்டுச் சென்ற ஒரு படைப்பு. கனமான புத்தகம் வாசிக்க வாசிக்க அந்தக் கனம் மனதில் ஏறிவிடுவதுதான் அதன் சிறப்பு.

      முடித்தபிறகு நான் அறிந்து கொண்டதெல்லாம் ராஜராஜ மன்னர் தஞ்சை பெரியகோவிலை கட்டினான் என்பது மிகத்தவறு கட்டினார் என்பதே சரியான ஒன்று. இதன் அர்த்தம் முழுதும் புரிய நீங்களும் என்னைப்போலப் பாலகுமாரனின் எழுத்தின் மூலம் அந்த மன்னரின் ஆட்சியில் சிலமணி நேரமாவது ஒரு சாதாரணமான குடிமகனாக வாழ்ந்து பார்க்க வேண்டும். அல்லது என்ன நடக்கிறதென்பதைத் தூரத்தில் நின்றுகொண்டு வேடிக்கையாவது பார்த்திருக்க வேண்டும்.

         மீண்டும் அதே பழைய கடைக்குச் சென்று மற்ற தொகுதிகளைக் குறைந்த விலைக்கு வாங்கும் எண்ணம் மனதில் துளியும் இல்லாமல் போக, அதன் முழுத்தொகுதியும் கிடைக்கிறது என்பதை அறிந்தேன். என்னைப் பொறுத்தவரையில் கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தக வரிசையில் இதுவும் இருக்கிறது.

இப்போது பாலகுமாரனின் பிற எழுத்துக்களையும் வாசிக்கிறேன்.

      என்னுள், வாசிப்பென்றால் வெறுமனே பக்கங்களை வேகமாகப் பொழுதுபோக்கிற்காகப் புரட்டுவது இல்லையென்பதை உணர்த்தியவர் லா.ச.ரா. எழுத்தின் தாக்கம் மனதில் வின் வின்னென்று இருக்கவேண்டுமேன்பார். நெருப்பு என்றால் வாய் சுட வேண்டுமென்பார். ஆம் எனக்கும் சுட்டது. அந்தவொரு மன நிலையைத் தனது எழுத்தின் மூலம் உருவாக்கிய பின்னர், மற்ற படைப்புகளை உள்வாங்கிக் கிரகித்துச் சந்தோசிப்பதில் எந்தவொரு தேக்கமும் இருக்கப் போவதில்லை.

எனக்குமில்லைதான். சந்தோசத்தைப் பகிரும் ஒரு  நிகழ்வுதான் நீங்கள் மேலே வாசித்தது. வேறொன்றுமில்லை.

சில விசயங்கள் - 13

  பயணங்களை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. எதோ ஒரு காரணத்திற்காக நாம் செய்யும் பயணத்தில் இருக்கும் சில நல்ல விசயங்களை கண்டிப்பாக எல்லோருமே அனுபவித்தே ஆகியிருக்கவேண்டும். அனுபவங்கள் செய்யும் பயணத்தின் நோக்கத்தை பொறுத்து மாறுபடும். சிலர் பொழுதுபோக்குவதற்கு என்றே செய்யும் உல்லாச பயணங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால்  அன்றாட சுய தேவைகளுக்கான பயணங்களே அதிகம்.
  
  அதிலும் முக்கியமாக பேருந்து பயணம். அதிக தொலைவில்லாத பேருந்து பயணம் எனக்கு பிடித்தமான ஒன்று.குறைந்தது 6~8 மணி நேரமாக இருந்தால் சலிக்காமல் இருக்கமுடியும். அதுக்கு மேல் போனால் எப்போது இறங்குவோம் என்று இருக்கும்.பயணிக்கும்போது இருக்கும் மனநிலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் எங்கு செல்கிறோம் எதற்கு செல்கிறோம் போன்ற விசயங்களே. ஒரு சந்தோஷமான நிகழ்வை எதிர்கொள்ள பயணிக்கிறோம் என்றால் கண்டிப்பாக பயணம் முழுதும் அந்த எண்ணங்களே நிறைந்து  இருக்கும் மனதில். இக்கட்டான அல்லது கவலையான நினைவுகளோடு செய்யும் பயணங்களும்  இருக்கவே செய்கின்றன. என்னவென்றால் அந்த எண்ணங்கள் பயணிக்க ஆரம்பித்த சில மணி நேரங்களிளியே மறக்கடிக்கப்பட்டு மனதிற்கு கொஞ்சம் இதமாக்கும் சக்தி பயணங்களுக்கு உண்டு.

  தனிமையான பயணங்கள் இன்னும் இனிமையானவை. நம்மை பற்றிய எண்ணங்களை அசை போட்டுக்கொள்ள இதைவிட சிறந்த தருணம் வேறெதுவும் இருக்க முடியாதுதான்.துக்கமோ சோகமோ முன்னர் நடந்த விசயங்ககளை பற்றி யோசித்து அதில் முடிவுகளை எடுக்கும் தருணமாகவும் அது இருக்கும்.இதுவரை நான் சொன்னது ஒருவரின் தனிப்பட்ட மனதின் எண்ணங்களை பயணங்கள் எப்படி மாற்றுகின்றன என்பதுதான்.

   இது தவிர்ந்து யாராக இருந்தாலும் கண்டிப்பாக அனுபவித்தே ஆகவேண்டிய சில விசயங்கள் இருக்கவே செய்கின்றன இந்த பேருந்து பயணத்தில் அதுவும் நமது தமிழ்நாட்டில்.ஏறி அமர்ந்ததில் இருந்து இறங்கும் வரை நடக்கும் விசயங்கள் பொதுவாக எல்லோருக்கும் பொதுவானதே.

   ஏறும்போதே நடத்துனர் கத்துவார் இடையில் எங்கும் நிக்காது என்று. அதாவது நீங்கள் திருநெல்வேலி செல்ல வேண்டும் என்றால் அடுத்து மதுரை தான் நிக்கும் அதுக்கு அடுத்து நேரா நெல்லை என்றுதான் கூவிக்கொண்டு இருப்பார். ஆனால் நேராக திருநெல்வேலியோ அல்லது மதுரையோ போகிறவர்கள் குறைவாகவே இருப்பார்கள். இடையில் இறங்குபவர்களே அதிகமாக வாசலில் அடைத்து இருப்பார்கள். இப்படியே கொஞ்ச நேரம் கடந்துபோனவுடன் நடத்துனர் உள்ளே எட்டிப்பார்ப்பார் உள்ளே ஈ ஆடிக்கொண்டு இருக்கும். அடுத்து அவர் கூவுவது திருச்சி ஏறிக்கோங்க என்று. இப்போது கொஞ்சம் கூட்டம் நிறைந்து இருக்கும். இப்படியே நேரம் செல்ல கடைசியில் அந்த பேருந்து பயணிக்கும் வழியில் உள்ள அணைத்து ஊருகளில் நின்று செல்லும்.

    நான் மேலே சொன்னது அரசுபேருந்துகளில் இயல்பாக நடக்கும் ஒன்று. தனியார் பேருந்துகளில் கொஞ்சம் தேவலை பயணசீட்டு முன்பதிவு செய்யும்போதே அறிவிப்பு இருக்கும் இது எங்குமே இடையில் நிக்காது என்று. சொன்ன மாதிரியே இடையில் எங்குமே ஊர்களில் நிறுத்துவதில்லை. காரணம் அதற்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு பயணசீட்டு முன்பதிவு ஆகிவிடுவதே . இதனால்தான் அவர்களால் இந்த மாதிரியான முடிவுகளை எடுக்க முடிகின்றது. ஆனால் அரசு பேருந்துகளில் முன்பதிவு ஆகி, இடம் இல்லாமல் இருந்தாலும் கடமைக்கு எல்லா ஊருகளுக்குள் சென்று திரும்புவது என்ன நேர்த்திகடனோ தெரியவில்லை.

   சரி பேருந்தில் ஏறி உள்ளே பார்த்தால் முதல் சீட்டில் இருந்து கடைசி வரையில் உள்ள ஜன்னல் ஓர இருக்கைகள் எல்லாமே நிறைந்து எல்லாமே ஒற்றை இருககைகளாக காலியாக இருக்கும். ஏதோ இரவில் வெளியில் இருக்கும் இயற்கை அழகை ரசித்து விடிந்ததும் அதை கவிதையாக வடிப்பவர்கள் போலத்தான் அவர்கள் அந்த இருக்கைகளை பிடித்து அமர்ந்து இருப்பார்கள். ஆனால் உண்மையில் பேருந்து கிளம்பிய அரைமணிநேரத்தில் பேருந்து சத்தத்தை மிஞ்சும் குறட்டை சத்தம் வெளிவரும்.

   நமக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் பெரியவிசயமாக இருந்தாலும் நாம் கொண்டு போகும் பைகளை வைக்க இடம்கிடைப்பது அதைவிட கொஞ்சம் சிக்கலான விஷயம். எப்படித்தான் சுமந்து வருவார்களோ என்று ஆச்சரியப்படும் வகையில் கொண்டுவந்து திணித்து இருப்பார்கள். அதுவும் அவர்கள் இருக்கை வேறு எங்கோ இருக்க அவர்கள் பைகள் இங்கு வந்து வைத்துவிட்டு எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனபது போல உட்கார்ந்துவிடுவதுதான் அவர்களின் வெற்றி.

  எப்படியோ அதுக்கும் ஒரு சிறிய இடம்கிடைத்து உட்கார்ந்தால் பக்க்கத்தில் உள்ளவரை கவனித்து நமது பணம் அல்லது முக்கியமான பொருள்களை எங்கெங்கே எப்படி வைக்கவேண்டும் என்பதை பற்றி யோசிப்போம். அதற்குள் பேருந்து ஓரளவு நிறைந்து இருக்கும். பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கும். யாரவது பெண்கள் ஏறினால் அவர்கள் அமர இடம் இருக்காது அதான் இயற்கை  பிரியர்கள் எல்லோரும் ஜன்னலோர இருக்கைகளை பட்டாபோட்டு விட்டதால் பெண்கள்  ஏறி அங்கு இங்கும் தேடி தயங்கி நிற்கும்போது நடந்துனர் உள்ளே வருவார். அதற்கு முன் அவர்களே இந்த இயற்கை பிரியர்களிடம் விண்ணப்பம் வைப்பார்கள் கொஞ்சம் மாறி உட்காருங்கள் என்று. அவர் எதோ 1000 ரூபாய் கடன் கேட்கிறார் போல என்று நினைத்து எங்கோ வெளியில் பார்ப்பார். அப்போது அந்த பெண் மனதில் என்ன திட்டுகிறார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கும் ரெம்ப நாள் ஆசை. யாராவது சொல்லுங்கள்.

    நடந்துனர் வந்து ஒரு சிறிய கட்டபஞ்சாயத்து வைத்து அந்த பொண்ணுக்கு இடம்பிடித்து கொடுப்பார். பெரும்பாலும் யாருமே இடம்மாறி உட்காருவதில்லை. சிலர் அவர்கள் வருவதை பார்த்தவுடனே எழுந்து மாறி உட்கார்ந்துவிடுகிறார்கள். மாறி உட்காறாதவர்கள் இனிமேலாவது திருந்த முயற்ச்சியுங்கள்.

  பேருந்து கிளம்பி கொஞ்சநேரத்தில் நடத்துனர் பயணசீட்டு கொடுக்க வாருவார். அப்போதுதான் நாம் நமது செல்வசெழிப்பை காட்டுவோம். சொல்லிவைத்தற்போல் 500 ரூபாய் காட்டி அவரை கோபபடுத்தி அவர் யாருக்கு எவ்வளவு சில்லறை கொடுக்கவேண்டும் என்பதை மறந்து குழம்பி ஒரு வழியாக அவர் எல்லாம் முடித்து ஆட்களை என்னும்போது நீங்க கொடுத்த இந்த ரூபாய் கிழிஞ்சு இருக்கு பாருங்க இது செல்லாது என்று கத்துவார் ஒருவர். வேண்டா வெறுப்பாக வந்து வேறு ரூபாய் கொடுக்க அங்கு ஒரு கும்பல் தூங்க தயாராகி கொண்டு இருக்கும்.

   இப்போது இரண்டு இருக்கைக்கு இடையில் இருக்கும் கைவைக்கும் கட்டைக்கு ஒரு சின்ன பனிப்போரே நடக்கும். யாரு முதலில் அதிகமா கைவைத்து அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறார்களோ அவர்களே பாக்கியாவான்கள்.என்ன சிரிப்பு என்றால் அடுத்த ஒருமணிநேரம கழித்து அவர் கையை தனியாக வெட்டி எடுத்தாலும் தெரியாத அளவு தூங்கிகொண்டு இருப்பார். அதிலும் பாதி பாதி இடத்திற்கு வார்த்தையில்லா சண்டை நடக்கும். கையை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துவது, கையை நகர்த்தி கொண்டே இருமுவது, வேண்டுமென்றே தூங்குவதுபோல் நடித்துகொண்டு நமது கையை தள்ளிவைப்பது இதெல்லாம் அந்த நேரத்தில் நடக்கும் ராஜதந்திர வேலைகள். நான் பொதுவாக முதலில் அவருக்கு எல்லா இடமும் கொடுத்துவிட்டு தூங்கியவுடன் தேவையான இடம் பிடிப்பேன்
.
    அடுத்து பின்சாயும் இருக்கையை பயன்படுத்துவதில். பின்னாடி உட்கார்ந்து இருப்பவரை எந்தவித சட்டையும் செய்யாமல் டபக்கென்று பின்பக்கம் சாய்த்து அவரை கோபபடுத்துவதில் என்ன இன்பமோ.அதிலும் பின்பக்கம் உள்ளவர் இவ்வளவு ஏன் சாய்க்கிறிங்க என்று கேள்வி கேட்பார். அதுக்கு எந்த விதபதிலும் இருக்காது. ஒருமுறை பின்பக்கம் பெண் உட்கார்ந்து இருக்க முன்பக்கம் என் அருகில் உட்கார்ந்து இருந்தவர் முழுதும் சாய்த்து படுத்து தூங்க நினைக்க அந்த பெண் இவ்வளவு ஏன் சாய்க்கிறிங்க என்னால உட்கார முடில என்று சத்தம் போட அப்புறம் நடந்துனர் வந்தும் பஞ்சாயத்து செய்தும் பலனில்லை. அவர் அவரின் உரிமையை முழுதும் பயன்படுத்தி கொண்டார். அப்போது நடந்துனரிடம் கேட்ட ஒரு கேள்வி என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது இவ்வளவு அதிகமாக சாய்க்க வேண்டாம் என்றால் பின் ஏன் இருக்கையை இப்படி அமைக்கிறிர்கள் என்றார்.

   அந்தப்பக்கம் பெண் விடுவதாக இல்லை. ஏன் என் மடியில் பாடுத்துக்க வேண்டியது தானே இப்படி பண்ணுவதுக்கு என்று சொல்ல இவர் அது என்ன என் தல எழுத்தா உங்க மடியில் படுக்கனும்னு என்று பதில் அளித்தார்.அந்த எண்ணம் வேற இருக்கா என்று அந்தப்பெண் கேட்க இவர் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டார். அந்த பெண் எதோ புலம்பிகொண்டே தூங்கிபோனார். விஷயம் என்னவென்றால் என் அருகில் அமர்ந்தவர் இடையில் இறங்கிய பின்னும் அவர் இருக்கை பின் சாய்க்கபட்ட நிலையில் இருந்தும் அந்த பெண் சந்தோசமாக தூங்கி கொண்டுதான் இருந்தார்.

    இடையில் உணவுவிடுதியில் நிற்காத பேருந்துகள் இருந்தால் சொல்லுங்கள் புண்ணியமாக போகும். முக்கியமான அழிம்புகள் அங்குதான் நடக்கிறது. இறங்கி சிறுநீர் கழிக்கும் இடத்தை தவிர எல்லா இடத்திலேயும் கழிக்கிறார்கள். அதை தடுக்க  தனியாக காவல்காரன் வேறு. கையில் லைட் வைத்துகொண்டு யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பதை பின்னால் இருந்து வெளிச்சம் மற்றும் சத்தம் போட்டு காட்டி கொடுப்பதுதான் அவருடைய வேலை. சரி காசு கொடுத்து போலாம் என்றால் வெளியில் இருப்பதுக்கும் அங்குபோவதுக்கும் ஒரே வித்தியாசம் ஒரு குட்டச்சுவர் மட்டுமே.சுத்தம் வேறு இல்லை. என்ன நேர்த்திகடனோ தெரியவவில்லை அங்கு வரும் பயணிகளை அந்த சுவரின் மீது கழிக்கவைப்பதில்
.
    நள்ளிரவில் மசாலா நிறைந்த பொருள்களை வாங்கி ஆனந்தமாக தின்பவரை அங்குதான் பார்க்கமுடியும்.அதுவும் கடந்த சில நிமிடங்கள் வரை நன்றாக உறங்கி கொண்டிருந்தவரா இவர் என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு அவரின் வேகம் இருக்கும். எல்லாம் முடிந்து பேருந்து கிளம்பும்போதுதான் யாரவது ஓட்டுனரின் அருகில் சென்று இருங்கள் இன்னும் ஒரு ஆள் வர வேண்டியது இருக்கு என்று சொல்லி இன்னும் 10 நிமிடம் தாமதம் செய்வார். வரும் மனிதர் தனக்கும் இங்கு நிற்கும் பேருந்துக்கும் எந்தவித சம்பந்தமே இல்லை என்பது போல நடந்து வருவார்.
   
   எப்படியோ ஒருவழியாக ஊர் வந்து இறங்கி பேருந்து கடந்து சென்ற பிறகு தன்னிலைக்கு வந்து யோசித்து பார்த்தால் ஏதோ வேற்றுகிரக பயணம் மேற்க்கொண்டு திரும்பியது போல ஓர் அனுபவம். அத்தனை விதமான மனிதர்கள் அனுபவங்கள் கண்டிப்பாக இந்த மாதிரியான பயணங்களில் மட்டுமே கிடைக்கும்.

                                            
                                          ************

    இந்த வருடம் கோவில்பட்டி, எட்டையாபுரம் பக்கம் சுத்தமாக மழை இல்லை. சென்னையில் பெய்த மழையில் கொஞ்சமாவது பெய்ந்து இருந்தால் அந்த பக்க விவசாயிகள் சந்தோசப்பட்டு இருப்பார்கள். ஆனால் சுத்தமாக இல்லை.இன்னும் காத்து இருக்கிறார்கள் மழை பெய்யும் என்று.
எப்போதும் வற்றாத கிணறுகள் கூட சுத்தமாக வற்றிவிட்டது. ஆழ்துளை போட்டால் சுண்ணாம்புக்கல் பாறை வருகிறது. அப்படியே போட்டாலும் ஆழம் அதிகம் ஆகிவிடுவதால் மோட்டரை இன்னும் கிழே இறக்கி வைக்கவேண்டும் அப்போதுதான் தண்ணியை இழுக்கும்.தண்ணியின் ஆழம் அதிகம் என்பதால் வெளியேறும் அளவும் குறைவே. அதனால் பாய்ச்சல் நேரமும் அதிகமாக ஒரு பிஞ்சையில் ஒரு பக்கம் இருந்து பாய்ச்சிக்கொண்டு போய் முடிந்த பின்பு திரும்பி பார்த்தால் ஏற்க்கனவே பாய்ச்சி இருந்த எல்லாம் வெயிலுக்கு காஞ்சி கருவாடாக போய் இருக்கும். வேறென்னே செய்ய திரும்பியும் முதலில் இருந்து தொடர வேண்டும்.

   தண்ணி வசதி இல்லாதவர்கள் கடவுளிடம் மழை வேண்டி காத்து இருந்து காலம் போனதால் இப்போது மனம் மாறி விவசாயத்தையே விட்டு விட்டார்கள். இப்போது இருப்பவர்கள் கிணற்றில் கொஞ்சம் தண்ணி இருப்பவர்கள் மட்டுமே. ஏற்க்கனவே அரசாங்க வேலை காரணமாக வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடி கொண்டிருக்கும் அவர்களுக்கு இந்த மழை இல்லாத பிரச்சினை ஒரு பெரிய இழப்பு. ஒருவேளை அந்த வேலை செய்யாமலே சம்பளம் கிடைக்கும் திட்டம் ஓய்ந்தால் கொஞ்சம் விவசாயம் செழிக்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் வாய்ப்பு இல்லை. இதனால் கூலி ஆட்களின் சம்பளம் வேறு கூடி விட்டது. வேலைக்கு வரவேண்டும் என்றால் அவர்களுக்கு அரசாங்கம்  கொடுக்கும் சம்பளம் எங்களுக்கும் வேண்டும் என்கிறார்கள். இவர்களை குறை சொல்ல முடியாது என்னை பொறுத்தவரை இவர்கள் மனசாட்சி உள்ளவர்கள் உழைத்துவிட்டு சம்பளம் கேட்கிறார்கள்.


   எப்படியோ ஒன்றும் மட்டும் உறுதி இந்த நிலை இன்னும் நீடித்தால் அடுத்தவருசத்தில் அந்த பக்கம் கண்டிப்பாக விவசாயம் இருக்காது என்பதே உண்மை. மழைக்கு, கடவுளுக்கு எல்லாம் காத்து இருந்த ஏமாந்த விவசாயிகள் ஒருநாள் நம்மையும் ஏமாற்றுவார்கள். உணவு இல்லாமல் வாழமுடியாது. புரிகிறதா? 




இன்னும் எழுதுவேன்.

          இன்னும் கொஞ்சம் தொடர்ச்சியாக எழுதலாம் என்று இருக்கிறேன். நீண்ட இடைவெளிதான் நான் எழுதாமல் இருந்த காலம். குறிப்பிட்டு சொல்ல உருப்படியான காரணம் எதுவுமில்லை. சென்னை வந்தபிறகு எழுதுவது குறைந்தது. புதிய இடம் புதிய வேலை, நண்பர்கள் என்பதோடு மட்டுமில்லாமல் படிக்க நிறைய புத்தகங்கள் கிடைத்ததும் ஒரு காரணம்.

      சுஜாதாவின் தீவிர ரசிகன் என்பதால் அவரது பத்துகட்டளைகளில் ஒன்றான தினமும் ஒருபக்கமவாது படிக்கவேண்டும் என்பதை கடைபிடிப்பவன்.  இடைப்பட்ட காலத்தில் நிறையவே படித்தேன் புத்தகத்தையும், வாழ்க்கையும். இந்த இரண்டையும் நேராக உங்களோடு பகிர்ந்துகொண்டு குழப்பபோவதில்லை.

         என்ன எழுத போகிறோம் என்ற யோசனை வருவதுக்கு  சாத்தியமில்லை. வழக்கம் போல அறிவியல் புனைவுதான். இதை எழுதத்தான் எனக்கு சிரமம் இல்லாமல் இருக்கிறது. மற்றபடி காதல் கதையோ, சமுக சீர்திருத்த கட்டுரைகளோ, கதைகளோ எழுத என்னால் நிறைய மெனக்கெட  முடியாது. என்னால் அறிவியல் புனைவு எளிதாக எழுதப்பட்டுவிடுகிறது என்பதால் அதையே தொடர்கிறேன்.

          வழக்கம்போல யாரும் படிக்க மாட்டார்கள் என்ற புலம்பல் ஒருபுறம் இருந்தாலும், இருக்கின்ற நான்கு வாசகர்களுக்காவது எழுதுகிறோம் என்கிற  ஒரு சந்தோசம் இருக்கிறது. இதில் இப்போதைய பிரச்சினை நீண்ட இடைவெளியில் அந்த நான்கு பேர்களும் இருக்கிறார்களா? இல்லையா? என்பதே. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

        அதிகம் எழுதாவிட்டாலும் கதைக்கான சிறு குறிப்புகள் நிறையா எடுத்து வைத்துள்ளேன். ஒவ்வொன்றையும் கொஞ்சம் விரிவு படுத்தினால் கொஞ்சமாவது படிக்கின்ற வகையில் கதைகளாக  தேறும் என்ற நம்பிக்கை உள்ளது. உடனே இல்லாவிட்டாலும் வேலைநேரம் போக, மின்வெட்டுக்கு தப்பித்து எழுதியதை பகிர்கிறேன். முடிந்தால் படித்துவிட்டு சொல்லுங்கள். பார்க்கலாம் இந்த சுற்று கதைகள் எப்படி இருக்கின்றன என்று.




சில விசயங்கள் - 12

       இதில் என் சுயபுராணம் மட்டும்...இந்தமுறை ஊர்பயணம் மற்றதைவிட நன்றாகவே இருந்தது. ஒருவேளை பொங்கல் பண்டிகை காலமாக இருந்திருக்கலாம். பண்டிகைகளை வெகு விமர்சியாக கொண்டாடுவதில் சுத்தமாக ஆரவம் இல்லைதான். இந்த நேரத்தில் எல்லா குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக கூடி இருக்க கிடைக்கும் ஒரு அறிய வாய்ப்பு அதுதான் என்னை பொருத்தவரைக்கும் பெரிய சந்தோசம்.இந்த காரணத்துக்காகவே இந்த மாதிரியான பண்டிகைகள் தொடங்கப்பட்டு இப்போது திசைமாறி போய் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

     அனேகமாக நான்கு வருடங்களுக்கு பிறகு இந்த பொங்கலுக்கு நான் ஊரில் இருந்தேன். அதுவும் புதிய வீட்டில் பொங்கல் கொஞ்சம் இனிப்பாகவே இருந்தது. ஏற்க்கனவே நினைத்தது போலவே காலை நான்கு மணிக்கே அடித்து எழுப்பி விட்டார்கள். இருந்தாலும் அசையவில்லை இதோ வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு தூங்கும் வேலையை தொடர்ந்தேன். கடைசியாக கையில் தண்ணி கொண்டுவந்து முகத்தில் தெளித்த பின்னர்தான் குளிர் தாங்காமல் எழுந்திருக்க வேண்டியதாயிற்று.

     முன்பெல்லாம் காலையில் சீக்கிரம் எழுந்துதான் வாசலில் கோலம போடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் இரவே வெகுநேரம் முழித்து இருந்து புத்தகத்தை பார்த்து போட்டுவிட்டு காலையில் சௌகரியாமாக எழுந்திருக்கும் வித்தையை எனதூரில் காண முடிந்தது.ஆனால் எங்கள் வீட்டில் காலையில் என்னை எழுப்பியது கோலத்துக்கு வண்ணம் கொடுக்குவாம்.

    முந்தைய நாள் இரவில் முழித்து இருந்து கோலம போட்டவர்கள் எல்லோரும் யாருக்கும் தெரிந்து இருக்காது என்ற நினைப்பில் ஏதோ இப்போதுதான் போட்டது போல பொங்கல் வேலையில் இருந்தார்கள். இன்னும் கொடுமை என்னவென்றால் இரவு போட்ட கோலத்துக்கு பாதுகாப்பாக பெரிய பெரிய கற்களை அதை சுற்றி வைத்து இருந்ததுதான்.யாரும் வாகனத்தை மேலே ஏற்றிவிட்டால்?. அதுவும் சாலையில் என்பதால் எத்தனை பேர் விழுந்தார்களோ அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

     நான் வெளியே வந்து பார்க்கும்போது போர்டிகோவில் மண்போட்டு பானைவைத்து எல்லாம் தயாராகி இருந்தது.எல்லோரும் அவர்களின் வேலையில் மும்மரமாக இருந்தார்கள். இப்போது போய் காபி கேட்டால் அடிவிழும் என்பதால் பொங்கல் பொங்கும்வரை வரை காத்திருந்து அப்புறம் சாமிகும்பிட்டு மாடியில் காக்கைக்கு முதலில் வைத்துவிட்டு பின் காத்திருந்த வேலையை முடித்தேன்.

      அதேநாள் காலையில் அறிவியல் வளர்ச்சியின் சாதனையை கண்கூடாக காணமுடிந்தது.சில வீடுகளில் காஸ் அடுப்பை வீட்டின் வாசலில் வைத்து பொங்கல் வைத்துக்கொண்டு இருந்தார்கள். என்னதான் இது முன்னரே பல இடங்களில் நடந்து இருந்தாலும் நான் நேரில் பார்ப்பது இதுதான் முதல்முறை. அடுத்த தடவை மின்அடுப்பு (induction) வைத்து பார்க்க நேர்ந்தாலும் ஆச்சர்யப்படமாட்டேன்.



     அடுத்து யோசிக்க வைத்த விசயம் கோலங்கள். முதலில் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்றுதான் நினைத்து இருந்தேன். என்னதான் கொஞ்சம் ENG. DWG ல் தேறியிருந்தாலும் சிலவற்றை நான் முயற்சித்தபோதுதான் உண்மை தெரிந்தது. முடிக்க முடியும்தான் ஆனால் அதற்கென்று போடுகிற முறையில் இருக்கும் ஒரு தரம் அழகு வராது. தனி தனியாக போட்டு எல்லாத்தையும் இணைக்க்முடியும் ஆனால் முறைப்படி போடுபவர்கள் ஒரே தொடர்ச்சியாக போடுவதால் இடையில் வெட்டு குத்துக்கள் நடந்த சுவடுகள் தெரியாமல் இருக்கும். கோலம எல்லோராலும்  அழகாக போடமுடியாது அது பெண்களாக இருந்தாலும் சரி.

                                     *********

        டெல்லி திரும்புவதுக்கு இரண்டு நாள் முன் இரவில் நடந்து வரும்போது கால் ஒரு இடத்தில் சருக்கென்று வழுக்கியது பின்திரும்பி மொபைல் வெளிச்சத்தில் என்னவென்று பார்த்தால் ஒரு பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. இதயம் சில வினாடிகள் துடிதததா தெரியவில்லை. நல்லவேளை பாம்பின் ஏதாவது ஒரு பகுதியை மிதிக்கவில்லை.

    அதாவது அதன் வால் பகுதியை மிதித்து இருந்தால் நிலமை வேறாக இருந்து இருக்கும். நடந்து வரும் அதிர்வுக்கு முதலிலேயே அது சுருண்டு இருந்திருக்கிறது. அதன் உடல் பகுதியினை மொத்தமாக சேர்த்து மிதித்து இருக்கிறேன். அதனால் உடனே ஒன்றும் செய்ய இயலாமல் நான் காலை எடுத்தபிறகு தலையை தூக்கி வலியால் ஓடி ஒரு ஓரத்தில் போய் மீண்டும் சுருண்டு நகர முடியாமல் கிடந்தது. அதற்கு என் எடை காரணமாக இருக்கலாம். கொஞ்ச நேரம் பார்த்துகொண்டு இருந்தேன் நகர்கிறதா என்று இல்லை அது இருந்த இடத்திலியே நெளிந்தது.பாவமாக இருந்தது. பெரிய பாம்பும் இல்லை. ஒரு இரண்டடி இருக்கும்.

     வீட்டில் போய் சொன்னால் அலறியடித்து காலை கழுவ சொல்லி ரத்தம் எங்கும் வருகிறதா என ஆள் ஆளுக்கு பார்த்தார்கள். எல்லா சோதனையும் முடிந்த பிறகு நான் எந்த காலால் பாம்பை மிதித்தேன் என்பதை மறந்துவிட்டேன் என்று சொல்ல எதிலும் விளையாட்டுத்தான் என செம கோபமாகி......... சரி அவை வேண்டாம். அப்புறம் அது என்ன பாம்பு என்று பார்த்து வரச்சொல்ல கிளம்பி போய் அந்த இடத்தில் லைட் அடித்து பார்க்க சில வினாடிகள் நின்ற இதயம இப்போது நிமிட கணக்கில் நின்றது. காரணம் அங்கு இரண்டு பெரிய பாம்புகள் அதனை சுற்றி இருந்ததுதான்.

     நான் லைட் அடித்ததும் அந்த வெளிச்சத்தில் வேகமாக நகர்ந்தது. நான் மிதித்த பாம்பு அந்த இடத்தை விட்டு நகராமல் அங்குதான் நெளித்து கொண்டு இருந்தது. அவ்வளவுதான் ஓடாத குறையாக வீடு வந்து சேர்ந்து நடந்ததை சொன்னால் முதலில் கொஞ்சம் அதிர்ச்சியானாலும் பின்னர் நான் கதைவிடுகிறேன் என நம்ப மறுத்தார்கள்.  வாருங்கள் போய் பார்க்கலாம் என்று சொல்ல வேண்டாம் நம்பிட்டோம் என்று முடித்தார்கள்.

     கொஞ்ச நேரம் கழித்து அங்கு என்ன நடந்தது என்பதை ஒருவழியாக அனுமானிக்க முடிந்து. அக்கம் பக்கம் எங்காவது வீடு கட்ட சுத்தம் செய்து இருப்பார்கள். அங்கு இருந்த ஒரு பாம்பு குடும்பம் இடத்தை காலி செய்துவிட்டு போகும்போதுதான் நான் அதனை மிதித்து இருக்கிறேன். மறுநாள் காலையில் போய் பார்த்தால் ஒன்றுமே அங்கு இல்லை. ஒருவேளை கொஞ்ச நேரம் கழித்து அது போய் இருக்கலாம். இல்லை காலையில் பூனைகள், பறவைகள் இவற்றிக்கு இரையாகி இருக்கலாம். என்னை பார்த்த  பாம்பு நாற்பது நாள் விரதம் இருந்து என்னை தேடி வருமா? அப்படி வரும்னு சொல்வாங்களேன்னு வீட்டில் கேட்க அப்படி வந்தால் உன்னுடைய முகவரி கொடுத்து பிளைட் ஏத்தி அனுப்பி வைக்கிறோம் என்றார்கள். 

                                           *******

      ஊருக்கு போனால் கண்டிப்பாக நான் போகும் இடம் பழைய புத்தக்கடை.  சிலவருடங்கள் முன்பே அதன் இருப்பிடம் அறிமுகமாகி இருந்தது. பிரபல VVR கடலை மிட்டாய்கடைக்கு இடது பக்கம் கொஞ்சமாக ஒரு இடத்தில  அலமாரிகள் நிறையா அடிக்கிய புத்தகங்களை கொண்டிருக்கும். ஒரு முதியவர்தான் இருப்பார். பழைய புத்த்கங்கள் மட்டுமே அங்கு இருக்கும் மற்றபடி பேப்பர்கள் அவர் சேகரித்து வைப்பது இல்லியாம்.அன்றைய தினத்துக்கு அரைப்புக்கு போட்டுவிடுவாரம். காரணம் கடைசியில் சொல்கிறேன்.

     ஒருவனின் சில ரகசியங்களை தெரிந்துகொள்ள அவனது குப்பை தொட்டியை பார்கவேண்டும் என்பார்கள். அதே போல ஒரு ஊரில் என்னமாதிரியான புத்த்கங்கள் படிக்கிறார்கள் என்பதை பழைய புத்தககடையின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி பார்த்தால் கோவில்பட்டியில் பெரும்பாலும் கல்வி சம்பந்தமான புத்தகங்கள்தான் அதிகம். காரணம் கல்லூரிகள் பள்ளிகள் அதிகம்.

     பெரியவரிடம் பாடப்புத்தகம் தவிர வேறுவகை கேட்க அலமாரியின் ஒரு வரிசையில்  அடுக்கில் இருந்த புத்தகத்தை மட்டும் காண்பித்து அதை எல்லாம் எடுத்து வெளியில் போட்டார். தேடியதில் பெரும்பாலும் பக்தி ததும்பும் புத்தகம்தான். இரண்டாவதாக யோகா செய்வது எப்படி என்ற மாதிரியானவை. நிறையா பேர் சும்மா இருக்கிறார்கள் போல. இறுதியாக சில நாஞ்சில் நாடன் சிறுகதைகள் உட்பட தமிழ் இலக்கண விளக்கங்கள் நிறைந்த புத்தகங்களோடு ஒரு எட்டு தேறியது. 

     அதில் திருவள்ளுவரும் சிவப்பிரகாசரும் என்ற புத்தகத்தை படிக்கும் முன்னரே சில விசயங்கள் தெரியவந்தது.  கோவில்பட்டி என்பது கோயிற்பட்டி என்றுதான் சொல்லி வரப்பட்டு இப்போது மாறியிருக்கிறது. பெரியமாற்றம் இல்லையென்றாலும் எனக்கு தெரியாத விசயம். அதுவும் இல்லாமல் திருவள்ளுவர் மன்றம் என்ற ஒன்று இருந்து இருக்கிறது நிறைய இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் இந்த மன்றத்தில் புலங்கபட்டு இருகின்றன என்பதை அதன் முதல் பக்கத்தில் ஒட்டியிருந்த அந்த மன்றத்தின் குறிப்பு சீட்டில் இருந்து தெரிந்து கொண்டேன்.      இப்போதும்  இருக்கிறதா தெரியவில்லை.


      கடைசியாக  எடுத்த புத்தகங்களை அங்கு வைத்தே புரட்டி கொண்டு இருக்க தம்பி கடையை மூடனும் என்று தயார் செய்தார் அந்த பெரியவர்.  துட்டை கொடுக்கும்போது இந்த மாதிரி புத்தகங்கள் வந்தால் எடுத்து வைங்கள் என்று சொல்ல போனமுறை வந்து இதைத்தான் சொல்லிட்டு போனே பார்த்தில்லே இவ்வளவுதான் வந்தது அப்படி வந்தால் நான் எடுத்துவைக்கிறேன் என்றார்.

      அவர் இந்த மாதிரியான புத்தகங்களையும், பள்ளி சம்பந்தமானவைகளையும் அரைப்புக்கு அனுப்பாமல் வைத்து இருப்பது யாராவது ஏழை மாணவர்கள் வந்து கேட்பார்களாம். கொடுக்கிற காசை வாங்கிக்கொண்டு அல்லது இலவசமாக கொடுத்துவிடுவார். ஆச்சர்யம் இன்னொன்று அவர் கடைக்கு பூட்டு போடுவதில்லை. காரணம் கேட்டேன் என்ன தம்பி கேள்வி இது இங்கு வந்து திருட என்ன இருக்கு என்றார்.என்னை பற்றி சரியாக தெரியவில்லை போலும்.  





  

இப்படியும் எழுதலாம்

         இதுவரை ஐம்பதுக்கும் மேலான சிறுகதைகள் எழுதி இருப்பேன். என்னை பொறுத்தவரையில் எல்லாமே ஒவ்வொரு மனநிலையில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடிப்படையாக வைத்து எழுதியவை. அதனால் எனக்கு எல்லாமே தேறும் வகைதான். ஆனால் வாசிப்பவர்களுக்கு எப்படி என்று இதுவரை யாரும் சொன்னதாக நினைவில்லை. அதற்காக எனது கதைகள் எல்லாம்  தமிழ் எழுத்தில் சிறந்தது என்றெல்லாம் சொல்ல வரவில்லை அடிக்க வருவார்கள். நான் என்ன மாதிரியான கதைகளை படிக்க நினைக்கிறன்றேனோ அதையே எழுதுகிறேன். அதிலே ஆர்வமும்கூட.

      படிப்பதைவிட தனது முயற்சியில் ஒன்றை எழுதிவிட்டு அது ஓரளவுக்கு தேறுகிற மாதிரி இருந்தால் அதில் இருக்கிற இன்பமே தனிதான். சில நேரங்களில் அனுபவித்தது உண்டு. இதில் இருந்து தெரிந்து கொண்ட ஒரு விசயம் எழுதுபவர் என்னதான் எதையுமே எதிர்பாராமல் எழுதுகிறார் என்றாலும் மற்றவர்களின் அங்கீகாரமும் பர்ரட்டுகளும் அவரின் வாருங்கால எழுத்துக்களுக்கு செய்யும் ஒரு சிறு உதவியாக இருக்கும் .ஆனால் மற்றவர்கள் தன் எழுத்தை அங்கிகரிக்க வேண்டும் என்பதற்காக எழுதினால் தொடர முடியாதுதான்.


      சரி விசயத்துக்கு வருகிறேன் இதுவரை நான் எழுதியவை எல்லாம் பெரும்பாலும் அறிவியல் புனைவுகளே. ஒரு அடிப்படையான அறிவியல் விசயம் அதனை விவரிக்க சில கற்பனை கதாப்பாத்திரங்கள் இப்படித்தான் என் கதைகள் நீளும். இந்த கற்பனைக்கு நான் எடுத்துக்கொள்ளும் இடங்கள் எல்லாமே உணமையானவை.அவை பெரும்பாலும் நான் வாழ்ந்து ரசித்த இடமாகவே இருக்கும்.சிலகதைகளில் வந்த பின்னுட்டங்கள் இது உண்மையா? கதையா? என்ற சந்தேகமே இந்த எனது முயற்சிக்கு வெற்றியும்கூட.

      இல்லாத ஒன்றை அப்படியே கற்பனையில் மனதில் விரிக்க நிறைய மெனக்கெட வேண்டும். ஆனால் ஏற்க்கனவே மனதில் ஆழமாக பதிந்த விசயங்களை அப்படியே எழுதும்போது கற்பனையில்  எழுதியதை விட கொஞ்சம் சிறப்பாகக்காட்டமுடியும் என்பது என் கருத்து. எல்லா கதைகளிலும் இந்த மாதிரி உண்மையானவைகளை சேர்த்து எழுதிவிட முடியாது. கதைக்கரு ஒத்துபோகவேண்டும்.

    நானும் சில கதைகளை இந்த வகையில் எழுதி இருக்கிறேன். இதுவரை படித்தவர்களுக்கு அது வெறும் என் கற்பனைதான்,ஆனால் இப்போது அதன் உண்மை உருவமும் உங்களுக்கு. இந்த விசயங்களை நான் எப்படி என் கதைகளோடு சேர்த்து இருக்கிறேன் என்பதற்கு ஆதாரமாய் சில...

ஒரு ரகசியம்     என்ற கதையில் வரும் கோயில் ..

   பல வருடங்களுக்கு முன் அந்த கோயில் மிக பிரபலமாக இருந்ததாம்....திருவிழாவின் போது யானை கட்டி தேர் இழுத்ததாக சொல்வார்கள் என் பாட்டி.
 
   நான் சிறு பிள்ளையில் பார்த்து இருக்கிறேன்.....மிகப்பெரிய தேர் ஊரின் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்......அந்த இடத்திற்கு தேரடி என்ற பெயர்.....மாலையில் பெரியவர்கள அமர்ந்து கதை பேசுவார்கள்..அதன் நான்கு சக்கரங்களுக்கு கிழே ஒரு பெரிய கல்லை வைத்து இருப்பார்கள்..எனக்கு தெரிந்து நான் பார்த்து அந்த கோயிலுக்கு விழாக்கள் நடந்ததாக இல்லை..அதற்கு பிறகு வந்த நாட்களில்..அந்த தேரின் பாகங்கள் ஊரில் உள்ளவர்களால் அடுப்பு எரிக்க பயன்படுத்தப்பட்டு...இப்போது அந்த கல் மட்டும் இருக்கின்றது..
கோயிலுக்கு முன்னால் கிடக்கும் கல் தூண்கள்
                                                                பெருமாள் கோயில்

   பெரிய கோயில், நிறைய சிலைகள் இருந்தன,ஒரு கட்டத்தில் எல்லாம் திருடுபோய் இன்று ஒரு சில மட்டுமே மிஞ்சி இருக்கின்றன..கோயிலின் கோபுரத்தை சுற்றியும் செதுக்கப்பட்டுள்ள சிற்ப்பங்கள் நேர்த்தியானவைகள்...உள்புறம் பெரிய தூண்கள் வைத்து கட்டப்பட்ட கோயில்..,...வெளியேயும் பெரிய தூண்கள் இருந்ததாகவும்...சில காரணங்களுக்காக அதை பிடுங்கி விட்டார்கள் என்றும் பாட்டி சொல்லி இருக்கிறார்கள்..

   இன்றும் அந்த கோயிலை சுற்றி பெரிய அளவிலான கல் தூண்கள் கிடக்கின்றன...அதை யாரும் பெயர்த்து எடுத்து கொண்டு போக முடியாது என்பதே அதற்கு காரணம்...

   மூலவர் பெருமாள்..சிறுவயதில் போய் இருக்கிறேன்...அதற்கு பிறகு அந்த கோயிலில் பூஜை நடந்ததாக நினைவில்லை....ஒரு நேரத்தில் கோயிலின் மீது இருந்த கலசம் காணமல் போனது..இப்போது இருப்பது வெறும் மூலவரும்,சில அழகான சிற்பங்களும்



தூண்கள்    கதையில்

     ஊரின் தொடக்கமே அந்த பெருமாள் கோயில்தான். அடுத்து வீடு ஆரம்பம் என்றால் கொஞ்ச தூரம் தள்ளிதான்.  அந்த கோயிலை சுற்றியும் பெரிய கல் தூண்கள் ஒழுங்கற்று கிடக்கும்.பழமை வாய்ந்த அந்த கோயிலில் இருந்து பிடுங்கி வெளியில் போடபட்டவை அவை..........
                                                           
                                                          கல் தூண்கள்

    .........தன்னிலை மறந்து மெல்ல தூணின் மீது சரிய அவள் சேலையில் கண்ணாடியில் பார்த்த அழகிய முகம், அதை கட்டி நடந்தவிதம் எல்லாம் ஒருமுறை வந்தபோனது. மெல்ல சிரிப்பது போன்ற உணர்வு கண்டிப்பாக சந்தோசத்தில் இல்லை. அதுதான் கடைசி. அவளது தலை சரிந்து கன்னம் அந்த கல்லில் ஒட்டியது.


தெரியலை..கதையில்

     ஆற்றை கடக்கும்போது தண்ணீர் முனங்கால் அளவிற்குத்தான் போனது... மழைக்காலம்...அந்த ஆறும் காட்டாறு..எப்போது மழை பெய்யுமோ அப்போதுதான் தண்ணீர் வரும்..அதுவும் சில நேரங்களில் அதிகமாக..குறைவாக..இப்படித்தான்.......முற்றிலும் மழை நின்றபிறகுதான் படிப்படியாக குறையும்..

                                                                            ஆறு 

     ஆற்றில் நீர் வந்தாலும் வராவிட்டாலும்  மிக பிடித்தமான இடம் அதுதான்..நிறைய பேசி இருக்கிறோம்..விளையாடியிருக்கிறோம்

நிஜம்கும் நிழல்கள்
  கதையில்

    ஊரின் தொடக்கம் முதல் கடைசிவரை ஒரே சாலை  அல்லது மண் பாதை. ஊரின் நுழைவு ஒரு பெரிய பெருமாள் கோயிலோடு ஆரம்பித்து அதே நேர்சாலையில் கொஞ்சதூரம் தள்ளி ஒரு சிவன் கோயிலோடு தொடரும் அந்த சாலையின் இருபுறங்களிலும்  வீடுகள் என அழகாக அமைத்திருக்கும் கிராமத்தை இன்னும் அழகாக்கும் விதத்தில் அதை சுற்றி வளைந்து ஓடியது ஒரு ஆறு.............
                                              ஆற்றங்கரையில் சிவன் கோயில்


                                                           கிணற்று உறை
                                              
 .........வழக்கமாக சந்திக்கும் இடமான ஆற்று வெள்ளத்தில் அடித்து வந்து அங்கு கொஞ்சம் ஒருபக்கமாக புரண்டு கிடந்த ஒரு கிணற்று உறையின மீது இருவரும் எதிர் எதிரே உட்க்கார்ந்து இருந்தார்கள். அந்த உரையின் உட்பக்கம் மண் நிரம்பி இருந்தது. இடுப்பு உயரம் இருக்கும். அவர்களுக்கு இதுதான் சந்தித்து பேசுவதற்க்கான இடம். அதுக்குள் உட்கார்ந்து கொண்டால் தூரத்தில் இருந்து பார்க்க ஒன்றும் தெரியாது. காதலின் தொடக்கத்தில் அதிக பேச்சுக்கள் இப்படித்தான் போனது


      இதோடு இன்னும் பல கதைகளில் சில இடங்களில் இந்த மாதிரியானவற்றை  வர்ணித்து கதையோடு சேர்த்து இருப்பேன். இவை இல்லாமல் நான் பார்த்து ஏன் இப்படி? என்று யோசித்ததையும் எழுத மறக்கவில்லை.

     இதில் என்ன இருக்கிறது பெரும்பாலும் எல்லோரும் இந்த மாதிரிதான் எழுதுவார்கள் என்றால் பதில் இல்லை. நான் எப்படி எழுதுகிறேன் என்பதைதான் சொல்லி இருக்கிறேன்.  அறிவியல் புனைவுகளுக்காக வெறுமனே கற்பனை செய்து எழுதியதும் உண்டு.

      எழுதுவதில் இன்பமும் ஆர்வமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சில விசயங்களை பார்க்கும்போது ஏன் எழுதுகிறோம் என்றும் யோசிப்பதோடு அதே யோசனை எழுதும் ஆர்வத்தையும் குறைத்து வெறுமனே படிக்கும் ஆர்வமே மிஞ்சுகிறது. எது எப்படியோ இன்னும் நிறைய எழுத வேண்டும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.  


இதுவரை ~ இனி....

   இதுவரை  ......

     இப்போதுதான் தொடங்கியதுபோல இருக்கிறது  வருடம் ஆனால் இன்றோடு முடிந்து புதிய வருடம் பிறக்க போகிறது. இந்த வருட தொடக்கம் என்று இல்லை எந்த வருட தொடக்கத்திலும் பொதுவாக எடுத்துகொள்ளும் உறுதிமொழிகள் எல்லாம் எடுக்கும் பழக்கம் இதுவரை இல்லை.எங்காவது தேதி எழுதும்போது வருடம் கொஞ்ச நாளைக்கு நினைவு இருந்தாலே போதும். மற்றபடி எல்லா நாலும் நன்னாலே.

    ஆனால் பொதுவாக எல்லோரும் புது வருடம் பிறக்கப்போகிறது என்பதுடன் அதோடு சில மாற்றங்களையும் எதிபார்ப்பது வழக்கம்தான். நான் இன்றையில் இருந்து இதை செய்வேன், அதை செய்ய மாட்டேன் இந்த மாதிரி. உணமையில் இப்படி செய்பவர்களில் 98% பேர் வெற்றி பெருவதில்லைதான். காரணம் பழக்கவழக்கம்  உடனே ஒரு புதியவருடத்திற்காக மாறிவிடுவது இல்லை என்பதே. மாற்றம் வேண்டுமானால் அதை இன்றுகூட வரவைக்கலாம்.

    சரி இந்த வருடம் எனது வலைப்பூ வாழ்க்கை எப்படி என்றால் சென்ற வருடம் போல இல்லைதான். ஆனால் சில முக்கியமான விஷயங்கள் நடந்தேறியது. கதைகளை தொகுத்து மின்புத்தமாக வெளியிட்டது, உருப்படியாக சில கதைகளை எழுதி திருப்தி அடைந்தது இந்த மாதிரி. வழக்கமான "என் கதையை படித்துவிட்டு கருத்துகள் சொல்ல மறுக்கிறார்கள்" என்ற புலம்பளோடு இந்த வருடமும் நிறைவடைகிறது.

   ஆனால் சொந்த வாழ்க்கையில் நிறையா மாற்றங்கள் எல்லாமே சந்தோசமானைவைகள் ஒரு சில தவிர்த்து. புதுவீடு கட்டியது, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது, ஒரே ஒருமுறை லேசான கால்வலிக்கு மருத்துவமனை சென்றது போன்ற பல சந்தோசங்கள பல நிறைந்தே இருந்தது. பொதுவாக எதுக்கும் பெரியதாக அலட்டிகொள்வதில்லை என்பதாலோ என்னவோ எதையுமே பெரிய விசயமாக எடுத்துக்கொண்டு வருத்தபடுவதிலை. காரணம் எதுக்குமே தீர்வு நம்மிடம இருந்தே வெளிப்பட வேண்டும் கட்டாயம் வெளிப்படும் எனக்காக கடவுளோ மற்றவர்களோ உதவி செய்வார்கள் என்று நினைக்கும்போதுதான் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் அதிகமாகி ஏமாற்றம் போன்ற பிரச்சினைகள் வருகிறது.


    அனேகமாக பிரச்சினைகள் வந்து இருந்தாலும் எனக்கும்சரி எல்லோர்க்குமே பொதுவான ஒரு விசயம் பிரச்சினைகள் இரண்டு விதம்  இயற்கையானவை அல்லது நம்மால் மற்றும் சகமனிதனால் நமக்கு வருபவை. முதல் வகையில் நோய் நொடிகளை சேர்த்து கொள்ளலாம். தகுந்த மருத்துவ உதவியை நாடினால் அதுவும் சுபமே. ஆனால் பெரிதும் பாதிக்கபடுவது மனிதனால் மனிதனுக்கு வரும் பிரச்சினைகள்.இதில் விஷயம் என்னவென்றால் நமக்குள்ளே பிரச்சினைகள் செய்துகொண்டு அதை தீர்க்க இல்லாத எல்லாம்வல்ல இறைவனை நாடுவதே.

      இந்த வகையான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வுதான். முடிந்தவரை மற்றவர்களிடத்தில் அன்பாக மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள். இப்படி செய்தாலே உலகத்தில் பாதி பிரச்சினைகள் முடிந்துவிடும்.சந்தேகம் என்றால் தனியாக உட்கார்ந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை வரிசையாக எழுதுங்கள் அதில் எத்தனை உங்களது எதிரிகள் என்று கருதப்படும் நபர்களால் அல்லது வேலை செய்யும் இடத்தில இருந்து வருகிறது என்று பாருங்கள்.

     இதை சரி செய்வதில் இருக்கும் பெரும் பிரச்சினை "சரி நான் மற்றவர்களிடத்தில் நல்லவிதத்தில் நடந்து கொள்கிறேன் ஆனால் மற்றவர்கள் ஏன் என்னிடத்தில் அப்படி இல்லை" என்று யோசிப்பதே. இதுதான் மாறுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் முட்டுக்கட்டை. அவளும் குப்பையை தெருவில்தான் கொட்டுகிறாள் நானும் அங்குதான் கொட்டுவேன் என்பவர்கள்தான் அதிகம் இருப்பார்கள்.  ஆனால் இப்படி இருப்பதில் ஒரே லாபம் மனதிருப்தி நான் நல்லவிதமாக இருக்கிறேன் என்ற திருப்தி மட்டும் மிஞ்சும். சிலருக்கு இது போதுமானதாக இருக்கும்.


    என்னைபொருத்தவரையில் அடித்து பிடித்து பணம் சம்பாரித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்பதில்லை. அன்றாடம் வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்து வாழ்க்கை சுபமாக கழிந்தாலே போதும்தான். வாழ்க்கையை வாழவேண்டும் அதுவும் அதன் போக்கிலேயே கட்டாயமாக இழுத்துக்கொண்டு திரியதேவை இல்லை. போதுமானவரை அன்போடு பழகி வருகின்ற வருடத்தில் பிறரிடம் இருந்து பிரச்சினைகள் வந்தாலும்கூட நம்மால் நமக்கு எதுவும் வராமல் பார்த்துகொண்டு வருடத்தை இனிதாக களிப்போம்.


   அதோடு இந்த வருடத்தில் சில விசயங்கள் "ஏன் இப்படி?" என்றிருந்தது. அதில் போனவருடமும் இந்தவருடமும் பொதுவாக இருப்பது என்னதான் கொட்டகொட்ட முழித்து படித்து கதைகளில் அறிவியல் சேர்த்து எழுதினாலும் படிக்க மாட்டிக்கிறார்கள் அதோடு ஒரு படம் சில வரிகள் கவிதை என்ற பெயரில் எழுதுவதையும், விழிப்புணர்வு பதிவு என்ற பெயரில் எழுதும் எழுத்துக்களைத்தான் ரசிக்கிறார்கள். என்ன காரணம் இதுவரை புரியாத ஒன்று. கொடுமை என்னவென்றால் இந்த விழிப்புணர்வு பதிவுதான் என்ன சொல்ல...எல்லாமே பொதுவான ஜனங்களுக்கு தெரிந்த விசயம்தான் அல்லது செய்திகளில் நாளிதழ்களில் வந்த விசயத்தை தனது கருத்தையும் நான்கு வரிகளாக சேர்த்து எழுதுகிறார்கள். கட்டாயம் இணையம் வந்து பதிவுகளை படிப்பவர்கள் செய்திகளை அறிந்து கொள்ளாமல் தூங்குவார்கள் என்பது போலதான் இருக்கும் அவர்களது எழுத்து.



    அடுத்து கோபம்வரும் விசயம் என்னவென்றால் இதை சொல்லும்முன் THE GRAND DESIGN புத்தகத்தில் படித்த ஒரு விசயத்தை சொல்கிறேன்.மத்திய ஆப்ரிக்காவில் வாழும் BOSHONGO இன மக்களிடையே ஒருகதை பழக்கத்தில் உண்டு.  தொடக்கத்தில் வெறுமனே மூன்று விசயங்கள்தான் இந்த பிரபஞ்சத்தில் இருந்ததாம். இருட்டு,தண்ணி, BUMBA எனும்  கடவுள். ஒருநாள் அந்த கடவுள் அதிக வயிற்றுவலி வர வாந்தி எடுக்கிறார் அதில் சூரியன் முதலில் வந்து அங்கிருந்த தண்ணியில் விழுகிறது. கொஞ்சநேரத்தில் அது உலர்ந்து கரைசேருகிறது.இன்னும் வலி நிக்காத அந்த கடவுள் தொடர்ந்து உவ்வே செய்ய மற்ற கொள்களான செவ்வாய்,புதன் எல்லாம் வரிசையாக வர அடுத்து வந்த உயிரினங்களை தொடர்ந்து கடைசியாக மனிதன் வந்து விழுகிறான்.

   இந்த விசயத்தை   இதுதான் இந்த முழு பிரபஞ்சம் உருவான unified Theory என்று சொன்னால் நம்புவீர்களா? இதே போல  சில படித்தவர்களே மூடநம்பிக்கைகளை வெளிப்படையாகவே எழுதி வருகிறார்கள். அவர்கள் இஷ்டம் எழுதட்டும் என்று இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கும் ஆதரவுதான் கோபத்துக்கு காரணம். ஒருவரை நீங்களே அதிகமாக ஊக்கப்டுத்தும்போது தனது வேலையில் அவர் மும்மரமாக இறங்குவார். அதோடு அந்த செயலுக்கு நீங்களும் உதவி போகிறீர்கள்.

   மூடநம்பிக்கையில் ஆவது ஒன்றுமில்லைதான். ஆனால் மக்களின் மனதில் அது அழமாக பதிந்து அகல மறுக்கும் ஒன்று. அதுக்குப்பிறகு நீங்கள் என்னதான் அவருக்கு அறிவியலை எளிமையாக கணிதம் கொண்டு விளக்கினாலும் இந்த பிரபஞ்சம் வாந்தி எடுக்கப்பட்டதுதான் என்பதே அவரது முடிவாய் இருக்கும். அந்த அளவு வலிமை வாய்ந்தது மூடநம்பிக்கைகள். 

    நான் சொல்லவருவது அதை எழுதுபவர்கள் அவர்களின் மன திருப்திக்காக எழுதட்டும் ஆனால் நீங்கள் அதை ஆராய்ந்து பார்த்துவிட்டு "அருமை, வாய்ப்பே இல்லை" போன்ற பின்னுட்டங்களை இடுங்கள். எதையும் முழுவதும் இல்லாவிட்டாலும் கொஞ்சம் அடிப்படையில் அறிவியல் கொண்டு யோசிக்கலாம். எல்லாமே சரியாக அறியப்படவேண்டியதுதான் ஆனால் அறிகின்ற விதம்தான் தவறாக இருக்க கூடாது.

      இந்த அறிவியல் காலத்திலும் அண்மையில் ஒரு பதிவு படிக்க நேர்ந்தது அதில் ஒரு எலியை தண்ணியில் இரண்டாக வெட்டினால்அதில் ஒன்று மிதக்கும் இன்னொரு பாகம் முங்குமாம்  இரண்டையும் எரித்து சாம்பலாகின பிறகு ஒன்றைவைத்து மார்பகத்தை பெரிதாக்கவும்,மற்றொன்றை வைத்து சிரிதாக்கவும் முடியும் என்ற அர்த்தத்தில் இருந்தது அது. இந்த விஷயத்திற்கும் நான் மேலே சொன்ன கதைக்கும் எதாவது வித்தியாசம் இருந்தால் சொல்லுங்கள். இரண்டுமே ஒரே எலி. முடிந்தவரை இந்த விளம்பரங்களை தவிர்க்கலாம் குவாண்டம் தத்துவத்தை விட இது வேகமாக பரவும் என்பது எல்லோர்க்கும் தெரிந்திருக்கும்.


      உங்கள் கண்முன் அறிவியல் விரிந்து கிடக்கிறது.  அனைத்தையுமே அதைகொண்டு பார்க்காவிட்டாலும் சில அடிப்படையான விசயங்களையாவது பார்த்து தேர்வு செய்துகொள்வது நல்லது.


     அடுத்து போனவருடத்தை விட இந்தவருடம் புத்தகவாசிப்பு என்னிடம் குறைந்தது. காரணம் இணையம்தான். ஆர்வம் அதிகம் இருந்தபோதும் பொழுது போக்கு அம்சங்கள் தன்பக்கம் இழுத்துக்கொண்டது. அதோடு இதுக்குமுன் இருந்தஇடம் புத்தக வாசிப்புக்கு துணையான ஒன்று. நடைபாதைகடையில் புத்தகங்கள மிக மலிவாக கிடைக்கும். ஒரு புத்தகம் நூறு ரூபாய். அதோடு படித்துவிட்டு திரும்பி கொடுத்தால் வாங்கும் புதிய புத்தகத்திற்கு 50% தள்ளுபடி வேறு. ஆனால் இப்போது இருக்கும் இடத்தில அதே புத்தகம் மூன்று மடங்கு விலையில் கிடைக்கிறது. வேறுவழியில்லாமல் வாங்கித்தான் ஆக வேண்டிய சூழ்நிலை.


                                                 *************  

     இந்த வருடத்தில் நடந்த சில அறிவியல் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம். இதே மாதிரி சுஜாதாவும் தனது கற்றதும் பெற்றதும் புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதி இருப்பார். அருமையான ஒன்று.அந்த அளவு சிறப்பாக விரிவாக இல்லாமல் பெரும்பாலும் வலைப்பூவில் எழுதிய போது குறிப்பெடுத்த விசயங்களையே சொல்கிறேன். இந்த விசயங்களை ஏற்க்கனவே கட்டுரையாக கதையாக எழுதி இருக்கிறேன்.


1) முதலில் செயற்கை மூளை தயாரிக்கும் முயற்சியில் ஒரு படிக்கல்லாய் சில நிமிடங்கள் மட்டும் நினைவு இருக்கும் விதத்தில் மூளையின் சிறு பகுதியை முயற்சித்து இருக்கிறார்கள். அதாவது நமது மூளையில் நினைவுபகுதியாக விளங்குவது Pre frontal cortex. இதில்தான் அன்றாடம் நடக்கும் செயல்கள் thalamocorical loop, reciprocol loop போன்றவைகளால் பதியப்பட்டு தேவையான் போது திரும்பி கிடைக்கும்படி இருக்கும்.இதை அடிப்படையாக வைத்து சில பாலிமர் பொருளோடு ப்ரோடின்களை ஒட்டவைத்து அதை ஒரு வட்டவடிவமாக அமைத்து அதில் தகவல் சேமிப்பு 12 நொடிகள் இருக்குமாறு சோதித்து இருக்கிறார்கள். இதுக்கு தகவல் கடத்த தேவையான நியூரான்கள் எலிகளிடம் இருந்து எடுக்கப்பட்டது.

2) அடுத்தவிசயமும் மூளையோடு சம்பந்தபட்டதுதான். விபத்தில் இதயகோளறு ஏற்ப்பட்டவ்ரின் மூளையை எடுத்து அதை MRI மற்றும் பலவிதமான ஆய்வுகளுக்கு உட்படுத்தி உண்மையான மனித மூளையின் வரைபடம் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள். இதுதான் முதன்முறை.

3) மனித இனத்தை அதிகம் பலிவாங்கிய நோய்களுள் ப்ளு காய்ச்சலும் ஒன்று. அதுக்கென சில மருந்துகள் இருந்தாலும் முழுதும் வீர்யம் மிக்கவைகளாக இல்லை. OXFORD UNIVERSITY யை சேர்ந்த விஞ்ஜானிகள்ஆய்வில் HINI, H3N2 போன்றவற்றின் பல்கிப்பெருக காரணமாக இருக்கும் இரண்டு ப்ரோடீன்களை அழிப்பதின் மூலம் அதை முழுமையாக தடுக்கலாம் என்பதை கண்டுபிடித்து இருந்தனர்.

4) இனிவரும் காலத்தில் மருத்துவ துறையில் முழுவதும் ஸ்டெம் செல்களின் ஆக்கிரமிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் தனியாக இதயத்தை ஸ்டெம் செல்களை கொண்டு வளர்த்து சாதனை செய்துவிட்டார்கள்.இதன்மூலம் இதய நோய் சம்பந்தபட்டவர்கள் கொஞ்சம் நிம்மதியடையாலம் வருங்காலத்தில்.

5) புதிய பதிவர்கள் அதிகம் வந்ததாலோ என்னவோ இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிகை இந்த வருடத்தில் இரண்டு பில்லியன்கள் ஆனதாக சொல்கிறார்கள்

6) இதுவரை பலமுறை பல் சோதனைகளை செய்ததில் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற ஐன்ஸ்டீன் தாத்தாவின் GENERAL RELATIVITY THEORY மீண்டுமொருமுறை நாசாவின் GRAVITY PROBE  - B என்ற செயற்கைகோளால் நிருபணம் செய்யபட்டுள்ளது.

7) அதே நேரத்தில் ஐன்ஸ்டீன் தத்துவத்துக்கு கொஞ்சம் திருத்தம் கொண்டுவரும் அளவுக்கு கிளம்பியது CERN அமைப்பு அறிவித்த ஒளியை மிஞ்சும் வேகம் கொண்ட NETRINO எனும் துகள். ஆனால் கடைசியில் அதில் இருந்த சிறு தவறுகளால் நிருபனமற்று போனது. அதில் இன்னும் நுட்பமான முடிவுகளை செய்யுமாறு ஹவ்கிங் போன்றவர்கள் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

8)    இதயம் பாதிப்புள்ளவர்கள் மாற்று சிகிச்சைக்கு அவர்களின் சொந்த ஸ்டெம் செல்கலையே பயன்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பதை கண்டுபிடித்து இருந்தார்கள். வேறொருவரின் தானம் இதுக்கு தேவையில்லை.

9)  குழந்தையின்மைக்கு முக்கிய ஒரு காரணமாக இருக்கும் ஆண்மலட்டுதன்மைக்கு முடிவாக செயற்கையாக விந்து அணுக்களை உருவாக்கி இருந்தார்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்த kyoto university ஐ சேர்ந்த அறிவியலர்கள்.

10) கடைசியாக  ஸ்டெம் செல்களை  வைத்து தனியாக உறுப்புகளை வளர வைக்க சோதனைகூடங்கள் இல்லாமல் ஒரு உயிரின் கருமுட்டையில் ஸ்டெம் செல்களை செலுத்தி அதை அதுனுல்லேயே முழுவதுமாக வளர வைக்கமுடியும் என்பதை நிருபித்து இருந்தார்கள். அதாவது மனித உறுப்புகளை உருவாக்க  ஸ்டெம் செல்களை பன்றியின் கருமுட்டையில் நுழைத்து அதை முழுவதும் வளரச் செய்யலாம் என்கிறார்கள்.   

     இவையெல்லாம் இந்த வருடத்தில் நடந்தேறிய நான் படித்த அறிவியல் விஷயங்கள். இதுதவிர பல அருமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடமும் நிறையா எதிர்பார்க்கலாம். முக்கியமாக நான் இயற்பியல் துறையில் எதிர்பார்ப்பது யாரவது இந்த unified theory யை உருவாக்கினால் பிறவிப்பயன் அடைந்த சந்தோசம் இருக்கும். குறைந்தது என் வாழ்நாளிலாவது கண்டுபிடித்தால் போதும்.

     இனி என்று பார்த்தால் முதல் பத்தியில் சொன்னது போல பெரியதாக எந்தொரு பெரிய உறுதிமொழிகளும் எடுத்துகொள்ளவிலை. வழக்கம்போல வாழ்க்கை போகின்ற போக்கில் வாழ்வதுதான எனக்கும் பிடிக்கும் அதையே செய்ய போகிறேன். பார்க்கலாம் என்ன நடகிறது என்று.

     சரி எதுஎப்படியோ இந்த புதுவருடம் எல்லோர்க்கும் இனிமையான ஒன்றாக அமையட்டும். அல்லது அதை அமைத்துவிடுங்கள் எல்லாம் உங்களிடம்தான் இருக்கிறது. எல்லோர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.