சில விசயங்கள் -17

புத்தகங்களும் திரைப்படங்களும்.

The Alchemist வாசித்தேன். மிகையாகச் சொல்லியிருந்ததால் அதிக எதிர்பார்ப்பினுடே ஆரம்பித்தேன். எப்போதுமே ஒரு புதிய வாசிப்பை ஆரம்பிக்கும்போது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆரம்பிக்கவேண்டுமென்பதே எனது விருப்பமும் பழக்கமும். ஆனால் ஒரு சில இடங்களில் விதிவிலக்காக முன்னரே தேடிப்படிக்க மனசு அலைபாயும். அந்த வகையில் இதன் விமர்சனங்களை வாசித்ததால் வந்த விளைவே மேலே சொன்ன என்னுடைய எதிர்பார்ப்பு.

மிக எளிய நடையில் எழுதப்பட்ட ஒரு இளைஞனின் கனவை நனவாக்கும் பயணம் சார்ந்த கதை.

ஸ்பெயினில் தொடங்கும் அவனது பயணம் எகிப்துவரை சென்று அவனது கனவில் வரும் ஒரு புதையலை அடையவேண்டும். அந்தப் பயணத்தில் அவன் சந்திக்கும் இன்னல்கள்,வாழ்க்கைப் பாடங்கள், அவனால் சிலர்க்கு ஏற்படும் அதிர்ஷ்டங்கள்/உதவிகள் என அவனது பயணம் அப்படியே நமது கண்முன்னால் விரிகின்றது. போகிறபோக்கில் அந்தப் புதையலை அடைகிற வெறி அவனைவிட நமக்கு அதிகமாகத் தொற்றிக்கொள்வதுதான் கதையின் வெற்றி.

ஸ்பெயினில் இருந்து tangier எனும் ஊருக்குச் செல்கிறான். அது மொரோக்கோவில் இருக்கிறது. அங்கு ஆடுவிற்ற பணத்தை உதவி செய்வதுபோல் வந்து ஒருவன் பிடிங்கிவிட வேறுவழியில்லாமல் அங்குள்ள கண்ணாடிக் கடையில் வேலைக்குச் சேர்ந்து, இவனால் அந்த முதலாளிக்கு அதிக லாபம் கிடைக்க அவர் இவனுக்கு அதிகமாகப் பணம் கொடுக்கிறார். அந்தப் பணத்தை வைத்து அவன் இரண்டு முடிவுகளை எடுக்கலாம். ஒன்று அவன் இழந்த ஆடுகளை வாங்கிக்கொண்டு சொந்த ஊரில் பழையபடி தனது இடையன் வாழ்க்கையைத் தொடர்வது. மற்றொன்று அவனது கனவுப் பாயணத்தைத் தொடர்வது. அவன் இரண்டாவதையே தெரிந்தெடுத்துப் பயணத்தைத் தொடர்கிறான்.

இங்கு அவன் tangier ல் பணத்தை இழந்த தருணத்தை யோசிக்கும்போது, எனக்கும் அங்குச் சென்றிருந்தபோது நடந்தது நினைவில் வருகின்றது. தங்கியிருந்த ஓட்டலிருந்து வழக்கமாகச் சாப்பிடும் உணவகத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது இரண்டுபேர் வந்து வழிமறித்து அங்கு இப்படியிருக்கும்,அப்படியிருக்கும், பெண்கள் இருக்கிறார்கள் என்கிற தோணியில் ஆரம்பித்தவர்கள் நாங்கள் ஒத்துவராததால் ஒரு கட்டத்தில் கைகளைப் பிடித்துக் கட்டயாமாகப் பணம் கேட்கத் தொடங்கினர். அந்தச் சாலையில் யாரும் நடமாட்டமில்லாமல் இருந்ததால் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் நாங்கள் இருவரும் நின்றிருக்க எங்களைச் சுற்றி மூன்று பேர் வட்டமாக நின்றிருந்தனர்.

ஒருவன் சட்டைப்பையில் கையைவிட்டு ஏமாந்த நிலையில் அடுத்துப் பணத்தை எங்கு வைத்திருப்பான் என்ற யோசனையில் இறங்கினான். ஏற்கனவே எங்களுக்குச் சொல்லியிருந்தார்கள், வெளியே செல்லும்போது அதிக உள்ளூர் பணமும், பாஸ்போர்ட்ம் எடுத்துச் செல்ல வேண்டாமென்று. ஏதாவது பிரச்சினையென்றால் ஓட்டல் பெயரைச் சொல்லி இங்கு வந்துவிடுங்கள் அப்புறம் பார்த்துக் கொள்ளலாமென்று. எனவே சாப்பாட்டுக்குத் தேவையான திராம்ஸ் மட்டுமே எடுத்துச் சென்ற நாங்கள் வைத்திருந்தது என்னவோ கொஞ்சம் சில்லறைகளைத்தான்.

கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் கடந்த நிலையில் நாங்கள் சாப்பிட்ட உணவகத்திலிருந்து இரண்டுபேர் வெளியில் வந்து எங்களை மடக்கிப் பிடித்ததைப் பார்த்த நிலையில் ஏதோ அவர்கள் பாஷையில் கத்திக் கொண்டே எங்களை நோக்கி ஓடிவந்ததைக்கண்ட இந்த மூன்று பேர் நழுவ ஆரம்பித்தனர்.வந்தவர்கள் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள். தற்செயலாக வெளியில் வந்தவர்கள் நாங்கள் நிற்பதைப் பார்த்துவிட்டு வந்ததைச் சொன்னார்கள். இறுதியாக இந்த வழியை இனிமேல் உபோயோகிக்க வேண்டாமென்றும், கொஞ்சம் தொலைவாக இருந்தாலும் வேறொரு வழியைக் காட்டினார்கள். அந்த வழியில் சாதாரணமாக மக்கள் நடமாட்டம் இருந்தது.

இந்த ஒரு சம்பவம் தவிர்த்தால் tangier ஒரு அழகான நகரம். அங்குதான் ஹெர்குலஸ் குகை இருக்கிறது. Mediterranean கடலும் Atlantic கடலும் ஒன்றையொன்று சந்தித்தாலும் இரண்டும் கலக்காது. இரன்டும் வெவ்வேறு நிறத்திலிருக்கும்.அந்நாட்டு ராஜாவின் அரண்மனையும் அங்குதான் இருக்கிறது. இன்னும் நிறைய இடங்கள் இருக்கிறது பார்ப்பதற்கு ஆனால் மேலே சொன்னவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரைதையாக இருக்க வேண்டும். கதையில் வரும் அந்தப் பையன் கவனமில்லாமல் தான் கொண்டுவந்த துட்டை இழந்துவிட்டான்.

சரி கதைக்கு வருவோம், எகிப்து நோக்கி பயணிக்கும்போது இடையில் பல இன்னல்களைச் சந்திக்கிறான். சகாரா பாலைவனத்தில் தொடரும் அவர்களது பயணத்தில் சில அமானுஷ்யங்களும் நடக்கின்றன. ஒரு இடத்தில இயற்கையைக் கட்டுப்படுத்துவது போல வரும். இது நமது சித்தர்களை நினைவில் கொண்டுவந்தது. மனதைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் இயற்கையோடு பேசி புயலை வருவிப்பது கதையில் நடக்கும். இவனோடு சேர்ந்து பயணிக்கும் ஆங்கிலேயர்கள் உலோகத்தைத் தங்கமாக்கும் ரஸவாதியை காணச் செல்வதாகச் சொல்லி, அந்தக் கலையைப் பற்றி இவனுக்கு விளக்குவார்கள். அவனுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள அவர்கள் சந்திக்க நினைக்கும் ரஸவாதியை இவன் சந்திக்கும் நிலைமைக்கு ஆளாகி, அவர்களே இவனுக்கு உதவிகளும் செய்து சகுன அடிப்படையில் எப்படியோ எகிப்து சென்றடைந்து புதையலை அடைந்தானா? இல்லியா? என்பதுதான் மீதிக் கதை.

என்னைப் பொறுத்தவரை இதுவொரு pulb fiction. வாசித்துப்பாருங்கள். அருமையான ஒன்று.

அடுத்து டால்ஸ்டாய் எழுதிய மனத்தத்துவ / உளவியல் சார்ந்த எழுத்துக்கள் மிகவும் பிடித்தவொன்று. பைத்தியத்தின் நாட்குறிப்புகள், சூரத்தின் காஃபி கவுஸ், ரெண்டு கிழவர்க்ள, மூன்று கேள்விகள் போன்ற சிறிய படைப்புகளையே வாசித்தேன். மனதின் ஓட்டங்களை அப்படியே எழுத்தில் வார்ப்பது டால்ஸ்டாய் க்கு கைவந்த கலை. நிகழ்வினை எந்த வகையிலெல்லாம் மனது யோசிக்குமென்பதை அப்படியே எழுதுவது சாதாரணமான விசயமில்லை. முக்கியமாகப் பைத்தியக்காரனின் நாட்குறிப்பில் வரும் மரணம் பற்றிய சிந்தனைகள். சூரத்தின் காபி கவுஸ் நம்மூர் நீதிக்கதை போல இருந்தாலும் வாசிக்க நன்றாக இருக்கும். மூன்று கேள்விகளும் அப்படித்தான். விருப்பமிருந்தால் இவருடைய உளவியல் சார்ந்த படைப்புகளை வாசியுங்கள் அருமையாக இருக்கும்.

அடுத்து பார்த்த படங்களில் இரண்டை மட்டும் இங்கு எழுதுகிறேன். ஒன்று Twelve Monkeys. ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு science fiction படம் பார்க்க வேண்டுமென்றால் கண்டிப்பாக இதனைப் பார்க்கலாம். அருமையான படம். இப்போது இருக்கும் கொரோன தொற்றுதல் இப்படியும் முடியுமோ என்ற சிந்தனையைத் தூண்டும் படம்.எடுத்துக்காட்டாக இப்போது கொரோன வந்து உலகமே அழியும் தருவாயில் தப்பிப் பிழைத்த கொஞ்ச மக்கள் பூமிக்கடியில் வாழுகின்ற நிலையில், சுமார் 30 வருடம் கழிந்த பிறகு அப்போது இருக்கும் மருத்துவ விஞ்சானிகள் மருந்து கண்டுபிடித்துப் பூமியின் மேற்பரப்பில் வழக்கம்போல வாழ்வை வாழலாம் என்றெண்ணும்போது கோரோனோ வைப் பற்றிய முழுத்தகவலும் அவர்களுக்கு வேண்டும் பட்சத்தில், ஒருவனை வைரஸ் பாதித்த 2020 வருடத்திற்குக் காலப்பயணம் மூலம் அனுப்பி வைரஸைப் பற்றிய முழுத்தகவலையும் சேகரித்துக் கொண்டுவரும்படி செய்து பின் அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதுதான் கதை.

படத்தின் முடிவு வரும்வரை எனது மனதில் ஓடியது என்னவென்றால், 2035 வருடத்தில் இருப்பவர்கள் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகத் தொல்லையடைந்து எப்டியாவது ஒரு விதத்தில் மக்கள் தொகையைக் குறைக்க எண்ணி, ஒரு மனிதனை முன்னெய் அனுப்பி ஆட்கொல்லி வைரஸ்களைப் பரப்பி மக்கள் தொகையை அழிப்பதாக நினைத்திருந்தேன்.ஆனால் இறந்தகாலத்தை மாற்றமுடியாது என்ற விதி இருக்கிறது. ஒரு காட்சியில் தனது இறப்பை சிறுவயதாக இருக்கும் தானே சோகமான முகத்துடன் பார்த்து பரிதாபப்படும்படி இருப்பது அருமையான காட்சி.படம் சுமுகமான முடிவுதான்.கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

அடுத்து The prestige. நோலன் படம். ஏன்?ஏன்? என்ற கேள்விகளுக்குக் கடைசியில் வரிசையாகப் பதில்களை அடுக்கும் ஒரு கதையமைப்பு. உண்மையில் மேஜிக் செய்வதற்கு இவ்வளவு மெனக்கெடணுமா என்பதே இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் எனக்குத் தெரிய வந்தது. சுருக்கமாகச் சொன்னால் ஒருவரின் மேஜிக் நுணுக்கத்தைத் திருடுவது அல்லது எப்படியென அறிந்துகொள்வதில் ஏற்படும் போட்டிதான் கதை.

ஒரு மேடையில் தூரமாய் இருக்கும் இரண்டு தனித்தனி கதவுகளில், ஒரு வழியாகச் செல்லும் ஒருவன் அடுத்த நொடியில் மற்றொரு கதவின் வழியாக வெளியில் வருவது எல்லோராலும் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.இதனை அறிந்துகொள்ள மற்றொருவர் அலைந்து திரிந்து இறுதியில் டெஸ்லாவிடம் செல்கிறார். ஆம் அதே விஞ்சானிதான். அவரும் போராடி மனிதனை அப்படியே காப்பிச் செய்யும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி கொடுக்கிறார். அதில் செல்லும் ஒன்றின்மீது மின்சாரம் பாய்ந்து அடுத்த நொடியில் அதே போல மற்றொன்று வந்துவிடும். முதலில் தொப்பி,பூனை எனச் சோதித்துப் பார்க்க வெற்றியடையும் அதைவைத்து மேடைகளில் நிகழ்ச்சிகளைச் செய்கிறார்.


ஆனால் முதலில் செய்பவர் இந்தளவுக்கு மெனக்கெடவில்லை. அவர்களை ரெட்டையர்கள். இந்த இயந்திரத்தின் மூலம் வெளிவரும் மற்றொருவர் என்ன ஆகிறார்? அந்த இன்னொரு மனிதனை வெளிவந்தவுடன் தண்ணித்தொட்டியில் இறக்கி கொல்கிறான் மற்றொருவன். இதையெல்லாம் non linear ல் சொல்லி கடைசியில் முடிவை விளக்குவதில் அப்பாடா என்று தெளிகிறது. பாருங்கள் அருமையான படம்.

1 comments:

caelummachak said...

Thaitanium Art - TikTok
Discover titanium damascus knives the world's best tipsters, get free titanium piercing jewelry updates and share trekz titanium your top tips on our community. mens wedding bands titanium titanium grinder thaitanium.blogspot.com.au/Thait-Sega-Tipster.jpg. Thaitanium.