உருமாற்றம் - ஃப்ரன்ஸ் காஃப்கா

உருமாற்றம் - ஃப்ரன்ஸ் காஃப்கா (மொழிபெயர்ப்பு - வின்சென்ட்)
அன்றாட வாழ்வில் இரண்டு ஷிப்ட், மூன்று ஷிப்ட் வேலைக்குச் சென்று நமது குடும்பத்தையோ அல்லது நமது கனவையோ துரத்திக்கொண்டிருக்கும் நாம் திடீரென்று, சுருண்டு விழுந்து ஏதாவதுவொரு நோயால் படுத்துவிட்டால் அதற்கு அடுத்துவரும் நாட்கள் நமக்கு எப்படியிருக்கும் என்பதை என்றாவது நாம் யோசித்திருப்போமா? அப்படி யோசித்தால் அந்த நாட்கள் நீங்கள் நினைத்ததைவிட மிகக் கொடூரமாகவே இருக்குமென்பது என் கருத்து. 

என்னதான் ரத்த உறவுகள் தொடக்கத்தில் உதவிகள் செய்தாலும், ஒருகட்டத்தில் அவர்களின் மனதில் நாம் எங்கோ ஒரு மூலையில் பாரமாக அமைந்துவிட்டால் அங்கேயே தோற்றுப் போய்விடுகிறோம். அதுவும் இந்தக் காலத்தில் கேட்கவே வேண்டாம். என்னதான் நீங்கள் குடும்பத்துக்கு மாடாய் உழைத்து முன்னேற்றியிருந்தாலும், முடியாத நிலையில் கட்டிலில் படுத்திருக்கும் உங்களால் செய்ய முடிந்ததெல்லாம் மனதுக்குள் சிந்தனை மட்டுமே. அதுவும் உங்களைச்சுற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் எப்படி உங்களை நடத்துகிறார்கள் என்பதையே மனது அசைபோடும். அது திருப்தி ஏற்படுத்தாத பட்சத்தில் மிஞ்சுவது என்னவோ ஏமாற்றமே.இந்த ஏமாற்றமே உங்களுக்கு அதிகமான தொல்லைகளைக் கொண்டுவந்து சேர்க்கும். துன்பத்தை விடத் துன்பம் இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்ற பயமே மிகக் கொடுமையானது. 

உலகத்தை எதிர்த்துப் போராட வலுவில்லாத நிலையில் கட்டிலில் படுத்திருக்கும் உங்களுக்கிருக்கும் ஒரே ஆறுதல் மன நிம்மதி. அது கிடைப்பது உங்களின் சுற்றுப்புறத்திலிருந்து. அதுவே கொஞ்சம் சிக்கலாக இருந்துவிட்ட நிலையில் மரணத்தின் வேகம் வேகமாக உங்களை நெருங்காதா என்றே மனம் எண்ணத்தோன்றும். என்னதான் விழுந்து விழுந்து கவனித்தாலும் கதவை மூடின பிறகு அவர்கள் உங்களுக்குக் கேட்காது என நினைத்துப் பேசும் பேச்சில்தான் இருக்கிறது உண்மை நிலை.
சரி என்னதான் செய்யலாம் என்று யோசித்தால், ஒன்றும் செய்ய முடியாது. வருவது வந்தே தீரும். நன்றாக வாழும்வரை ஒரு நிறைவான வாழ்வை வாழ முயற்சி செய்வோம். அதுவே நம்மால் முடியும். காலமொரு எதிர்வரும் ட்ரெயின் போல, நீங்களே தடுத்தாலும் அது ஒரே சீராகப் போகுமிடம் போய்த்தான் தீரும். 

சரி இப்போது இந்தக் கதைக்கு வருவோம். ஒரு விற்பனைப் பிரநிதியான ஒருவன் காலையில் எழும்போது யாரும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத ஒரு பூச்சியாக மாறிவிடுகிறான். அது பூச்சியா? ஏதும் வேறொன்றா என அந்தக் கதையில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. அவன் கண்விழிக்கும்போதுதான் அந்த நிலையை அவன் உணர்கிறான். இருந்தும் அவனுக்கு இருக்கும் ஒரே பயம் மேலதிகாரியிடம் எப்படி இன்றைக்கு ஒரு நாள் விடுப்பு கேட்பது ? நம்புவாரா? என்ற மனா உளைச்சல் தான் இருக்குமே தவிரத் தன்னிலைக் குறித்தவொரு எந்த எண்ணமும் இருக்காது.
ஒன்றுமே முடியாத பட்சத்தில்தான் நேர்த்திருப்பது அவனுக்குத் தெரியவரும். பெரும் போராட்டத்திற்குப் பின் தனது நிலையைக் குடும்பத்துக்குத் தெரிவித்தவுடன் முதலில் துக்கமடையும் அவர்கள் சிறிது காலத்தில் வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். இத்தனைக்கும் இவன் ஈட்டும் வருமானத்தில்தான் குடும்பம் நடந்துவந்திருக்கிறது. இப்போது இவனுக்குத் திடீரென்று இப்பெடியொரு வித்தியாசமான நிலை. முதலில் நன்றாகப் பார்த்துத் தவறாமல் உணவளிக்கும் தங்கையும் ஒருகட்டத்தில் மாறுகிறாள்.
குடும்பமே சேர்ந்து அவன் ஏன் இங்கிருந்து நமக்குக் கஷ்டம் கொடுக்கிறான் என்று எண்ணத்தொடங்க செத்துமடிகிறான் அந்தப் பூச்சி மனிதன். அந்தக் குடும்பமும் பெருமூச்சியடைகிறது.
பல்வேறு மன எண்ணங்களைக் கிளறிவிடும் இந்த மாதிரியான படைப்புகள் வாசிக்கக் கிடைப்பது அரிது. அருமையான நூல். வாசிப்போடு நிறுத்தாமல் முடிந்த பிறகு கொஞ்சம் நம்மையும் அந்தக் கதாநாயகனோடு பொருத்தி யோசித்துப் பார்த்தால் ஆசிரியரின் எழுத்தின் வெற்றி முழுமையடையும்.


மீண்டும் சொல்கிறேன் கண்டிப்பாக வாசித்தே ஆகவேண்டிய நூல் இல்லை இல்லை இலக்கியம்.

1 comments:

Avargal Unmaigal said...


சிந்திக்க வைக்கும் பதிவு அதுவும் இந்த கொரோனா காலத்தில்