விருந்தாளி - ஆல்பெர் காம்யு

தனிமை விரும்பி ஒருவனுக்கு தனது அறையில் மற்றொருவன் இருந்தால் அவனது மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் நன்கறிவேன். ஒரு மகத்தான ஆசிரியர் எதிர்பாராத விதமாக ஏற்றுக்கொள்ளும் வேலையாக வருகிறான் ஒரு கொலைக் குற்றவாளி. முதலில் அந்த ஆசிரியர் அவனை  குற்றவாளியாக பார்க்கும் முன்பே அவனிடத்தில் இருக்கும் நல்லெண்ணங்களை மனதில் நினைத்துப் பார்த்துக் கொள்கிறார். அவரைப் பொறுத்தவரை அவனொரு சாதாரண மனிதன் அவ்வளவே.

உத்தரவின் படி அவனை அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் பொறுப்பு அவருடையது. ஆனால் அவனுக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வரும் நண்பனான காவலாளியிடம் நான் ஒப்படைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அதற்குப் பின்னர் தன் மனதால் வருத்தம் கொள்ளும்போது அவரின் நேர்மை வெளிப்படுகிறது. இரவில் அவரோடு தங்கும் அந்த கைதிக்கு எல்லா உதவிகளையும் சாதாரண மனிதனாக நினைத்துச் செய்கிறார். மறுநாள் காலையில் அதே மனிதாபிமானத்தோடு ஒரு முடிவையும் எடுக்கிறார். அவனுக்குத் தேவையான உணவோடு புறப்படும் அவர்கள் இருப்பிடம் தாண்டி வெகு தூரம் சென்ற பிறகு அவனை நிறுத்தி இரண்டு விருப்பங்களை அவனுக்குத் தருகிறார். ஒன்றாவது அவருக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவின் படி காவல் நிலையம் இருக்கும் ஊருக்குப் போகலாம். மற்றொன்று தூரத்தில் இருக்கும் அரேபியர்கள் வசிக்கும் ஒரு ஊருக்குப் போகலாம். இவர் அவனிடத்தில் கண்டிப்பாக இங்குதான் போகவேண்டுமென்பதை ஒரு வார்த்தையிலும் வெளிப்படுத்தவில்லை.

அவரது இந்தச் செயலுக்கு அவர் மனது படும்பாட்டை சொல்வதில்தான் இந்தக் கதை வெற்றிபெறுகிறது. அவனை விட்டுப் பிரிய மனதில்லாமல் கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்க்கும்போது அந்த அரேபியன் அதே இடத்தில் அப்படியே அசையாமல் நிற்கிறான். இன்னும் கொஞ்ச தூரம் சென்று திரும்பி பார்க்கும்போது அவன் காவல்நிலையம் இருக்கும் ஊருக்கு நடப்பது அவரது கண்ணில் படும்.

அவர் நடத்திய விதம்,பேசிய வார்த்தைகள் அந்த கொலைகாரனை இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது என்பதை காம்யு அவரது பாணியில் சொல்லியிருப்பது அருமை. எப்போதுமே காம்யுவின் எழுத்தில் இந்த விசயங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையான எழுத்தும், கதையும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

(இந்தக் கதையில் நான் சொல்லாத கடைசி பத்தி ஒன்று இருக்கிறது. அதைத்  தவிர்த்த கதையை   மட்டுமே நான் இங்கு சொல்லியிருக்கிறேன். அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் அதனையும் சேர்த்து வாசித்துக்கொள்ளுங்கள்)

0 comments: