தேவமலர் - ஸெல்மா லாகர்லெவ் - தமிழில் க.நா.சு.

மீண்டுமொரு மொழிபெயர்ப்பு. இதை நாவல் என்பதா? இல்லை சிறுகதையா? என்பதை அவரவரின் மனதின் ரசனைக்கே விட்டுவிடுவதுதான் நல்லது. மயிலிறகால் வருடுவது போன்றொரு எழுத்து. மிக எளிமையான எழுத்துநடை.

சிறு வயதில் ஊருக்குள் கிறிஸ்துவ மதத்தினர் பிரசங்கம் செய்ய வருவார்கள்.அப்போதைக்கு அரைகிளாஸ் எனப்படும் பால்வாடி பள்ளியை அவர்கள் வைத்து நடத்திக்கொண்டிருந்தார்கள். அங்குதான் நான் படித்தேன். படித்தேன் என்பதைவிட உணவு உண்டுவிட்டு விளையாட்டு முடிந்தவுடன் தூக்கம் பின்பு வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கு சொல்லிக் கொடுப்பவர்களை அக்கா என்றுதான் அழைப்போம். அவர்கள் கன்னியாஸ்திரிகள்.அன்பை அப்படியே போதிப்பவர்கள். இப்போது இருப்பவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அந்த வயதில் நடந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. அத்தனை பிள்ளைகளையும் சமாளித்து கவனித்துக்கொண்டது அப்போது அவரது முகத்தில் ஒரு சலிப்போ கோபமோ நான் கண்டதே இல்லை.

இடையே கதை சொல்லுவார்கள். பெரும்பாலும் கிறிஸ்துவ நீதிக்கதைகள்தான். அதிலும் அன்புதான் இருக்கும். மிகச் சாதாரணமாக நீ அவனை அடித்தால் கடவுள் உன்னை தண்டிப்பார், அப்படி செய்யக்கூடாது. நல்ல பிள்ளையாக இருந்தால் கடவுளின் அன்பு உனக்கு எப்போதும் இருக்கும். இந்த மாதிரியான கதைகள் அந்த வயதுக்கு போதுமானதாக இருந்தது. சில நேரங்களில் பெரிய கதைகளாகவும் இருக்கும். அவர்கள் சொல்லும்விதைத்தான் நானிங்கு சொல்ல வருகிறேன். அந்த வயது மழலைக்கு எப்படி சொன்னால் புரியுமென்பதை நன்றாக உணர்ந்து அந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகிப்பார்கள்.

மயிலிறகால் வருடுவதுபோல இருந்ததால் சில பிள்ளைகள் தூங்கிவிடுவார்கள். அதற்கும் சளைக்காமல் அவர்களை எழுப்பி தனது கதையைத் தொடர்வார்கள். இறுதியில் சத்தமாக ஒரு கேள்வியைக் கேட்பார்கள். ஒரு சில பிள்ளைகள் வாய்க்கு வந்ததை கத்தும். அதிலும் சந்தோசமடைவார்கள்.

அந்த கனமில்லாத மென்மையான கதை சொல்லும் பாணி இந்த எழுத்தில் என்னால் உணரமுடிந்தது. இதுவும் நீதிக்கதைதான். ஆனால் மிக அழகாக எழுதப்பட்ட ஒன்று. அவ்வளவு எளிய நடை, எழுத்தின் மேன்மை என எல்லாமே இந்த எளிய கதையில் இருக்கிறது.

குறைந்த நேரத்தில் வாசித்து மனதுக்கு நிம்மதியும்,இன்பமும் தரக்கூடிய ஒரு எழுத்து.

இறைவன் என்பவன் மிகச் சாதாரணமாவான். அவனிடத்தில் எந்தவொரு பேதமுமில்லை. அவனுக்கு முன்னால் மதபோதகரும்,திருடனும் ஒன்றுதான். சொல்லப்போனால் மதபோதகருக்கு கிட்டாத ஒரு பாக்கியம் திருடனுக்கு இருந்திருக்கிறது. அதைக் காண செல்லும் மதபோதகர் அதிசயித்து இதல்லவா எனக்கு கிடைத்த பாக்கியம் என்றென்னி மண்டியிட்டு சரணடையும் வேளையில் அவருடன் வந்த சீடனின் நம்பிக்கையின்மை தேவனை சாத்தனாக மனதில் என்ன வைத்து அங்கு நடந்துகொண்டிருந்த அதிசயங்களை கன நேரத்தில் மறைந்துபோகச் செய்துவிடுகிறான். தேவனின் மீதுகொண்ட நம்பிக்கை யாருக்கு இருக்குமோ அவர்களுக்கு அந்த தேவவனம் மீண்டும் பூத்து குலுங்கும்.

தேவமலரை பறித்துக் கொண்டுபோய்க் கொடுத்தால் தேவவனத்தில் வாழும் ஒரு திருடனை மக்களோடு சேர்ந்து வாழ சம்மதிக்கும் ஒருவருக்காக,தனது சீடனின் தவற்றால் அழிந்துவரும் தேவ வனத்தின் ஓர் கடைசி பூவை பறிக்க கீழே விழும் அந்த போதகர் அந்த இடத்திலியே மரணத்தை தழுவுகிறார். ஆனால் அவரது கையில் கிழங்குகள் இருக்கின்றன அதனை அவரது தோட்டத்தில் நட்டுவைக்க, அவரால் உயிருக்கு உயிராக வளர்க்கப்பட்ட தோட்டத்தில் எல்லா செடிகளும் அழிந்து விட அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் முந்தைய நாளில் இந்த செடி மட்டும் அமோகமான மலர்களோடு பூத்துக்குழுங்குகிறது. ஆம் அதுதான் தேவமலர். அதனை வைத்து போதகர் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி அந்த திருடனை ஊருக்குள் கொண்டுவர சம்மதிக்கிறார்கள். தான் செய்த தவறுக்கு சீடன் அந்த திருடனின் குகையில் போய் வாழ்கிறான் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு தவம் செய்து மன்றாடுகிறான்.

எளிய கதையை எளிய நடையில் மிக அழகாக எழுதியிருக்கிறார்கள். க.நா.சு வின் மொழிபெயர்ப்பில் இந்த மாதிரியான எத்தனை படைப்புகளையும் வாசிக்கலாம். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய மிகச்சிறிய நூல்.






0 comments: