கதைசொல்லிகள்

   
    புத்தகக் கதைகள் வாசித்து அறியாத காலமது. படிக்கின்ற புத்தகங்கள் தவிரப் பக்கத்தில் உள்ள கடையில் சாமான் மடித்துக் கொடுக்கும் ஏதாவது ஒரு தாளில் உள்ளதை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தால் ஒழிய வேறேதும் அப்போதைக்கு வாசிக்க இருக்காது. அப்போதெல்லாம் வாசிக்கும் ஒருவித ஆசை இருந்தாதகக் கூட நினைவில்லை.

    அந்த நிலையில் வரமெனக் கிடைத்த ஒன்றுதான் எனது தெருவில் இருந்த வாயதன பாட்டிகள் சொல்லும் கதைகள். அவர்களாகச் சொல்வதில்லை நாம்தான் சொல்ல வைக்க வேண்டும். அதற்கும் நிறையா வழிமுறைகள் இருக்கவே செய்தன.

    அவர்கள் சொல்லும் கதைகளில் பெரும்பாலும் ராஜா,ராணி, அவர்களில் யாருக்காவது ஒருவருக்குப் பிடிக்காத சில எதிரிகள், அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் அல்லது என்ன செய்து தனது வாழ்வை வாழ்கிறார்கள் என்பதுதான் அதிகமாக இருக்கும். கொஞ்சம் அடர்ந்த காடு ஏதாவது மிருகம் எங்களைப் பயம் காட்ட அல்லது கதையில் விறுவிறுப்புக் கூட்ட அடிக்கடி வந்துபோகும்.

    கதையின் இறுதியில் ஏதாவது அறிவுரை இருக்கும். அம்மா சொல்வதைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்/ ஒழுங்கா படிக்க வேண்டும் . இல்லையென்றால் கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் மாதிரியாக நேரிடும் என்ற எடுத்துக்காட்டுப்பாடம் கிடைக்கும்.

    ஆச்சர்யமான ஒன்றென்றால் சில தொடர்கதைகளும் உண்டு. சில மணிநேரங்களாகச் சொல்லி நான்கு நாட்கள் வரையிலும் நீளும். ஒவ்வொருநாளின் கதைத் தொடக்கத்தின் போதும் ம்ம்ம் நேத்து எதுல விட்டேன் என்று கேட்டுவிட்டு நாங்கள் சொல்லும் இடத்தில் இருந்து அதே கதை மீண்டும் தொடங்கும் விதம் என எல்லாமே இப்போதும் ஒரு அருமையான நினைவாக இருக்கவே செய்கிறது. ஒருவேளை அந்த நினைவுக்காகத்தான் இதை எழுதுகிறேனா??

    அல்லது அந்த வயதில் என்னில் பல கேள்விகளையும் ஆர்வத்தையும் தூண்டிவிட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பாட்டிமார்களை நினைவு கூறவா? இந்த இரண்டையும் செய்யவே விளைகிறேன்.

    முதலில் எனது கதை சொல்லி பாட்டிகளை ஒரு சிறு அறிமுகம் செய்து எனது மனதையும் கொஞ்சம் கிளறி விட்டுக்கொள்கிறேன். மழைக்கு ஏங்கி நின்ற பயிர்களுக்கு மழை பொழிந்த பிறகு பயிரடிப்புச் செய்து மண்ணைக் கிளறதுவது போலதத்தானே இதுவும் அவ்வளவு சுகமானது இல்லியா?

     நான் அதிகம் கதைகேட்ட ஒரு பாட்டி என்றால் அது கோட்டூர் பாட்டி தான். அவர்களுடைய உண்மையான பெயர் இதுவரையிலும் எனக்குத்தெரியாது. எனக்கு மட்டுமில்லை ஊரில் அப்போது இருந்த பலருக்கும் அவருடைய பெயர் தெரிந்திருக்க வாய்பில்லை. காரணம் அப்போது அனைவரையும் அடைமொழி அல்லது பட்டப்பெயர் வைத்தே கூப்பிடுவது அல்லது அடையாளப்படுத்துவதுதான் வழக்கம். பட்டப்பெயர் என்றால் பெயருக்கேற்றபடி அது அவர்களுக்குக் கிடைத்த பட்டம் மாதிரியேதான் அவர்களும் அதைப் பாவித்து என்னைப் போன்ற சிறுவர்கள் உபோயோகித்தாலும் அவர்களிடத்தில் எந்தச் சலனமும் இருக்காது.

    அவர்களுக்கு அந்தப் பெயர் வந்த காரணம், அவர்கள் பக்கத்து ஊரான கோட்டூரில் இருந்து வந்து அந்த ஊரில் குடியேறியவர்கள். இந்த மாதிரி ஊரில் பலபேருக்குப் பெயரில்லாமல் அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த ஊரின் பெயரே அமைந்துவிடுவதுண்டு.

      இந்தப் பாட்டி எனது தெருவில் எனது வீட்டுக்கு அருகிலேயே முதல் வீட்டில் இருந்தார்கள். எனது வீடு தெருவைப் பார்த்தபடியிருக்கும். அந்தத் தெருவே எனது வீட்டின் வாசலில் இருந்து தொடங்கி ஒரு பிரதான தெருவோடு இணைவாதாக இருக்கும். தெருவின் இருபுறமும் வீடுகள் இருக்கும். அதில் முதல் வீடுதான் இவர்களுடையது.

        ஏதோ சில காரணங்களுக்காகத் தனியாகத்தான் ஒரு மண்வீட்டில் இருந்தார்கள். ஏனென்று புரிந்துகொள்ளும் வயதும் ஆர்வமும் அப்போதைக்கு இருக்கவில்லை. அதிக வயதானவர்கள். எத்தனை வயதென்று கேட்டால் அவர்களுக்குச் சொல்லத்தெரியாது. ஆனால் அவர்கள் வயதொத்தவர்களோடு இணைத்து நான் அவளை விட இத்தனை வருடம் சிறியவள்,பெரியவள் என்று தனது காலத்தை அறிந்து கொள்வார்கள். இல்லையென்றால் குத்துமாதிப்பாக ஒரு தோராய வயதைச் சொல்லுவார்கள். அதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருப்பதில்லை.

        இந்தப் பாட்டியும் இதே வகைதான். வயது தெரியாது. யாராவது காட்டுவேலைக்குக் கூப்பிட்டால் முடிந்தால் போவர்கள். முடியவில்லையென்றால் வழக்கம் போலக் கம்மங்கஞ்சி குடித்துவிட்டுத் திண்ணையில் படுக்கைதான். காதில் பெரிய பாமடம் போட்டிருப்பார்கள். கொஞ்ச காலம்வரை அது முழுதும் கட்டித்தங்கம் என்றே நினைத்திருந்தேன்.ஆனால் உண்மையில் அது அப்படியில்லை. அதற்குக் காரணமும் இருக்கவே செய்தது, அந்த அளவுக்குப் பாட்டியின் காது இழுத்து தோள்பட்டைவரைத் தொங்கும்

      இந்தப் பாமடம் எனும் அணிகலன் பற்றி எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியவில்லை. பெரும்பாலும் பாட்டிகள் அணியும் ஒரு அணிகலன். பெரிய அளவில் இருக்கும். பெரிய அளவென்றால கையை மடித்தால் உள்ளங்கை அளவுக்கு. மத்தியில் சதுரமாகவும் அதனைச்சுற்றி உருண்டை உருண்டையான கோலிக்குண்டுகள் போன்று ஒரு அமைப்பு. அப்போது பெரும்பாலான கொஞ்சம் வசதியுள்ள எல்லாப் பாட்டிகளும் இந்தப் பாமட பாக்கியத்தைப் பெற்றிருக்கவே செய்தார்கள்.

      எங்கள் வீட்டு வாசலுக்கு முன்னிருந்த இடத்தில்தான் நாங்கள் விளையாடுவோம். வேகின்ற வெயிலென்று சொல்லுவார்கள் அதென்னதென்று அறிய வயதென்பதால் எப்போதுமே ஒரே கூச்சலும் கும்மாளமாய் இருக்கும் அந்த இடத்தில். இது கோட்டூர் பாட்டியின் தூக்கத்துக்குப் பெரும் இடைஞ்சல்.

       அவர்கள் அடிக்கடி புலம்பும் வார்த்தைகள் “பள்ளிக்கூடம் விட்டாசுன்னா இந்தப் புள்ளக்காடு அநியாயம் தாங்க முடில தாயே” என்று எதிர்படும் யாராக இருந்தாலும் சொல்வார்கள். ஒருமுறை அப்படிப் பேயாக ஆடிக்கொண்டிருக்கும்போதுதான் இங்க வந்து உட்காருங்க நான் கதை சொல்கிறேன் என்ற குரல் கேட்டது.

     கொஞ்சப்பேர் பாட்டியை சுத்தி உட்கார்ந்தோம். சுவத்துல சஞ்சபடி காலை நீட்டிக்கொண்டு என்ன கதை சொல்லனும்னு சொல்லுங்க சொல்றேன் என்றார்கள்.

     எதாச்சும் ஒன்னு சொல்லுங்க என்று சொல்லியவர்களில் மொத்தம் மூன்று நான்கு பேர் மட்டுமே இருந்திருப்போம். மீதி அனைவரும் பாட்டியின் பேச்சுக்கு ஏமாறாதவர்கள் அப்போதைக்கு.

      பாட்டிக்கு கடாப்பல்லைத் தவிர வேறு பற்கள் இல்லாத பொக்கையான வாய். இதில் பொடிப்பழக்கம் வேறு. அவர்கள் கதை சொல்ல ஆரம்பிக்கும் முன்னாடி செய்கின்றன செய்கைகளையே ஒரு கதையாக எழுதாலம்.

     சொல்ல ஆரம்பித்தார்கள். முதலில் சொன்ன கதை, குழந்தையாகப் பிறந்த ராணியைக் காட்டில் கொண்டுபோய்க் கொன்றுவரச் சொல்ல, செல்பவன் அங்குக் காட்டில் இருக்கும் முனிவரிடம் கொடுத்துட்டு ஒரு கிளியை கொன்று அந்த ரத்தத்தை அரண்மனையில் வந்து காட்டிவிடுவான். அப்புறம் அந்த ராணி வளர்ந்து பெரியவளாகும் வேளையில் அந்த நாட்டில் பெரிய பஞ்சம் ஏற்பட்டு அனைவரும் அந்த முனிவரை நாடி காரணம் கேட்க, அவர் அந்தப் பெண்ணைக்காட்டி இவள் இந்த நாட்டுக்கு ராணியானால் எல்லாமே சரியாகிவிடும் என்று சொல்ல்வதைகேட்ட அந்த மன்னர் அப்படியே செய்யவதாக ஒப்புக்கொள்கிறார். உடனே நாடு செழிக்கிறது. கொஞ்ச நாள் கழித்து அந்த முனிவர் மன்னரிடம் சென்று அவள்தான் உங்களுடைய மகள், நீங்கள் கொல்லச் சொன்னவன் என்னிடம் கொடுத்தான். அவள் பாவம் பிடித்தவள் இல்லையென்பதை நீருபிக்கவே நான் இப்படிச் செய்தேன் என்று சொல்ல மன்னரும் வணங்கி தனது தவறுக்கு வருந்த, அதுக்குப்பிறகு நாடே சுபிட்சமாக இருந்ததாகக் கதை முடியும்.

       இங்கு நான் ஒரு பத்தியில் சொன்ன கதை பாட்டியினால் குறைந்தது சில மணி நேரங்கள் வரை சொல்லப்பட்டது எனக்கு. நிறைய வர்ணனைகள் அவர்களுடைய கதையில் இருக்கும். இடையிடையே எங்களை ஏமாற்ற அவ்வளவுதான் கதை முடிஞ்சது இத்தோட என்று சொல்லி விரட்ட முற்படுவார்கள். ஆர்வமாகக் கதை கேட்கும் நான் இது என்னாச்சு? அது என்னாச்சு என்று கேட்க கதை தொடரும். அதற்கு அவர்கள் சொல்லும் வசனம்” அய்யயோ இந்தப் புள்ளைங்ககிட்ட கதை ஆரம்பிச்சது தப்பால்ல போச்சி” இதுதான். ஆனாலும் ஒரு கதையையும் முடிக்காமல் விட்டதில்லை.

      தொடக்கத்தில் விடுமுறை நாட்களில் கேட்கத் தொடங்கிய பழக்கம் தினமும் அவர்களைத் தொந்தரவு செய்யும் அளவுக்குப் போனது. கொஞ்ச நாட்கள் சலிக்கலாமல் சொன்னார்கள் அதற்குபிறகு கதை தீர்ந்து போனதாகச் சொல்லி மறுத்தார்கள் அல்லது எனக்குத்தெரிந்த கதைகள் அனைத்தையும் சொல்லிவிட்டதாக விரட்டுவார்கள். கொஞ்சம் பாசமாகக் கெஞ்சினால் கண்டிப்பாகக் கதை கிடைக்கும் என்பதை அறிந்தவன் என்பதால் அதை உபோயோகித்துக் காரியம் சாதித்திருக்கிறேன்.

      எனது பாட்டியும் அவர்களும் கிட்ட தட்ட ஒரே வயதுடையவர்கள். நான் தொந்தரவு செய்வதை “அய்யயே என்னமா இந்தப் புள்ள இப்படிக் கத கதைன்னு பாட படுத்துது” என்று சொல்லும்போதேல்லாம், “நீயென்ன வெட்டியா முறிக்கிற கத சொல்ல வேண்டியதுதானே” என்ற பதில்தான் என் பாட்டியிடமிருந்து வரும்.

   அதற்கு  ”ஏன் உங்க பேரனுக்கு நீங்க சொன்னா என்ன?” என்ற கேள்விக்கு விடையிருக்காது. இருந்தாலும் எனது சொந்த பாட்டிகளிடம் இருந்து எந்தவொரு கதையும் இதுவரையில் கேட்டதில்லை. ஆனால் தாலாட்டு பாடுவதைக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை எங்கு இதைப் படித்தீர்கள் என்று கேட்டதற்கு “ ஆமா படிக்கிறோம், காதுவழி கேட்டதுதான்” என்ற பதில் வரும்.

       தாலாட்டை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால் அன்றாடம் நடப்பதைத்தான் கொஞ்சம் இழுத்து ராகமாகப் படிப்பார்கள். மாமா அதுகொண்டு வாரான், இது கொண்டு வாரான்,அழுகாம தூங்கு, யாரடிச்சா? மாமாட்ட சொல்லலாம் இந்த மாதிரி. ஆனால் நிகழ்வுகள் அனைத்தும் ஒரு தொடர்ச்சியாக வருவதுதான் இதன் சிறப்பு. சின்னக் குழந்தைக்கு எங்கே புரியப்போகிறது என்ற எண்ணத்தில் எந்தப் பாட்டியும் தாலாட்டில் பிசகு செய்வதில்லை. அதுவும் ஒரு கலை அவர்களுக்கு.

      இதே மாதிரிதான் கோட்டூர் பாட்டிக்கும். கதை சொல்லும்போது நாங்கள் எங்காவது பெராக்கு பார்த்தால் அவ்வளவுதான் கதை சொல்வதை நிறுத்திவிடுவார்கள். மீண்டும் நிலமைக்குக் கொண்டுவருவது மிகக் கடினமான விஷயம். சில நேரங்களில் எங்களிடமிருந்து தப்பிக்க இதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டதும் உண்டு.

     இப்படித் தொடங்கியதுதான் எனது கதைகளுக்குள்ளான பயணம். அப்போது எனக்கிருந்த கதைகேட்கும் ஆர்வம் இப்போது வாசிப்பதில் இருப்பதாக உணர்கிறேன். காரணம் பத்திலிருந்து பதினைந்து வயது வரைக்கும் இருக்கும் சிறுமைப் பருவமே ஒருவனுடைய பிற்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதை எங்கோ வாசித்திருக்கிறேன்.( நிகிதாவின் இளம்பருவம் என்ற நாவலில் என்ற நினைவு சரியாகத் தெரியவில்லை)

    பாட்டியின் ஒவ்வொரு முற்றுப்புள்ளிகளுக்கும் “ம்ம்ம்” கொட்டவேண்டும். கதையின் ஆர்வத்தில் அது தானாகவே வந்துவிழும். வந்த காலத்தில் அந்தப் பாட்டியைக் கதை கேட்டுத் தொந்தரவு செய்ததில் நான் மட்டுமே மிஞ்சியிருந்தேன். ஒருவனுக்காக அவர்கள் கதை சொல்லத் தயங்கியதில்லை. அனேகமாக அன்று தொடங்கிய தனிமையின் மீதான ஆசை இன்றும் தொடர்கிறது.

     தனிமைக்கே தனிமையேற்ப்பட்டால் தயங்காமல் என்னிடம் வரலாம் என்ற நிலமையில்தான் நான் இருந்திருக்கிறேன் புத்தகங்களோடும் கதைகளோடும். இந்தப் பழக்கம் எனது வாழ்க்கையை மாற்றிப்போட்டது என்று சொன்னால் அது தகும். போட்டபாதை மிக நல்ல பாதை. காரணம் நான் இன்னும் தனிமையை அதிகமாக விரும்புகிறேன். துளியும் வெறுக்கவில்லை. தனிமைக்கு நான், எனக்கு என்னுடைய புத்தகங்கள்.

      இப்போதைக்கு இந்த ஒரு கதை சொல்லியை மட்டும் சொல்லி முடிக்கிறேன். முடிந்தால் மீண்டுமொரு பதிவில் மற்றவர்களைப் பார்க்கலாம்.

     எனக்குள் இருக்கும் இன்னொரு மிகப்பெரிய கவலை, இந்த மாதிரியான பாட்டிகளிடம் இருக்கும் அர்த்தம் மிகுந்த கதைகள் அப்படியே செவி வழியாக மட்டும் கேட்டுணர்ந்து காலத்தின் பயணத்தில் யாரும் கேட்காமல் அல்லது சொல்ல வாய்ப்புக் கொடுக்காமல் காற்றில் கரைந்து விடுவதுதான். இது சாதாரண இழப்பில்லை என்பதை நீங்களும் பாட்டிகளிடம் கதை கேட்டிருந்தால் உணரமுடியும்.

      எப்படியோ, குறைந்த பட்சம் பாட்டியளவு கதை சொல்லாவிட்டாலும் உங்களின் குழந்தைகளுக்குக் கொஞ்சமமாவது கற்பனை எனும் உலகத்தை விரிக்க உதவுங்கள். அதன் முதல் சாவியே இந்த மாதிரியான சிறுவயது கதைகளில்தான் இருக்கிறது என்பது எனது அனுபவ அறிவு. அடுத்தச் சாவி புத்தக வாசிப்பு. முடிந்தவரை இந்த இரண்டில் ஒன்றாவது செய்ய முயற்சிக்கலாம்.





2 comments:

சுபத்ரா said...

நல்ல எழுத்து நடை :)

அந்தப் பாட்டிகிட்ட கெஞ்சிக் கெஞ்சிக் கதை கேட்டிருக்க. அவங்களும் சொல்லிருக்காங்க. ஆனா நான் உன்கிட்ட எத்தனை தடவை புக்ஸ் வேணும்னு சொல்லிக் கெஞ்சியிருப்பேன் :)) ஒரு புக்???

ஜெயசேகர் said...


அழகான எழுத்து நடை . வாழ்த்துகள்.
இதை படிக்கும் போது எனக்கும் சிறு வயது ஞாபகம் வராமல் இல்லை.

இனி வரும் காலங்களில் பாட்டிகளுக்கு கதை சொல்ல நேரம் இருக்குமா எனபது ஐயமே.