கதைசொல்லிகள்

   
    புத்தகக் கதைகள் வாசித்து அறியாத காலமது. படிக்கின்ற புத்தகங்கள் தவிரப் பக்கத்தில் உள்ள கடையில் சாமான் மடித்துக் கொடுக்கும் ஏதாவது ஒரு தாளில் உள்ளதை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தால் ஒழிய வேறேதும் அப்போதைக்கு வாசிக்க இருக்காது. அப்போதெல்லாம் வாசிக்கும் ஒருவித ஆசை இருந்தாதகக் கூட நினைவில்லை.

    அந்த நிலையில் வரமெனக் கிடைத்த ஒன்றுதான் எனது தெருவில் இருந்த வாயதன பாட்டிகள் சொல்லும் கதைகள். அவர்களாகச் சொல்வதில்லை நாம்தான் சொல்ல வைக்க வேண்டும். அதற்கும் நிறையா வழிமுறைகள் இருக்கவே செய்தன.

    அவர்கள் சொல்லும் கதைகளில் பெரும்பாலும் ராஜா,ராணி, அவர்களில் யாருக்காவது ஒருவருக்குப் பிடிக்காத சில எதிரிகள், அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் அல்லது என்ன செய்து தனது வாழ்வை வாழ்கிறார்கள் என்பதுதான் அதிகமாக இருக்கும். கொஞ்சம் அடர்ந்த காடு ஏதாவது மிருகம் எங்களைப் பயம் காட்ட அல்லது கதையில் விறுவிறுப்புக் கூட்ட அடிக்கடி வந்துபோகும்.

    கதையின் இறுதியில் ஏதாவது அறிவுரை இருக்கும். அம்மா சொல்வதைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்/ ஒழுங்கா படிக்க வேண்டும் . இல்லையென்றால் கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் மாதிரியாக நேரிடும் என்ற எடுத்துக்காட்டுப்பாடம் கிடைக்கும்.

    ஆச்சர்யமான ஒன்றென்றால் சில தொடர்கதைகளும் உண்டு. சில மணிநேரங்களாகச் சொல்லி நான்கு நாட்கள் வரையிலும் நீளும். ஒவ்வொருநாளின் கதைத் தொடக்கத்தின் போதும் ம்ம்ம் நேத்து எதுல விட்டேன் என்று கேட்டுவிட்டு நாங்கள் சொல்லும் இடத்தில் இருந்து அதே கதை மீண்டும் தொடங்கும் விதம் என எல்லாமே இப்போதும் ஒரு அருமையான நினைவாக இருக்கவே செய்கிறது. ஒருவேளை அந்த நினைவுக்காகத்தான் இதை எழுதுகிறேனா??

    அல்லது அந்த வயதில் என்னில் பல கேள்விகளையும் ஆர்வத்தையும் தூண்டிவிட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பாட்டிமார்களை நினைவு கூறவா? இந்த இரண்டையும் செய்யவே விளைகிறேன்.

    முதலில் எனது கதை சொல்லி பாட்டிகளை ஒரு சிறு அறிமுகம் செய்து எனது மனதையும் கொஞ்சம் கிளறி விட்டுக்கொள்கிறேன். மழைக்கு ஏங்கி நின்ற பயிர்களுக்கு மழை பொழிந்த பிறகு பயிரடிப்புச் செய்து மண்ணைக் கிளறதுவது போலதத்தானே இதுவும் அவ்வளவு சுகமானது இல்லியா?

     நான் அதிகம் கதைகேட்ட ஒரு பாட்டி என்றால் அது கோட்டூர் பாட்டி தான். அவர்களுடைய உண்மையான பெயர் இதுவரையிலும் எனக்குத்தெரியாது. எனக்கு மட்டுமில்லை ஊரில் அப்போது இருந்த பலருக்கும் அவருடைய பெயர் தெரிந்திருக்க வாய்பில்லை. காரணம் அப்போது அனைவரையும் அடைமொழி அல்லது பட்டப்பெயர் வைத்தே கூப்பிடுவது அல்லது அடையாளப்படுத்துவதுதான் வழக்கம். பட்டப்பெயர் என்றால் பெயருக்கேற்றபடி அது அவர்களுக்குக் கிடைத்த பட்டம் மாதிரியேதான் அவர்களும் அதைப் பாவித்து என்னைப் போன்ற சிறுவர்கள் உபோயோகித்தாலும் அவர்களிடத்தில் எந்தச் சலனமும் இருக்காது.

    அவர்களுக்கு அந்தப் பெயர் வந்த காரணம், அவர்கள் பக்கத்து ஊரான கோட்டூரில் இருந்து வந்து அந்த ஊரில் குடியேறியவர்கள். இந்த மாதிரி ஊரில் பலபேருக்குப் பெயரில்லாமல் அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த ஊரின் பெயரே அமைந்துவிடுவதுண்டு.

      இந்தப் பாட்டி எனது தெருவில் எனது வீட்டுக்கு அருகிலேயே முதல் வீட்டில் இருந்தார்கள். எனது வீடு தெருவைப் பார்த்தபடியிருக்கும். அந்தத் தெருவே எனது வீட்டின் வாசலில் இருந்து தொடங்கி ஒரு பிரதான தெருவோடு இணைவாதாக இருக்கும். தெருவின் இருபுறமும் வீடுகள் இருக்கும். அதில் முதல் வீடுதான் இவர்களுடையது.

        ஏதோ சில காரணங்களுக்காகத் தனியாகத்தான் ஒரு மண்வீட்டில் இருந்தார்கள். ஏனென்று புரிந்துகொள்ளும் வயதும் ஆர்வமும் அப்போதைக்கு இருக்கவில்லை. அதிக வயதானவர்கள். எத்தனை வயதென்று கேட்டால் அவர்களுக்குச் சொல்லத்தெரியாது. ஆனால் அவர்கள் வயதொத்தவர்களோடு இணைத்து நான் அவளை விட இத்தனை வருடம் சிறியவள்,பெரியவள் என்று தனது காலத்தை அறிந்து கொள்வார்கள். இல்லையென்றால் குத்துமாதிப்பாக ஒரு தோராய வயதைச் சொல்லுவார்கள். அதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருப்பதில்லை.

        இந்தப் பாட்டியும் இதே வகைதான். வயது தெரியாது. யாராவது காட்டுவேலைக்குக் கூப்பிட்டால் முடிந்தால் போவர்கள். முடியவில்லையென்றால் வழக்கம் போலக் கம்மங்கஞ்சி குடித்துவிட்டுத் திண்ணையில் படுக்கைதான். காதில் பெரிய பாமடம் போட்டிருப்பார்கள். கொஞ்ச காலம்வரை அது முழுதும் கட்டித்தங்கம் என்றே நினைத்திருந்தேன்.ஆனால் உண்மையில் அது அப்படியில்லை. அதற்குக் காரணமும் இருக்கவே செய்தது, அந்த அளவுக்குப் பாட்டியின் காது இழுத்து தோள்பட்டைவரைத் தொங்கும்

      இந்தப் பாமடம் எனும் அணிகலன் பற்றி எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியவில்லை. பெரும்பாலும் பாட்டிகள் அணியும் ஒரு அணிகலன். பெரிய அளவில் இருக்கும். பெரிய அளவென்றால கையை மடித்தால் உள்ளங்கை அளவுக்கு. மத்தியில் சதுரமாகவும் அதனைச்சுற்றி உருண்டை உருண்டையான கோலிக்குண்டுகள் போன்று ஒரு அமைப்பு. அப்போது பெரும்பாலான கொஞ்சம் வசதியுள்ள எல்லாப் பாட்டிகளும் இந்தப் பாமட பாக்கியத்தைப் பெற்றிருக்கவே செய்தார்கள்.

      எங்கள் வீட்டு வாசலுக்கு முன்னிருந்த இடத்தில்தான் நாங்கள் விளையாடுவோம். வேகின்ற வெயிலென்று சொல்லுவார்கள் அதென்னதென்று அறிய வயதென்பதால் எப்போதுமே ஒரே கூச்சலும் கும்மாளமாய் இருக்கும் அந்த இடத்தில். இது கோட்டூர் பாட்டியின் தூக்கத்துக்குப் பெரும் இடைஞ்சல்.

       அவர்கள் அடிக்கடி புலம்பும் வார்த்தைகள் “பள்ளிக்கூடம் விட்டாசுன்னா இந்தப் புள்ளக்காடு அநியாயம் தாங்க முடில தாயே” என்று எதிர்படும் யாராக இருந்தாலும் சொல்வார்கள். ஒருமுறை அப்படிப் பேயாக ஆடிக்கொண்டிருக்கும்போதுதான் இங்க வந்து உட்காருங்க நான் கதை சொல்கிறேன் என்ற குரல் கேட்டது.

     கொஞ்சப்பேர் பாட்டியை சுத்தி உட்கார்ந்தோம். சுவத்துல சஞ்சபடி காலை நீட்டிக்கொண்டு என்ன கதை சொல்லனும்னு சொல்லுங்க சொல்றேன் என்றார்கள்.

     எதாச்சும் ஒன்னு சொல்லுங்க என்று சொல்லியவர்களில் மொத்தம் மூன்று நான்கு பேர் மட்டுமே இருந்திருப்போம். மீதி அனைவரும் பாட்டியின் பேச்சுக்கு ஏமாறாதவர்கள் அப்போதைக்கு.

      பாட்டிக்கு கடாப்பல்லைத் தவிர வேறு பற்கள் இல்லாத பொக்கையான வாய். இதில் பொடிப்பழக்கம் வேறு. அவர்கள் கதை சொல்ல ஆரம்பிக்கும் முன்னாடி செய்கின்றன செய்கைகளையே ஒரு கதையாக எழுதாலம்.

     சொல்ல ஆரம்பித்தார்கள். முதலில் சொன்ன கதை, குழந்தையாகப் பிறந்த ராணியைக் காட்டில் கொண்டுபோய்க் கொன்றுவரச் சொல்ல, செல்பவன் அங்குக் காட்டில் இருக்கும் முனிவரிடம் கொடுத்துட்டு ஒரு கிளியை கொன்று அந்த ரத்தத்தை அரண்மனையில் வந்து காட்டிவிடுவான். அப்புறம் அந்த ராணி வளர்ந்து பெரியவளாகும் வேளையில் அந்த நாட்டில் பெரிய பஞ்சம் ஏற்பட்டு அனைவரும் அந்த முனிவரை நாடி காரணம் கேட்க, அவர் அந்தப் பெண்ணைக்காட்டி இவள் இந்த நாட்டுக்கு ராணியானால் எல்லாமே சரியாகிவிடும் என்று சொல்ல்வதைகேட்ட அந்த மன்னர் அப்படியே செய்யவதாக ஒப்புக்கொள்கிறார். உடனே நாடு செழிக்கிறது. கொஞ்ச நாள் கழித்து அந்த முனிவர் மன்னரிடம் சென்று அவள்தான் உங்களுடைய மகள், நீங்கள் கொல்லச் சொன்னவன் என்னிடம் கொடுத்தான். அவள் பாவம் பிடித்தவள் இல்லையென்பதை நீருபிக்கவே நான் இப்படிச் செய்தேன் என்று சொல்ல மன்னரும் வணங்கி தனது தவறுக்கு வருந்த, அதுக்குப்பிறகு நாடே சுபிட்சமாக இருந்ததாகக் கதை முடியும்.

       இங்கு நான் ஒரு பத்தியில் சொன்ன கதை பாட்டியினால் குறைந்தது சில மணி நேரங்கள் வரை சொல்லப்பட்டது எனக்கு. நிறைய வர்ணனைகள் அவர்களுடைய கதையில் இருக்கும். இடையிடையே எங்களை ஏமாற்ற அவ்வளவுதான் கதை முடிஞ்சது இத்தோட என்று சொல்லி விரட்ட முற்படுவார்கள். ஆர்வமாகக் கதை கேட்கும் நான் இது என்னாச்சு? அது என்னாச்சு என்று கேட்க கதை தொடரும். அதற்கு அவர்கள் சொல்லும் வசனம்” அய்யயோ இந்தப் புள்ளைங்ககிட்ட கதை ஆரம்பிச்சது தப்பால்ல போச்சி” இதுதான். ஆனாலும் ஒரு கதையையும் முடிக்காமல் விட்டதில்லை.

      தொடக்கத்தில் விடுமுறை நாட்களில் கேட்கத் தொடங்கிய பழக்கம் தினமும் அவர்களைத் தொந்தரவு செய்யும் அளவுக்குப் போனது. கொஞ்ச நாட்கள் சலிக்கலாமல் சொன்னார்கள் அதற்குபிறகு கதை தீர்ந்து போனதாகச் சொல்லி மறுத்தார்கள் அல்லது எனக்குத்தெரிந்த கதைகள் அனைத்தையும் சொல்லிவிட்டதாக விரட்டுவார்கள். கொஞ்சம் பாசமாகக் கெஞ்சினால் கண்டிப்பாகக் கதை கிடைக்கும் என்பதை அறிந்தவன் என்பதால் அதை உபோயோகித்துக் காரியம் சாதித்திருக்கிறேன்.

      எனது பாட்டியும் அவர்களும் கிட்ட தட்ட ஒரே வயதுடையவர்கள். நான் தொந்தரவு செய்வதை “அய்யயே என்னமா இந்தப் புள்ள இப்படிக் கத கதைன்னு பாட படுத்துது” என்று சொல்லும்போதேல்லாம், “நீயென்ன வெட்டியா முறிக்கிற கத சொல்ல வேண்டியதுதானே” என்ற பதில்தான் என் பாட்டியிடமிருந்து வரும்.

   அதற்கு  ”ஏன் உங்க பேரனுக்கு நீங்க சொன்னா என்ன?” என்ற கேள்விக்கு விடையிருக்காது. இருந்தாலும் எனது சொந்த பாட்டிகளிடம் இருந்து எந்தவொரு கதையும் இதுவரையில் கேட்டதில்லை. ஆனால் தாலாட்டு பாடுவதைக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை எங்கு இதைப் படித்தீர்கள் என்று கேட்டதற்கு “ ஆமா படிக்கிறோம், காதுவழி கேட்டதுதான்” என்ற பதில் வரும்.

       தாலாட்டை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால் அன்றாடம் நடப்பதைத்தான் கொஞ்சம் இழுத்து ராகமாகப் படிப்பார்கள். மாமா அதுகொண்டு வாரான், இது கொண்டு வாரான்,அழுகாம தூங்கு, யாரடிச்சா? மாமாட்ட சொல்லலாம் இந்த மாதிரி. ஆனால் நிகழ்வுகள் அனைத்தும் ஒரு தொடர்ச்சியாக வருவதுதான் இதன் சிறப்பு. சின்னக் குழந்தைக்கு எங்கே புரியப்போகிறது என்ற எண்ணத்தில் எந்தப் பாட்டியும் தாலாட்டில் பிசகு செய்வதில்லை. அதுவும் ஒரு கலை அவர்களுக்கு.

      இதே மாதிரிதான் கோட்டூர் பாட்டிக்கும். கதை சொல்லும்போது நாங்கள் எங்காவது பெராக்கு பார்த்தால் அவ்வளவுதான் கதை சொல்வதை நிறுத்திவிடுவார்கள். மீண்டும் நிலமைக்குக் கொண்டுவருவது மிகக் கடினமான விஷயம். சில நேரங்களில் எங்களிடமிருந்து தப்பிக்க இதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டதும் உண்டு.

     இப்படித் தொடங்கியதுதான் எனது கதைகளுக்குள்ளான பயணம். அப்போது எனக்கிருந்த கதைகேட்கும் ஆர்வம் இப்போது வாசிப்பதில் இருப்பதாக உணர்கிறேன். காரணம் பத்திலிருந்து பதினைந்து வயது வரைக்கும் இருக்கும் சிறுமைப் பருவமே ஒருவனுடைய பிற்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதை எங்கோ வாசித்திருக்கிறேன்.( நிகிதாவின் இளம்பருவம் என்ற நாவலில் என்ற நினைவு சரியாகத் தெரியவில்லை)

    பாட்டியின் ஒவ்வொரு முற்றுப்புள்ளிகளுக்கும் “ம்ம்ம்” கொட்டவேண்டும். கதையின் ஆர்வத்தில் அது தானாகவே வந்துவிழும். வந்த காலத்தில் அந்தப் பாட்டியைக் கதை கேட்டுத் தொந்தரவு செய்ததில் நான் மட்டுமே மிஞ்சியிருந்தேன். ஒருவனுக்காக அவர்கள் கதை சொல்லத் தயங்கியதில்லை. அனேகமாக அன்று தொடங்கிய தனிமையின் மீதான ஆசை இன்றும் தொடர்கிறது.

     தனிமைக்கே தனிமையேற்ப்பட்டால் தயங்காமல் என்னிடம் வரலாம் என்ற நிலமையில்தான் நான் இருந்திருக்கிறேன் புத்தகங்களோடும் கதைகளோடும். இந்தப் பழக்கம் எனது வாழ்க்கையை மாற்றிப்போட்டது என்று சொன்னால் அது தகும். போட்டபாதை மிக நல்ல பாதை. காரணம் நான் இன்னும் தனிமையை அதிகமாக விரும்புகிறேன். துளியும் வெறுக்கவில்லை. தனிமைக்கு நான், எனக்கு என்னுடைய புத்தகங்கள்.

      இப்போதைக்கு இந்த ஒரு கதை சொல்லியை மட்டும் சொல்லி முடிக்கிறேன். முடிந்தால் மீண்டுமொரு பதிவில் மற்றவர்களைப் பார்க்கலாம்.

     எனக்குள் இருக்கும் இன்னொரு மிகப்பெரிய கவலை, இந்த மாதிரியான பாட்டிகளிடம் இருக்கும் அர்த்தம் மிகுந்த கதைகள் அப்படியே செவி வழியாக மட்டும் கேட்டுணர்ந்து காலத்தின் பயணத்தில் யாரும் கேட்காமல் அல்லது சொல்ல வாய்ப்புக் கொடுக்காமல் காற்றில் கரைந்து விடுவதுதான். இது சாதாரண இழப்பில்லை என்பதை நீங்களும் பாட்டிகளிடம் கதை கேட்டிருந்தால் உணரமுடியும்.

      எப்படியோ, குறைந்த பட்சம் பாட்டியளவு கதை சொல்லாவிட்டாலும் உங்களின் குழந்தைகளுக்குக் கொஞ்சமமாவது கற்பனை எனும் உலகத்தை விரிக்க உதவுங்கள். அதன் முதல் சாவியே இந்த மாதிரியான சிறுவயது கதைகளில்தான் இருக்கிறது என்பது எனது அனுபவ அறிவு. அடுத்தச் சாவி புத்தக வாசிப்பு. முடிந்தவரை இந்த இரண்டில் ஒன்றாவது செய்ய முயற்சிக்கலாம்.





சில விசயங்கள் - 14

      எதிர்பாராமல் கிடைக்கின்ற அதிர்ஷ்டம் அல்லது வாய்ப்புகளின் சுகமே அலாதியானதுதான். அந்த வகையில் அண்மையில் எனக்குக் கிடைத்த ஒன்று உடையார். இதைப் பாதி அதிர்ஷ்டம், மீதி நல்ல வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். காரணம் இதுவரை நான் பாலகுமாரன் அவர்களின் எழுத்தை வாசித்தது கிடையாது. அதிகமாக அவரைப்பற்றியும் அவரது எழுத்துக்களைப் பற்றியும் படித்திருக்கிறேன். இருந்தாலும் அவரது படைப்பை இதுவரை வாசித்திருக்கவில்லை.

      லா.ச.ரா வின் எழுத்தைச் சில மாதங்களுக்கு முன் வாசிக்க ஆரம்பித்தபோது இருந்த மன நிலையை மீண்டும் என்னுள் ஏற்படுத்தியவர் பாலகுமாரன் அவர்கள். நான் முதன்முதலில் லா.ச.ரா வை படிக்கும்போது இதுவரையில் தமிழில் வாசித்தும், வாசிக்கும் பழக்கம் இருந்தும் இவரது படைப்பை எப்படித் தவறவிட்டுக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதே எனது வருத்தம். அந்த வருத்தம் அடுத்து வந்த காலத்தில் லா.ச.ரா வையே சுவாசித்ததில் போய்விட்டது. இப்போது பாலகுமாரன்.

      இந்த இருவருக்குமே பொதுவான ஒரு ஒற்றுமை இருக்கவே செய்கிறது. காரணம் லா.ச.ரா வை மனதில் வாங்கி வாசித்தவன். கிட்டதட்ட மனதை அவரின் எழுத்தில் அடகு வைத்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். அதே ஒரு உணர்வை மனதில் ஏற்படுத்தியது பாலகுமாரன் அவர்களின் எழுத்து. இந்தவகையான உணர்வு வாசிப்பவர்களின் மன நிலையைப் பொறுத்து மாறும் ஒன்றாக இருப்பினும், நான் உணர்ந்ததைத் தான் இங்கு எழுத முடியும்.

லா.ச.ரா.

    இவரது  எழுத்தென்றால், அதில் வரும் சூழ்நிலை அல்லது அதில் வாழும் கதாபாத்திரமாகவே மாறி, கதையோடு செல்வதுதான் எனது வாசிப்பு. சில சமயங்களில் இவரது எழுத்து புரியவில்லை என்பதை வாசிக்க நேர்ந்ததுண்டு. சற்று ஆச்சர்யமான விசயம் இந்த விளக்கமான, ஆத்மாத்தமான எழுத்தே மனதுக்குள் கிரகிக்கவில்லையெனில் வேறெது? என்ற கேள்வியே எனக்குள் மீதமிருந்தது.

      அத்தோடு நிற்காமல் ஏன் புரியாமல் போனது என்ற காரணத்தையும் அறிய முயன்றபோது என்னுள் எனக்கே பதிலளித்து என்னையே நான் தேற்றிக்கொண்ட பதில்: “வாசிப்பவர்கள் படைப்பை எழுதியவர் ஒருத்தர்(லா.ச.ரா), அதில் வாழ்பவர்கள் சிலர், அதைப் படிப்பவன் நான்” என்று இருப்பதே காரணம். ஆனால் யாரொருவர் இதில் இரண்டைத் தவிர்த்து “நான் வாசிக்கிறேன் அதனால் அந்தப் படைப்போடு ஒத்துப்போய் மனதளவில் சிலமணிநேரங்கள் அதாகவே வாழ்கின்ற நிலையில் அவருக்குப் புரியாததென்று ஏதும் மிஞ்சியிருக்க வாய்ப்பேயில்லை.

இலக்கியமென்பதும் இதுதானே(இந்த உணர்வு) இல்லியா?

     இப்போதெல்லாம் இதுதான் இலக்கியம், இது இலக்கியத்தில் சேராது என்ற செய்தியை படிக்கும்போதே ஏதோவொரு சகிக்காத உணர்வுதான் எழுகிறது. எப்படி இவர்களால் இலக்கியமென்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடிகிறது என்ற கேள்வி என்னுள் இன்னமும் இருக்கிறது.

         இதே வகையில் சில கேள்விகளும் பல வருடங்ககளாகத் தேங்கி நிற்கின்றன. அவற்றில் சிலவற்றை நான் இங்குச் சொல்வதின் மூலம் என்னுள் இலக்கியமென்பது எந்த வகையில் புரிந்ததாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
1.    கடவுள் இருக்கிறாரா? இருந்தால் எப்படித் தெரியும் அல்லது எப்படி உணரமுடிகிறது அந்த உணர்வை எனக்கும் விளக்க முடியுமா?
2.    மற்ற உணவுகளையாவது ஓரளவு விளக்கிவிட முடியும், இந்தக் காதல் என்றால் எப்படி இருக்கும்? மனதில் அதன் பிம்பம் என்ன என்பதைக் கொஞ்சம் சொன்னால் என்னுடைய பல கேள்விகளுக்கான விடை இதிலேயே அடங்கிக் கிடக்கின்றன.

        இந்தக் கேள்விகளுக்கு என்னைத் திருப்திபடுத்தும் வகையில் பதிலளித்துவிட்டால் அவர்கள் இலக்கியமென்று எனது எழுத்தைச் சொன்னால் கூட நான் நம்பத்தாயர்
.
      இலக்கியமென்பது வாழும் வாழ்க்கையின் சூழ்நிலை சார்ந்த தன்மையின் வெளிப்பாடோ அல்லது மொழி சார்ந்த அல்லது அதன் கலாச்சர தாக்கத்தின் வெளிப்பாடக இருக்கலாம் என்ற கருத்து இலக்கியமென்ற முடிவில்லா புத்தகத்துக்கு ஒரு பத்தியாகக் கொள்ளலாம்.

சரி விடுங்கள் கொஞ்சம் தடம் மாறிவிட்டது இல்லையா...? இதை மற்றோர் தனிப்பிரிவாகப் பார்க்கலாம். இப்போது பழைய தடத்திற்கு வருகிறேன்.

          கடைசியாக மனம் முழுதும் லா.ச.ரா வும் தமிழில் வாசிக்க வேண்டிய சில படைப்புகளைத் தேடித்தேடி வாசித்துக்கொண்டும் இருந்த ஒரு தருணத்தில், தாம்பரத்தில் ஒரு பழைய புத்தகக் கடையில் “உடையார் பாகம்-1” என்று கையினால் எழுதப்பட்ட பதிகப்பகத்தார் வெளியீடு இல்லாத ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். எப்போது அந்தப் பக்கம் போனாலும் எதவாது உபோயோகமான ஆங்கிலப் புத்தகங்கள் அந்தக் கடையில் கிடைக்கும் என்பதற்காகவே அந்தக் கடையில் சிறிது நேரம் செலவிடுவது எனது வழக்கம்.

      கையில் எடுத்தபிறகுதான் தெரிந்தது அந்தப் புத்தகத்துக்குப் பின்னால் அதனுடைய மற்ற பாகங்கள் இருந்தன. அதாவது உடையார் பாகம்-2, & 3 & 5 ஏனோ நான்காம் பாகம் இல்லை. கொஞ்சம் முன்னுரையில் வாசித்ததில், தஞ்சை பெரியகோவில் மற்றும் இதை இன்னும் பெரிய அளவில் எழுதப் போவதாகப் பாலகுமாரன் அவர்கள் சொன்னது அதற்குச் சான்றாக அங்கு அதே படைப்பின் பல தொகுதிகளைப் பார்த்தது போன்றவைகளே அந்தப் புத்தகத்தை ஒருமுறை வாசிக்கத் தூண்டியது.

        ஒரே மூச்சில் வாசித்தேன். என்னுடைய பழக்கமா? அல்லது அந்ததந்த படைப்பின் தாக்கமா? என்றெல்லாம் எனக்குத்தெரியாது. சில படைப்புகளையே இந்த மாதிரி வாசித்ததுண்டு. லா.ச.ரா. வின் அபிதா, சிந்தாநதி, பாற்கடல் மற்றும் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் போன்றவைகள்.

       சிலமணி நேரம் பண்டையத் தமிழ்ச்  சமூகத்தில் வாழ்ந்தேன் என்ற உணர்வை என்னுள் விட்டுச் சென்ற ஒரு படைப்பு. கனமான புத்தகம் வாசிக்க வாசிக்க அந்தக் கனம் மனதில் ஏறிவிடுவதுதான் அதன் சிறப்பு.

      முடித்தபிறகு நான் அறிந்து கொண்டதெல்லாம் ராஜராஜ மன்னர் தஞ்சை பெரியகோவிலை கட்டினான் என்பது மிகத்தவறு கட்டினார் என்பதே சரியான ஒன்று. இதன் அர்த்தம் முழுதும் புரிய நீங்களும் என்னைப்போலப் பாலகுமாரனின் எழுத்தின் மூலம் அந்த மன்னரின் ஆட்சியில் சிலமணி நேரமாவது ஒரு சாதாரணமான குடிமகனாக வாழ்ந்து பார்க்க வேண்டும். அல்லது என்ன நடக்கிறதென்பதைத் தூரத்தில் நின்றுகொண்டு வேடிக்கையாவது பார்த்திருக்க வேண்டும்.

         மீண்டும் அதே பழைய கடைக்குச் சென்று மற்ற தொகுதிகளைக் குறைந்த விலைக்கு வாங்கும் எண்ணம் மனதில் துளியும் இல்லாமல் போக, அதன் முழுத்தொகுதியும் கிடைக்கிறது என்பதை அறிந்தேன். என்னைப் பொறுத்தவரையில் கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தக வரிசையில் இதுவும் இருக்கிறது.

இப்போது பாலகுமாரனின் பிற எழுத்துக்களையும் வாசிக்கிறேன்.

      என்னுள், வாசிப்பென்றால் வெறுமனே பக்கங்களை வேகமாகப் பொழுதுபோக்கிற்காகப் புரட்டுவது இல்லையென்பதை உணர்த்தியவர் லா.ச.ரா. எழுத்தின் தாக்கம் மனதில் வின் வின்னென்று இருக்கவேண்டுமேன்பார். நெருப்பு என்றால் வாய் சுட வேண்டுமென்பார். ஆம் எனக்கும் சுட்டது. அந்தவொரு மன நிலையைத் தனது எழுத்தின் மூலம் உருவாக்கிய பின்னர், மற்ற படைப்புகளை உள்வாங்கிக் கிரகித்துச் சந்தோசிப்பதில் எந்தவொரு தேக்கமும் இருக்கப் போவதில்லை.

எனக்குமில்லைதான். சந்தோசத்தைப் பகிரும் ஒரு  நிகழ்வுதான் நீங்கள் மேலே வாசித்தது. வேறொன்றுமில்லை.