உருமாற்றம் - ஃப்ரன்ஸ் காஃப்கா

உருமாற்றம் - ஃப்ரன்ஸ் காஃப்கா (மொழிபெயர்ப்பு - வின்சென்ட்)
அன்றாட வாழ்வில் இரண்டு ஷிப்ட், மூன்று ஷிப்ட் வேலைக்குச் சென்று நமது குடும்பத்தையோ அல்லது நமது கனவையோ துரத்திக்கொண்டிருக்கும் நாம் திடீரென்று, சுருண்டு விழுந்து ஏதாவதுவொரு நோயால் படுத்துவிட்டால் அதற்கு அடுத்துவரும் நாட்கள் நமக்கு எப்படியிருக்கும் என்பதை என்றாவது நாம் யோசித்திருப்போமா? அப்படி யோசித்தால் அந்த நாட்கள் நீங்கள் நினைத்ததைவிட மிகக் கொடூரமாகவே இருக்குமென்பது என் கருத்து. 

என்னதான் ரத்த உறவுகள் தொடக்கத்தில் உதவிகள் செய்தாலும், ஒருகட்டத்தில் அவர்களின் மனதில் நாம் எங்கோ ஒரு மூலையில் பாரமாக அமைந்துவிட்டால் அங்கேயே தோற்றுப் போய்விடுகிறோம். அதுவும் இந்தக் காலத்தில் கேட்கவே வேண்டாம். என்னதான் நீங்கள் குடும்பத்துக்கு மாடாய் உழைத்து முன்னேற்றியிருந்தாலும், முடியாத நிலையில் கட்டிலில் படுத்திருக்கும் உங்களால் செய்ய முடிந்ததெல்லாம் மனதுக்குள் சிந்தனை மட்டுமே. அதுவும் உங்களைச்சுற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் எப்படி உங்களை நடத்துகிறார்கள் என்பதையே மனது அசைபோடும். அது திருப்தி ஏற்படுத்தாத பட்சத்தில் மிஞ்சுவது என்னவோ ஏமாற்றமே.இந்த ஏமாற்றமே உங்களுக்கு அதிகமான தொல்லைகளைக் கொண்டுவந்து சேர்க்கும். துன்பத்தை விடத் துன்பம் இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்ற பயமே மிகக் கொடுமையானது. 

உலகத்தை எதிர்த்துப் போராட வலுவில்லாத நிலையில் கட்டிலில் படுத்திருக்கும் உங்களுக்கிருக்கும் ஒரே ஆறுதல் மன நிம்மதி. அது கிடைப்பது உங்களின் சுற்றுப்புறத்திலிருந்து. அதுவே கொஞ்சம் சிக்கலாக இருந்துவிட்ட நிலையில் மரணத்தின் வேகம் வேகமாக உங்களை நெருங்காதா என்றே மனம் எண்ணத்தோன்றும். என்னதான் விழுந்து விழுந்து கவனித்தாலும் கதவை மூடின பிறகு அவர்கள் உங்களுக்குக் கேட்காது என நினைத்துப் பேசும் பேச்சில்தான் இருக்கிறது உண்மை நிலை.
சரி என்னதான் செய்யலாம் என்று யோசித்தால், ஒன்றும் செய்ய முடியாது. வருவது வந்தே தீரும். நன்றாக வாழும்வரை ஒரு நிறைவான வாழ்வை வாழ முயற்சி செய்வோம். அதுவே நம்மால் முடியும். காலமொரு எதிர்வரும் ட்ரெயின் போல, நீங்களே தடுத்தாலும் அது ஒரே சீராகப் போகுமிடம் போய்த்தான் தீரும். 

சரி இப்போது இந்தக் கதைக்கு வருவோம். ஒரு விற்பனைப் பிரநிதியான ஒருவன் காலையில் எழும்போது யாரும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத ஒரு பூச்சியாக மாறிவிடுகிறான். அது பூச்சியா? ஏதும் வேறொன்றா என அந்தக் கதையில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. அவன் கண்விழிக்கும்போதுதான் அந்த நிலையை அவன் உணர்கிறான். இருந்தும் அவனுக்கு இருக்கும் ஒரே பயம் மேலதிகாரியிடம் எப்படி இன்றைக்கு ஒரு நாள் விடுப்பு கேட்பது ? நம்புவாரா? என்ற மனா உளைச்சல் தான் இருக்குமே தவிரத் தன்னிலைக் குறித்தவொரு எந்த எண்ணமும் இருக்காது.
ஒன்றுமே முடியாத பட்சத்தில்தான் நேர்த்திருப்பது அவனுக்குத் தெரியவரும். பெரும் போராட்டத்திற்குப் பின் தனது நிலையைக் குடும்பத்துக்குத் தெரிவித்தவுடன் முதலில் துக்கமடையும் அவர்கள் சிறிது காலத்தில் வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். இத்தனைக்கும் இவன் ஈட்டும் வருமானத்தில்தான் குடும்பம் நடந்துவந்திருக்கிறது. இப்போது இவனுக்குத் திடீரென்று இப்பெடியொரு வித்தியாசமான நிலை. முதலில் நன்றாகப் பார்த்துத் தவறாமல் உணவளிக்கும் தங்கையும் ஒருகட்டத்தில் மாறுகிறாள்.
குடும்பமே சேர்ந்து அவன் ஏன் இங்கிருந்து நமக்குக் கஷ்டம் கொடுக்கிறான் என்று எண்ணத்தொடங்க செத்துமடிகிறான் அந்தப் பூச்சி மனிதன். அந்தக் குடும்பமும் பெருமூச்சியடைகிறது.
பல்வேறு மன எண்ணங்களைக் கிளறிவிடும் இந்த மாதிரியான படைப்புகள் வாசிக்கக் கிடைப்பது அரிது. அருமையான நூல். வாசிப்போடு நிறுத்தாமல் முடிந்த பிறகு கொஞ்சம் நம்மையும் அந்தக் கதாநாயகனோடு பொருத்தி யோசித்துப் பார்த்தால் ஆசிரியரின் எழுத்தின் வெற்றி முழுமையடையும்.


மீண்டும் சொல்கிறேன் கண்டிப்பாக வாசித்தே ஆகவேண்டிய நூல் இல்லை இல்லை இலக்கியம்.

சில விசயங்கள் -17

புத்தகங்களும் திரைப்படங்களும்.

The Alchemist வாசித்தேன். மிகையாகச் சொல்லியிருந்ததால் அதிக எதிர்பார்ப்பினுடே ஆரம்பித்தேன். எப்போதுமே ஒரு புதிய வாசிப்பை ஆரம்பிக்கும்போது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆரம்பிக்கவேண்டுமென்பதே எனது விருப்பமும் பழக்கமும். ஆனால் ஒரு சில இடங்களில் விதிவிலக்காக முன்னரே தேடிப்படிக்க மனசு அலைபாயும். அந்த வகையில் இதன் விமர்சனங்களை வாசித்ததால் வந்த விளைவே மேலே சொன்ன என்னுடைய எதிர்பார்ப்பு.

மிக எளிய நடையில் எழுதப்பட்ட ஒரு இளைஞனின் கனவை நனவாக்கும் பயணம் சார்ந்த கதை.

ஸ்பெயினில் தொடங்கும் அவனது பயணம் எகிப்துவரை சென்று அவனது கனவில் வரும் ஒரு புதையலை அடையவேண்டும். அந்தப் பயணத்தில் அவன் சந்திக்கும் இன்னல்கள்,வாழ்க்கைப் பாடங்கள், அவனால் சிலர்க்கு ஏற்படும் அதிர்ஷ்டங்கள்/உதவிகள் என அவனது பயணம் அப்படியே நமது கண்முன்னால் விரிகின்றது. போகிறபோக்கில் அந்தப் புதையலை அடைகிற வெறி அவனைவிட நமக்கு அதிகமாகத் தொற்றிக்கொள்வதுதான் கதையின் வெற்றி.

ஸ்பெயினில் இருந்து tangier எனும் ஊருக்குச் செல்கிறான். அது மொரோக்கோவில் இருக்கிறது. அங்கு ஆடுவிற்ற பணத்தை உதவி செய்வதுபோல் வந்து ஒருவன் பிடிங்கிவிட வேறுவழியில்லாமல் அங்குள்ள கண்ணாடிக் கடையில் வேலைக்குச் சேர்ந்து, இவனால் அந்த முதலாளிக்கு அதிக லாபம் கிடைக்க அவர் இவனுக்கு அதிகமாகப் பணம் கொடுக்கிறார். அந்தப் பணத்தை வைத்து அவன் இரண்டு முடிவுகளை எடுக்கலாம். ஒன்று அவன் இழந்த ஆடுகளை வாங்கிக்கொண்டு சொந்த ஊரில் பழையபடி தனது இடையன் வாழ்க்கையைத் தொடர்வது. மற்றொன்று அவனது கனவுப் பாயணத்தைத் தொடர்வது. அவன் இரண்டாவதையே தெரிந்தெடுத்துப் பயணத்தைத் தொடர்கிறான்.

இங்கு அவன் tangier ல் பணத்தை இழந்த தருணத்தை யோசிக்கும்போது, எனக்கும் அங்குச் சென்றிருந்தபோது நடந்தது நினைவில் வருகின்றது. தங்கியிருந்த ஓட்டலிருந்து வழக்கமாகச் சாப்பிடும் உணவகத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது இரண்டுபேர் வந்து வழிமறித்து அங்கு இப்படியிருக்கும்,அப்படியிருக்கும், பெண்கள் இருக்கிறார்கள் என்கிற தோணியில் ஆரம்பித்தவர்கள் நாங்கள் ஒத்துவராததால் ஒரு கட்டத்தில் கைகளைப் பிடித்துக் கட்டயாமாகப் பணம் கேட்கத் தொடங்கினர். அந்தச் சாலையில் யாரும் நடமாட்டமில்லாமல் இருந்ததால் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் நாங்கள் இருவரும் நின்றிருக்க எங்களைச் சுற்றி மூன்று பேர் வட்டமாக நின்றிருந்தனர்.

ஒருவன் சட்டைப்பையில் கையைவிட்டு ஏமாந்த நிலையில் அடுத்துப் பணத்தை எங்கு வைத்திருப்பான் என்ற யோசனையில் இறங்கினான். ஏற்கனவே எங்களுக்குச் சொல்லியிருந்தார்கள், வெளியே செல்லும்போது அதிக உள்ளூர் பணமும், பாஸ்போர்ட்ம் எடுத்துச் செல்ல வேண்டாமென்று. ஏதாவது பிரச்சினையென்றால் ஓட்டல் பெயரைச் சொல்லி இங்கு வந்துவிடுங்கள் அப்புறம் பார்த்துக் கொள்ளலாமென்று. எனவே சாப்பாட்டுக்குத் தேவையான திராம்ஸ் மட்டுமே எடுத்துச் சென்ற நாங்கள் வைத்திருந்தது என்னவோ கொஞ்சம் சில்லறைகளைத்தான்.

கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் கடந்த நிலையில் நாங்கள் சாப்பிட்ட உணவகத்திலிருந்து இரண்டுபேர் வெளியில் வந்து எங்களை மடக்கிப் பிடித்ததைப் பார்த்த நிலையில் ஏதோ அவர்கள் பாஷையில் கத்திக் கொண்டே எங்களை நோக்கி ஓடிவந்ததைக்கண்ட இந்த மூன்று பேர் நழுவ ஆரம்பித்தனர்.வந்தவர்கள் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள். தற்செயலாக வெளியில் வந்தவர்கள் நாங்கள் நிற்பதைப் பார்த்துவிட்டு வந்ததைச் சொன்னார்கள். இறுதியாக இந்த வழியை இனிமேல் உபோயோகிக்க வேண்டாமென்றும், கொஞ்சம் தொலைவாக இருந்தாலும் வேறொரு வழியைக் காட்டினார்கள். அந்த வழியில் சாதாரணமாக மக்கள் நடமாட்டம் இருந்தது.

இந்த ஒரு சம்பவம் தவிர்த்தால் tangier ஒரு அழகான நகரம். அங்குதான் ஹெர்குலஸ் குகை இருக்கிறது. Mediterranean கடலும் Atlantic கடலும் ஒன்றையொன்று சந்தித்தாலும் இரண்டும் கலக்காது. இரன்டும் வெவ்வேறு நிறத்திலிருக்கும்.அந்நாட்டு ராஜாவின் அரண்மனையும் அங்குதான் இருக்கிறது. இன்னும் நிறைய இடங்கள் இருக்கிறது பார்ப்பதற்கு ஆனால் மேலே சொன்னவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரைதையாக இருக்க வேண்டும். கதையில் வரும் அந்தப் பையன் கவனமில்லாமல் தான் கொண்டுவந்த துட்டை இழந்துவிட்டான்.

சரி கதைக்கு வருவோம், எகிப்து நோக்கி பயணிக்கும்போது இடையில் பல இன்னல்களைச் சந்திக்கிறான். சகாரா பாலைவனத்தில் தொடரும் அவர்களது பயணத்தில் சில அமானுஷ்யங்களும் நடக்கின்றன. ஒரு இடத்தில இயற்கையைக் கட்டுப்படுத்துவது போல வரும். இது நமது சித்தர்களை நினைவில் கொண்டுவந்தது. மனதைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் இயற்கையோடு பேசி புயலை வருவிப்பது கதையில் நடக்கும். இவனோடு சேர்ந்து பயணிக்கும் ஆங்கிலேயர்கள் உலோகத்தைத் தங்கமாக்கும் ரஸவாதியை காணச் செல்வதாகச் சொல்லி, அந்தக் கலையைப் பற்றி இவனுக்கு விளக்குவார்கள். அவனுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள அவர்கள் சந்திக்க நினைக்கும் ரஸவாதியை இவன் சந்திக்கும் நிலைமைக்கு ஆளாகி, அவர்களே இவனுக்கு உதவிகளும் செய்து சகுன அடிப்படையில் எப்படியோ எகிப்து சென்றடைந்து புதையலை அடைந்தானா? இல்லியா? என்பதுதான் மீதிக் கதை.

என்னைப் பொறுத்தவரை இதுவொரு pulb fiction. வாசித்துப்பாருங்கள். அருமையான ஒன்று.

அடுத்து டால்ஸ்டாய் எழுதிய மனத்தத்துவ / உளவியல் சார்ந்த எழுத்துக்கள் மிகவும் பிடித்தவொன்று. பைத்தியத்தின் நாட்குறிப்புகள், சூரத்தின் காஃபி கவுஸ், ரெண்டு கிழவர்க்ள, மூன்று கேள்விகள் போன்ற சிறிய படைப்புகளையே வாசித்தேன். மனதின் ஓட்டங்களை அப்படியே எழுத்தில் வார்ப்பது டால்ஸ்டாய் க்கு கைவந்த கலை. நிகழ்வினை எந்த வகையிலெல்லாம் மனது யோசிக்குமென்பதை அப்படியே எழுதுவது சாதாரணமான விசயமில்லை. முக்கியமாகப் பைத்தியக்காரனின் நாட்குறிப்பில் வரும் மரணம் பற்றிய சிந்தனைகள். சூரத்தின் காபி கவுஸ் நம்மூர் நீதிக்கதை போல இருந்தாலும் வாசிக்க நன்றாக இருக்கும். மூன்று கேள்விகளும் அப்படித்தான். விருப்பமிருந்தால் இவருடைய உளவியல் சார்ந்த படைப்புகளை வாசியுங்கள் அருமையாக இருக்கும்.

அடுத்து பார்த்த படங்களில் இரண்டை மட்டும் இங்கு எழுதுகிறேன். ஒன்று Twelve Monkeys. ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு science fiction படம் பார்க்க வேண்டுமென்றால் கண்டிப்பாக இதனைப் பார்க்கலாம். அருமையான படம். இப்போது இருக்கும் கொரோன தொற்றுதல் இப்படியும் முடியுமோ என்ற சிந்தனையைத் தூண்டும் படம்.எடுத்துக்காட்டாக இப்போது கொரோன வந்து உலகமே அழியும் தருவாயில் தப்பிப் பிழைத்த கொஞ்ச மக்கள் பூமிக்கடியில் வாழுகின்ற நிலையில், சுமார் 30 வருடம் கழிந்த பிறகு அப்போது இருக்கும் மருத்துவ விஞ்சானிகள் மருந்து கண்டுபிடித்துப் பூமியின் மேற்பரப்பில் வழக்கம்போல வாழ்வை வாழலாம் என்றெண்ணும்போது கோரோனோ வைப் பற்றிய முழுத்தகவலும் அவர்களுக்கு வேண்டும் பட்சத்தில், ஒருவனை வைரஸ் பாதித்த 2020 வருடத்திற்குக் காலப்பயணம் மூலம் அனுப்பி வைரஸைப் பற்றிய முழுத்தகவலையும் சேகரித்துக் கொண்டுவரும்படி செய்து பின் அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதுதான் கதை.

படத்தின் முடிவு வரும்வரை எனது மனதில் ஓடியது என்னவென்றால், 2035 வருடத்தில் இருப்பவர்கள் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகத் தொல்லையடைந்து எப்டியாவது ஒரு விதத்தில் மக்கள் தொகையைக் குறைக்க எண்ணி, ஒரு மனிதனை முன்னெய் அனுப்பி ஆட்கொல்லி வைரஸ்களைப் பரப்பி மக்கள் தொகையை அழிப்பதாக நினைத்திருந்தேன்.ஆனால் இறந்தகாலத்தை மாற்றமுடியாது என்ற விதி இருக்கிறது. ஒரு காட்சியில் தனது இறப்பை சிறுவயதாக இருக்கும் தானே சோகமான முகத்துடன் பார்த்து பரிதாபப்படும்படி இருப்பது அருமையான காட்சி.படம் சுமுகமான முடிவுதான்.கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

அடுத்து The prestige. நோலன் படம். ஏன்?ஏன்? என்ற கேள்விகளுக்குக் கடைசியில் வரிசையாகப் பதில்களை அடுக்கும் ஒரு கதையமைப்பு. உண்மையில் மேஜிக் செய்வதற்கு இவ்வளவு மெனக்கெடணுமா என்பதே இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் எனக்குத் தெரிய வந்தது. சுருக்கமாகச் சொன்னால் ஒருவரின் மேஜிக் நுணுக்கத்தைத் திருடுவது அல்லது எப்படியென அறிந்துகொள்வதில் ஏற்படும் போட்டிதான் கதை.

ஒரு மேடையில் தூரமாய் இருக்கும் இரண்டு தனித்தனி கதவுகளில், ஒரு வழியாகச் செல்லும் ஒருவன் அடுத்த நொடியில் மற்றொரு கதவின் வழியாக வெளியில் வருவது எல்லோராலும் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.இதனை அறிந்துகொள்ள மற்றொருவர் அலைந்து திரிந்து இறுதியில் டெஸ்லாவிடம் செல்கிறார். ஆம் அதே விஞ்சானிதான். அவரும் போராடி மனிதனை அப்படியே காப்பிச் செய்யும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி கொடுக்கிறார். அதில் செல்லும் ஒன்றின்மீது மின்சாரம் பாய்ந்து அடுத்த நொடியில் அதே போல மற்றொன்று வந்துவிடும். முதலில் தொப்பி,பூனை எனச் சோதித்துப் பார்க்க வெற்றியடையும் அதைவைத்து மேடைகளில் நிகழ்ச்சிகளைச் செய்கிறார்.


ஆனால் முதலில் செய்பவர் இந்தளவுக்கு மெனக்கெடவில்லை. அவர்களை ரெட்டையர்கள். இந்த இயந்திரத்தின் மூலம் வெளிவரும் மற்றொருவர் என்ன ஆகிறார்? அந்த இன்னொரு மனிதனை வெளிவந்தவுடன் தண்ணித்தொட்டியில் இறக்கி கொல்கிறான் மற்றொருவன். இதையெல்லாம் non linear ல் சொல்லி கடைசியில் முடிவை விளக்குவதில் அப்பாடா என்று தெளிகிறது. பாருங்கள் அருமையான படம்.