சில விசயங்கள் - 16

    அந்த ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட விசயம் நடந்த விதம் பற்றி சொல்வதாக சொல்லியிருந்தேன். அதில் எழுதியிருந்தது என்னவென்றால் ஆயிரம் வருடம் ஆனாலும் இந்த ஊரின் அழிவு இந்த ஆற்றால் தான்” என்பதுதான். இதைப் பார்த்தவுடன் பொதுவாக நமது மனதுக்குத் தோன்றுவது ஆற்றில் பெரும் வெள்ளம் வந்து ஊரை அழித்துவிடும் என்றுதான். ஆனால் இதற்கு நேர்மாறாக நடந்தாலும் ஊர் அழியும் என்ற ஒன்று இருக்கிறது. உண்மையில் அதுதான் நடந்தது.

    ஆம் தொடர்ந்து ஐந்து வருடம் இந்த ஆற்றில் ஒரு பொட்டுத் தண்ணீர் வரவில்லை. மணலுக்கடியில் இருந்த நீர் அதிக பட்சமாக இரண்டு வருடங்கள் வரை உதவியது. அதன்பிறகு ஏற்கனவே இருந்த கிணற்றில் முடிந்தவர்கள் ஆழ்துளை போட்டுப் பார்த்தார்கள். சிலருக்கு கைகொடுத்தது, பலருக்கு கைவிரித்தது. கிணற்றில் நீர் இருப்பர்வகளிடம் நீர் பெற்று சிலர் விவசாயம் செய்தனர். மொத்தமாக நீர் இல்லையென்ற நிலை வந்த போதுதான் நான் சொன்ன அழிவு நேர ஆரம்பித்தது.

   குடிக்கவே நீர் இல்லாத நிலையில் விவசாயத்திற்கு யோசிக்கவே முடியாத நிலை. அதனால் நீரினால் கொளிக்கும் வயல் வெளிகள் எல்லாம் வானத்தை ஏந்தி பார்க்கும் நிலங்களாக மாறின. இதனால் வருடம் முழுதும் விவசாயம் செய்பவர்கள் தத்தளித்தனர். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே வெள்ளாமை செய்ய முடிந்தது. மீதி காலங்களில் அவர்களின் நிலங்களைபோலவே வானத்தைப் பார்த்து தவம் இருந்தார்கள். நிலம் மழைக்கு,அவர்கள் கடவுளுக்காக. ஆனால் இரண்டிலுமே ஒன்றும் நடக்கவில்லை.

    சுத்தமாக மழையில்லை. இந்த வருடமாவது மழை வரும் என்ற நமபிக்கையில் விதைத்தவர்களுக்கு அந்த வருடம் ஏமாற்றம் மிஞ்சினாலும் ஒரு குருட்டு நம்பிக்கையில் அடுத்தவருடமும் அதே முயற்சி மீண்டும் அதே தோல்வி பண இழப்பு.மூன்று வருடங்கள் தொடர் ஏமாற்றத்தில் கற்ற பாடம் அடுத்து வந்த ஆண்டுகளில் வருடம் முழுதும் எந்தவொரு வெள்ளாமையும் நடக்கவில்லை. விவசாயம் இல்லையென்றால் வாழ்வின் ஆதாரம் இல்லை. ஊரைவிட்டுக் காலி செய்தார்கள். வெளியூருக்குச் சென்றவர்கள் அவர்களின் தகுதிக்கு ஏற்றார்போல் வேலையை தொடர்ந்தார்கள். கடைகளில்,வாகனங்ககளில் என அவர்களின் வாழ்க்கை ஒட்டிக்கொண்டது.

     ஊரில் நிலங்கள் அதே தவநிலையில் இருந்தன.அனால் விவசாயிகள் இல்லை. அங்கே இருந்தவர்களும் தனது அடிப்படைத் தேவைகளுக்கான நீருக்கே அலைய வேண்டிய நிலையில் விவசாயத்தை மறந்தே இருந்தனர். இதற்கு இடையில் எப்போதாவது மழை முகம் காட்டினால் இந்த வருடம் ஏமாற்றாது என்ற நம்பிக்கையில் விவசாயம் பார்த்தவர்கள் சந்தித்தது பெரும் சேதம். முடியாதவர்கள் நிலபுலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு கிளம்பினார்கள்.

    எங்குமே எப்போதும் பசுமையாகக் காணக்கிடைத்த நிலங்களை தரிசாக பார்க்க ஒருவித மனோதைரியம் வேண்டும் அதுவும் விவசாயியாக இருந்தால். அந்த தைரியம் இருந்தவர்கள் மட்டும் அந்த ஊரில் இருந்தார்கள். ஏற்கனவே சேமித்து வைத்ததை வைத்து வாழ்க்கையை ஓட்டினார்கள்.

    இதே நிலமை எவ்வளோ நாள் நீடிக்கும் என்று பார்க்க நினைத்தவர்களும் அதில் அடங்குவார்கள். அவர்களின் நம்பிக்கை என்றாவது ஒரு நாள் மழை பெய்யும் இந்த ஆற்றில் வெள்ளம் வரும் என்பதுதான். ஆனால் இதற்கிடையில்தான் நடந்து மணல் கொள்ளை. இதைப் பார்த்தவர்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போனது. மணலை சுத்தமாக வழித்து எடுத்தபிறகு எவ்வளவு நீர் வந்தாலும் ஆறு என்பது ஒரு வடிகாலைப் போல மாறிவிடும். அதில் வருகின்ற நீர் அப்போதைக்கு மட்டும் அந்த ஆற்றில் வடிந்து கடலில் சேருமே தவிர பூமிக்கு அடியில் தங்காது. ஆற்றுமணலில் நீர் தங்கினால்தான் உட்புற நிலங்களுக்கு நீர் கசிந்து அங்குள்ள கிணறுகளுக்கு பாசனம் கிடைக்கும்.

     ஆக இருந்த ஒரு நம்பிக்கையும் போன சமயத்தில் அரசாங்கம் கொண்டுவந்த நூறு நாள் வேலைத்திட்டம் வந்தது. உழைத்தவர்களை சோம்பேறிகளாக ஆக்கிய முக்கியமான ஒன்று. அதுவும் மழையில்லாத காலத்தில் வேறுவழியின்றி அந்த வேலைக்கு போக வேண்டிய நிலை வந்தாலும் மழை பெய்ந்த காலத்தில் யாரும் விவசாயம் பார்க்க முன் வரவில்லை. வறட்சியோடு சேர்த்து ஆள் இல்லாத திண்டாட்டமும் சேர மொத்தமும் சுருண்டு போய்விட்டது.

   அந்த வேலைத்திட்டம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். பெயர் கொடுத்துவிட்டு தான் நின்ற இடத்தில் இருக்கும் புல்லை மட்டும் அகற்றிவிட்டு சம்பளம் வாங்கிக் கொள்ளலாம். மீதி நேரம் நல்ல உறக்கம். உடல் நல்ல சுகம் கண்டதில் விவசாய வேலைகளை செய்ய முடியாமல் போனது. இந்த திட்டத்தை பற்றி தனியாக எழுதாலாம்.

    இவ்வளவு பிரச்சினையில் அந்த பெருமாளை நான் மட்டும் எழுத மறக்கவில்லை, அங்கிருந்தவர்களும் மறந்தே இருந்தனர். அப்போதைய நிலையில் அவர்களின் மனதில் இருந்த ஒரேயொரு விசயம் இன்றாவது மழை வராதா என்பதுதான்.

    மொத்தமாக ஐந்து வருட முடிவில் அதாவது போன வருடம் மோட்சம் கிடைத்தது. பாதியழிந்த அந்த ஊருக்கு ஒரு மோட்சம்.  நல்ல மழை பெய்தது. ஆற்றில் நீர் வந்தது. அதுவும் ஒரு மாத காலத்துக்கு நீர் ஓடியது.. இன்னொரு பிரச்சினை அங்கு விவசாயம் பார்க்க ஆட்கள் இல்லை. முக்கியமாக கூலிக்கு வேலையாட்கள் இல்லை. இருந்தாலும் யாரும் உள்ளூர் வேலைக்கு வராமல் வெளியூர்களில் அதிக சம்பளத்துக்குச் சென்றனர். காரணம் குறைந்த வேலை நேரம் அதிகச் சம்பளம்.  அதிக சம்பளம் கொடுப்பவர்களையும் ஒன்றும் சொல்வதுக்கில்லை. அவர்களும் நிலத்தில் போட்டதை எப்படியாவது எடுத்தே ஆகவேண்டிய நிலை. இதே நிலையில் தான் இப்போதும் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

    மணலைக் கொள்ளையடித்துவிட்டு பழி ,பாவத்துக்கு அஞ்சினார்களோ தெரியவவில்லை ஆற்றில் குறிப்பிட்ட தூரத்துக்குள் சிறிய தடுப்பு அணைகளைக் கட்டினார்கள். நீர் வந்தால் வேகமாக கடந்து செல்லாமல் தடுப்புச் சுவற்றில் தடுத்து பெருகி அருகில் உள்ள நிலங்களுக்குள் கசிந்து செல்லும். ஒரு நல்ல விஷயம் மழைக்கு முன் அதை முடித்தது.

   இப்போது மீதியிருக்கும் விவசாயிகள் கொஞ்சம் சந்தோசத்தோடு விவசாய வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள். வேலைக்கு ஆட்கள் இல்லாவிட்டாலும் முடிந்த வரை ஆற்றில் நீர் வந்ததுக்கவாது ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இறங்கி விட்டார்கள். ஒருவேளை ஊரை விட்டுப்போனவர்கள் திரும்பி வரலாம்.

   இந்த நிலையில் யாராவது அந்த பெருமாளையும் அதனோடு வந்த அந்த ஓலைச்சுவடியும் நினைத்துப் பார்த்திருப்பர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு தோன்றியது.  ஒருவேளை அதில் சொல்லப்பட அழிவென்பது இதுவாக இருக்குமோ என்று. அதே நேரத்தில் அதில்  சொல்லப்பட அழிவென்பது இந்த நிலையோடு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அது ஒரு முறை நிகழ்ந்துவிட்டது, இனியேதும் நடக்குமா என்பதை இயற்கையும், அந்த பெருமளுமே சொல்ல முடியும்.

   அதே நேரத்தில் சிதிலமடைந்த அந்தக் கோயிலை செப்பனிட பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே எட்டப்பர் வைத்த கற்களை கொஞ்சம் செப்பனிட போகிறார்கள். இந்த இரண்டு சம்பவத்துக்கும் தொடர்பு இருந்தாலும் இருக்கலாம். இதுதான் நான் ரசித்த விசயங்களின் இப்போதைய நிலை.

    இந்த ஊருக்கு போயிருந்த போது ஆற்றில் வெள்ளம் ஓடுவதைப் பார்க்கும்போது அப்படியொரு ஆனந்தம். ஒருநாளைக்கு நான்கு முறை சென்று பார்த்துவிடுவேன் தண்ணி கூடியிருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா? என்று. சிறுவயதில் ஆற்றில் நீர் வந்தவுடன் இருந்த நிலையில் இப்போது பாதியைத்தான் உணர முடிந்தது. காரணம் ஆற்றில் மணல் இல்லாத பெரும் பள்ளங்கள் நீரும் அவ்வளவு சந்தோசமாக வேகமாக குடித்து ஓடமுடியாத நிலை. இதே மாதிரி அடுத்தவருடமும் தண்ணீர் வரவேண்டும் என்பதே என்னோடு சேரத்து பலரின் ஆசையும். பார்க்கலாம் என்ன நடக்கின்றது என்று.

ஆற்றில் வெள்ளம்  வந்தபோது எடுத்த புகைப்படங்கள். அப்போது எனக்குத் தெரியாது இதை எழுதப் போகிறேன் என்று. எப்படியோ இதற்கு பயன்பட்டது.












3 comments:

HVL said...

முன்பு எழுதிக் கொண்டிருந்த சயின்ஸ் ஃபிக்‌ஷனிலிருந்து மாறுபட்ட பதிவு. இதுவும் நன்றாக இருகிறது!

கவிநா... said...

hi ganesh?
post podarathey illa polirukku?
athuvum science fiction kaanom? oru comedy illa? oru nakkal illa?
eppading padikkirathu?
enna achu ungalukku?
come back with full josh............. :)))))))))

கவிநா... said...

Happy to see you in blog writing again......

Keep writing.......