அருள்

     பளிங்குத்தரையில் தண்ணீர் இருந்திருக்க வேண்டும்  அந்த பெண் தள்ளியதில் நின்றிருந்த சிறுமி வழுக்கி அருகில் இருந்த சுவற்றில் முன்தலையை மோதி அப்படியே பின்னோக்கி விழுந்தாள். கிழே கிடந்தவளை பார்த்து எதோ அந்த வீட்டுப்பெண் கோபமாக திட்டிவிட்டு உள்ளே செல்லும்போது அடிபட்ட தலையில் தடவி ரத்தம் வருகிறதா என பார்த்துகொண்டாள். வரவில்லைபோலும் மீண்டும் மீண்டும் தடவி அது வீங்குகிறதா என்பதை ஒரு கையால் பார்த்துகொண்டே மற்றொரு கையால் அந்த அழுக்கு தண்ணீரில் தவறி போட்ட வெள்ளை சட்டையை மீண்டும் துவைக்க வாளிக்குள் எடுத்து போட்டாள்.


     அதற்க்காகத்தான் அந்த பெண் கோபத்தில் தள்ளிவிட்டதும் திட்டியதும் என்பதை எதிர்வரிசையில் இரண்டாவது வீட்டின் மாடியில் இருந்து பார்த்த எனக்கு  புரிந்தது. தரையை கழுவி, துடைத்தபின் கிழே விழுந்த சட்டையை அலசி போட்டுவிட்டு வெளியேறி தெருவில் நடந்த அந்த சிறுமி இன்னும் தலையை தடவிகொண்டேதான் இருந்தாள் . வீங்கியிருக்க வேண்டும். வயது பதினான்கு இருக்கும், காலையில் மட்டும் அந்த வீட்டுக்கு வந்து வேலை செய்வாள். பள்ளி சென்று கொண்டிருக்க வேண்டும். சில நாள்களில் அவள் பள்ளி சீருடை ஸ்வெட்டர் அணிந்து வருவதை பார்த்து இருக்கிறேன். இரண்டு புறமும் வரிசையாக வீடுகளை கொண்ட அந்த நீளமான தெருவின் முடிவில் அவளது வீடு இருந்தது. சொந்தமான இடம் இல்லை. யாரோ வீடுகட்டாமல் விட்ட இடத்தில் இவர்கள் ஒரு தற்காலிக வீட்டை அமைத்து இருந்தார்கள்.

      அவள் தெருவை கடந்துபோகும் போது சயாங்காலம் நடக்கவிருக்கும் ஏதோ ஒரு விழாவுக்கு பந்தல் போடுவதை சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு சென்றாள். இப்போது என் கவனம் அந்த சிறுமியில் இருந்து விலகி அந்த பந்தல் மீதும் அதை எப்படி போடுகிறார்கள் என்பதின் மீதும் சென்றது. விடுமுறை நாள் என்பதால் டெல்லி குளிருக்கு வெயிலில் மொட்டைமாடியில் உட்கார்ந்து இருந்த எனக்கு இந்த மாதிரி சில காட்சிகள் நேரத்தை கடத்திச்சென்று கொண்டிருந்தன.

       நேரம் கடந்து போயிருந்தது வேலையில் மூழ்கி இருந்த எனக்கு நான்கு மணியளவில் காலையில் தயாரான பந்தல் தோரணங்கள் எதுக்கென்ன்று அங்கிருந்து ஒலிபெருக்கியில் வந்த செய்தி உணர்த்தியது. எல்லாம் பஜனைகூட்டத்துக்கு. ஒரு அம்மன் சிலை இருக்க ஒரு சாமியார் அல்லது குழு பாடகர்கள் வந்து இரவு ஒரு மணிவரை பாட்டிசைத்து துதிப்பார்கள் இறைவனின் அருளுக்காக. இது அதிக குளிர் நேரம் என்பதால் சீக்கிரம் தொடங்கியிருப்பார்கள். யராவது ஒரு வீட்டில் உள்ளவர் இதை முன்னிறுத்தி நடத்துவார்கள்.


      அந்த கூடாரத்தை சுற்றி கூட்டம் கூடிக்கொண்டிருக்க அதன் ஒருபக்கத்தில் எல்லோர்க்கும் சாப்பாடு தயார் செய்வதுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. அனேகமாக இரவு பத்து மணிவரை நீடிக்கலாம். எனது அறையில் இருந்து அங்கு நடப்பதை பார்க்க முடிந்தது. வந்தவர்கள் தனக்கு பிடித்த இடங்களில் அமர அந்த பாடகர் அல்லது சாமியார் அருகில் இருந்த அம்மன் சிலையை தொட்டு கும்பிட்டுவிட்டு பாட ஆரம்பித்தார். இடையிடையே சிறு கதைகள் சொல்ல கூட்டம் பக்தி மழையில் நனைந்து இருந்தது அவர்கள் எழுப்பிய கரகோஷம் மற்றும் அந்த படகரோடு சேர்ந்து பாடிய விதத்தில் இருந்து தெரிந்தது.

         சிலமணிநேரங்கள் கடந்து இருக்க இன்னும் அதே உற்சாகத்தோடு பாடிக்கொண்டு இருந்தார்கள். எட்டிப்பார்த்தேன் இப்போது கூடுதலாக சில விசயங்கள் எனது பார்வைக்கு கிடைத்தன. சிலர் பக்தி பரவசத்தில் அமர்ந்து இருந்தபடியே கைகளை கூப்பி உடலை அசைத்து ஆடிக்கொண்டு இருந்தனர். முக்கியமாக பெண்கள். அந்த கூடாரத்தின் வெளியில் சற்று தள்ளி அதாவது சமையல் ஆகி கொண்டிருக்கும்  இடத்துக்கு பக்கத்தில் ஒரு கூட்டம் இருந்தது. அவர்களின் கையில் இருந்த பொருள்களை பார்த்த போது அவர்கள் கண்டிப்பாக கடவுளின் அருளை பெற வந்தவர்கள் இல்லை எனபது தெளிவாகியது.



             உணவு படைப்பதற்காக தயார் செய்து கொண்டு இருந்தார்கள். அதை பார்த்து கொண்டு இருந்த  பின் வந்த கூட்டத்தில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். அதில் நான் காலையில் பார்த்த சிறுமியும் இருந்தாள்.ஆனால் அவள் நின்றிருந்த இடம்வேறு. பஜனை நடக்கும் பந்தலின் ஒரு ஓரத்தில் நின்று எல்லோரின் பக்தியை அளந்து கொண்டு இருந்தாள். முக்கியமாக தன்னை காலையில் தள்ளிவிட்ட எஜமானியம்மாவின் பக்தி அவரை அறியாமல் உடலை ஆடசெய்து கொண்டு இருந்தது. அப்போது அந்த சிறுமி எதுக்கு சிரித்தாள் என்று என்னால் குறிப்பாக ஒரு காரணம் கொண்டு யோசிக்க முடியவில்லை. கொஞ்சம் நேரம் அங்கு நின்று இருந்தவள் பின் தன் கூட்டத்தோடு போய்ச்சேர்ந்தாள்.

             பஜனை முடிந்து இருந்தது. பிரசாதமாக அந்த பாடகர் அல்லது சாமியார் ஒரு சிகப்பு கயிறையும் கொஞ்சம் லட்டும் கொடுக்க எல்லோரும் வரிசையாக வந்து வாங்கி சென்றார்கள். சிலர் மறக்காமல் கண்ணில் ஒத்திகொள்ள தவறவில்லை. சிலர் அந்த சாமியாரையே கட்டிவிட சொன்னார்கள்.ரசிகர்களாக அல்லது பக்தர்களாக மாறியிருக்ககூடும். அதே நேரத்தில் சமையல் செய்தவர்கள் விரைவாக  வரிசையில் சில பெஞ்சுகளை போட்டு உணவுகளை பரிமாறிக்கொள்ள ஏதுவாக வைத்தார்கள்.

            எல்லோரும் தனக்கு பிடித்த உணவுகளை பரிமாறி தின்று முடித்த பிறகு காலி தட்டுக்களை போடும் இடத்தில் கையில் பாத்திரங்களோடு இருந்த அந்த கூட்டத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு பார்க்காத மாதிரி கை கழுவிவிட்டு வந்தார்கள். கடவுள் இவர்களின் பக்திக்கு இல்லாவிட்டாலும் அங்கு சமைக்கப்பட்டிருந்த விதமான சமையளுக்காகவது கண்டிப்பாக அவர்களுக்கு அருள்புரிய வேண்டும்ம் அவ்வளவு சமையல் வகைகள். பக்தி செய்யும் இடத்தில் இவ்வளவு விதமான ருசிகள் எதுக்காக என்று யோசித்தும் என்னால் விடை காணமுடியவில்லை.அங்கு காத்து இருந்தவர்களின் நேரம் இப்போது நெருங்கி இருந்தது. ஆம் சாப்பிடுவோரின் கூட்டம் குறைந்து கொண்டே இருக்க அவர்களுக்கும் ஒருவித ஆர்வம.

         இந்த ஆர்வம கலந்த ஆசை சில் நேரங்களில் நிறைவேறாமல்கூட போய் விடும். சமையல் மீதி இருந்தாலும் இவர்களுக்கு கிடைக்காமல் மீதி இருப்பதை சமைத்தவர்கள் அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.அல்லது உணவு பற்றாக்குறை ஆகிவிடும். அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற ஏக்கம் அல்லது வேண்டுதல் ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்தது. எப்போதாவது கிடைக்கும் நல்ல விருந்து சாப்பாடு இது.


       பஜனைக்கு வராமல் வெறுமனே சாப்பிட மட்டும்வந்தவர்களோடு சேர்த்து பார்க்கும்போது இதுதான் கடைசியாக இருக்கவேண்டும் அந்த கூட்டம் இப்போது கொஞ்சம் முன்னாடி வந்து இருப்பதில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் நடவடிக்கைககளை பார்க்கும்போது முதலில் சாப்பிட்டுவிட்டு பின் மீதுவதை எடுத்துபோகலாம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் போல.

          இப்போது கூட்டம் எல்லாம் கலைந்து போய் கொண்டு இருந்தது.  நான் இருக்கும் வீட்டை கடந்து செல்லும் சிலர் நான் மேலே இருந்து பார்த்துக்கொண்டு இருப்பதை கவனிக்க தவறவில்லை. இப்போது சமையல் செய்தவர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் சிலர் சமையல்காரர்களோடு ஏதோ பேசுவது தெரிந்தது. மணி பத்தரைக்கு மேல் ஆகியிருந்தது. அவர்கள் தங்கள் கொண்டு வந்திருந்த வெவ்வேறான பாத்திரங்களை பிரித்துவைத்து கொண்டு இருந்தனர்..

           இருவர் வந்திருந்த சாமியாருக்கு பணம் கொடுத்து அவரை வழியனுப்பும் வேலையில் இருக்க அந்த சாமியார் விடைபெறும்போது பெரியதாக சிரித்தார். அவர் சென்றுவிட காசு கொடுத்து கடவுளின் அருளை வளர்த்த அல்லது பெற்ற திருப்தியில் வழியனுப்பியவர்கள் திரும்புகையில் அந்த கூட்டம் இப்போது பஜனை நடந்த கூடாரத்தில் அமர்ந்திருப்பதை பார்த்தார்கள். ஒருவேளை அவர்கள் எதாவது சொன்னால் சமைப்பவர்கள் சாப்பாடு கொடுக்கலாம் என்பதால் அவர்கள் முகம் எதிர் வருபவர்களை நோக்கி இருக்க கண்டுகொள்ளாமலே சென்றனர். இப்போது இவர்களுக்கு அருள்புரிய இருப்பது இரண்டு பேர் மட்டுமே. ஒன்று அங்கு பஜனை செய்ப்பட்ட கடவுள், இன்னொன்று சமையல்காரர்கள். அவர்களின் குழந்தைகள் மடியில் கிடந்து தூங்கி போக அதிக குளிராமல் இருக்க தாய் துணியால்  இழுத்தி மூடியிருந்த நிலையில் காத்து இருந்தார்கள்.


            கடைசியில் யார் அருள் அவர்களுக்கு கிடைத்தது என்பதை பார்க்கவில்லை. ஒருவேளை கிடைக்காமலும் போய் இருக்கலாம். தூங்கிப்போனேன்.மறுநாள் காலையில் அந்த பந்தல் இல்லை. உணவு தட்டுகள் தெருவில் சிதறி கிடக்க அதில் மிதிக்காமல் கவனமாக நடந்து எப்போதும் போல அந்த சிறுமி வேலைக்கு வந்தாள். உற்றுப்பார்த்தேன் தலையில் அந்த சிறிய வீக்கம் இன்னும் இருந்தது.



நிஜமாகும் நிழல்கள் -2

       முந்தைய பாகம் படிக்க.......
                                                                   நிஜமாகும் நிழல்கள் -1



    அதே நேரம் அங்கு இருந்த சுகாதார மையத்துக்கு   இரண்டு அல்லது மூன்று பேர்  வயிற்றுபோக்கு வாந்தி போன்ற பெரும் பிரச்சினைகளால் வந்துகொண்டு இருந்தார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் வந்தவர்களில் அனைவரும் ஒரு வாரம் முன் அந்த ஆசிரமம் சென்று திரும்பியவர்கள்.  

    சென்றுவந்தவர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சினை இல்லாததால் அந்த குறிப்பிட்ட நோய் பரவுவதைவிட ஒரு வதந்தி பரவி இருந்தது. அதாவது இவர்கள மீது எதோ தவறு இருக்கிறது அதான் அந்த சாமியே தண்டனை கொடுத்து இருக்கிறது என்பதுதான்.பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் சுகாதார மையத்தில் காட்டிவிட்டு முனேற்றம் இல்லாமல் அருகில் இருந்த நகரத்தில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    ஆச்சர்யம் என்னவென்றால் சிகிச்சை அளித்த மருத்துவருக்கே என்னவித நோய் என்ற முழுவிவரம் இப்போதைக்கு தெரிந்து இருக்கவில்லை. சாதாரண வயிற்று போக்குக்கு கொடுக்கும் சிகிச்சையை கொடுத்து அனுப்பி இருந்தார்கள். அவர்களுக்கும் கொஞ்சம் சுகமானதால் அதைப்பற்றி பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் அந்த நோய் தொடர்ந்து  ஊரில் மக்களுக்கு பரவிக்கொண்டிருந்தது. அந்த ஆசிரமத்துக்கு போகதவர்களுக்கும் வந்தபோதுதான் அந்த வதந்தி கொஞ்சம் நின்று போய் இருந்தது. மக்கள் உணர தொடங்கி இருந்தார்கள் எதோ ஒரு தோற்று நோய் பரவிக்கொண்டு இருக்கிறது என்பதை.



   ழக்கமாக சந்திக்கும் இடமான ஆற்று வெள்ளத்தில் அடித்து வந்து அங்கு கொஞ்சம் ஒருபக்கமாக புரண்டு கிடந்த ஒரு கிணற்று உறையின மீது இருவரும் எதிர் எதிரே உட்க்கார்ந்து இருந்தார்கள். அந்த உரையின் உட்பக்கம் மண் நிரம்பி இருந்தது. இடுப்பு உயரம் இருக்கும். அவர்களுக்கு இதுதான் சந்தித்து பேசுவதற்க்கான இடம். அதுக்குள் உட்கார்ந்து கொண்டால் தூரத்தில் இருந்து பார்க்க ஒன்றும் தெரியாது. காதலின் தொடக்கத்தில் அதிக பேச்சுக்கள் இப்படித்தான் போனது. ஆனால் இப்போது அவர்களுக்கு அந்த பயம் தேவையற்றதாக இருந்தது.வீசி அடிக்கும் காற்றில் முகத்தில் வந்து விழும் முடியை கண்ணை சுருக்கியபடி பின்புறம் எடுத்து விட்டுக்கொண்டே..


    "நம்ம ஊரில் புதுசு புதுசா என்னவெல்லாம் நடக்குது பார்த்தியா?" கேட்டாள் புனி

    "ம்ம கேள்விபட்டேன்..அந்த சாமியார், ஒரு நோய் வேற பரவுதுன்னு" என்றான் கணேஷ்


"சரி சொல்லு கணேஷ் நீ என்ன நினைக்கிறே அந்த சாமியார் பத்தி?"

"என்ன சொல்ல சொல்ற, நம்புறியா நம்பலையான்னு கேட்கிறியா?"


    "அதான் நீ நம்பமாட்டேன்னு தெரியுமே அங்கு நடப்பதை பத்தி என்ன சொல்ற?" என்றாள்


"இதுவரை இந்த மாதிரி நிறையா சாமியார் செய்த புரட்டு எல்லாம் வெளியில் வந்து இருக்கு இதுவும் ஒருநாள் வரும் அப்பா பார் "என்றான்

     "பார் கணேஷ் எதையும் ஆதாரத்தோடு எதிர்நோக்கு அந்த சாமியார் என்னதான் கடவுள் சக்தியை உதவியா வச்சி செஞ்சாலும் அது எப்படின்னு யோசிச்சியா அதாவது அறிவியலில் அது சாத்தியாமான்னு?"


     "என்ன பேசுறே நீ?  உனக்கே தெரியாதா என்ன இதெல்லாம் சாத்தியமில்லைன்னு ஒருவேளை அவர் ஹிப்னாடிசம் செய்றாருன்னா ஓரளவுக்கு நம்புற மாதிரி இருக்கும். ஆனால் இங்க அதுவும் இல்லை பின்னே எந்த ஆதாரத்தை வச்சி யோசிக்க சொல்றே?"



"சரி அப்ப அந்த நோய் பரவுதே அது எப்படி?"

"அதை நீதான் சொல்லணும் நீதானே மருத்துவம் படிச்சி இருக்கே?"


    "எனக்கென்னவோ அந்த சாமியாருக்கும் இந்த நோய்க்கும் எதாவது தொடர்பு இருக்கும்னு தோணுது" என்றாள்


"அப்ப நீ அதை எல்லாம் உண்மைன்னு நம்புறே கொடுமை"


      "கொடுமையுமில்லை ஒண்ணுமில்லை உனக்கு பிடிச்ச ஐன்ஸ்டீன் என்ன சொல்லி இருக்காரு ஒருவேளை  இந்த பிரபஞ்சத்தை படைச்சது கடவுளா இருந்தாலும் அதை எப்படின்னு விளக்குவது கண்டிப்பா அறிவியல விதிகாளாகத்தான் இருக்கணும்னு அப்படி பார்த்தா இது கடவுளின் வேலையா இல்லியான்னு  நமக்கு எப்படி தெரியவரும் சொல்லு ?"


     "நீ ஊருக்கு என்னை எதுக்கு கூப்பிட்ட காதல் செய்யவா? இல்ல இந்த மாதிரி சயின்டிஸ்ட் வேலை பார்க்கவா?"


    "அட நீ வேற எனக்கும் நம்பிக்கை இல்லைதான் முதல்ல ஆனால் நம்ம முன்னோர்கள் செஞ்ச சில விசயங்களை இதோடு பொருத்தி பார்க்கும்போது எனக்கும் கொஞ்சம் உண்மை மாதிரி இருந்துச்சி அதான் உன்கிட்ட சொல்லலாம்னு சொன்னேன் உனக்கு பிடிக்கலேன்னா விடு வேற பேசுவோம்" என்றாள்


    "ச்சே அபப்டி இல்லை அந்த விசயத்துல பேச என்ன இருக்கு அதான் அப்படி சொன்னேன்  ஆனா இப்ப நீ எதோ புதுசா சொல்றே என்ன அது நம்ம முன்னோர் விசயம்?"


    "ம்ம் அப்படி வா வழிக்கு சரி  இந்த மனவசியம், இயற்கையை தன்வசம் வைத்து சில வேலைகளை சித்தர்கள் செய்தார்கள்னு உனக்கு தெரியும்தானே?" என்றாள்


     "ஆமா அதுக்கென்ன இப்ப அதுவும் இதுவும் ஒண்ணுதான்னு சொல்லி சாமியாரும் அப்படியொரு சித்தர்னு சொல்ல வாரீயா?"


"இல்ல அவங்க எப்படி பண்ணினாங்கணு தெரியுமான்னு கேட்டேன்?"


"தெரியல அதெல்லாம் உணமையான்னு கூட எனக்கு தெரியாது" என்றான்

     "உண்மையாத்தான் இருக்கணும் ஏன்னா நம்ம அறிவியல் சொல்றபடி பார்த்தால் நம்ம மூளையில் இருந்து மின்காந்தஅலைகள்னு சொல்ற BEETA,THETA,DELTA, ALPHA  waves எல்லாமே 7~30 HZ அளவுல வெவேறு நேரத்துல வெளிப்படுத்தும். இந்த அலைகளை இன்னும் அதிகமாக்கி அவங்களுக்கு  தேவையானதை நிறைவேற்றி இருக்கலாம்ல?"

     "அப்படியே அவங்க அலைகளை அதிகமாக வெளியிட்டாலும் அதை வச்சி என்ன பண்ண முடிந்திருக்கும் சொல்லு?" என்றான்


    "இங்கதான் எனக்கு சந்தேகம் இருக்கு ஆனா இப்படியும் இருக்கலாம்னு தோணுது அந்த அலைகளை வச்சி வளிமண்டலத்துள இருக்கிற அணுக்களை கிளர்ச்சி அடையச்செய்து அந்த அணுக்களின் மூலம் தனது தேவையை நிறைவேற்றி இருக்கலாம்"


   "அப்படின்னா அந்த அணுக்கள் போய் அடுத்தவங்க மனசை மாத்துதுன்னு சொல்ல வர்றியா?"


     "ம்ம ஆமாம் அதாவது மற்றவர்களின் மூளையில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளை வெளியில் இருக்கும் கிளர்ச்சி அடைந்த அணுக்களின் மூலம் கட்டுபடுத்தி தனக்கு தேவையானதை செய்து இருக்கலாம்"

     "இதுக்கு எப்பயுமே ஒரே அலைநீளம்,அதிர்வெண்ணில் அலைகள் தேவைப்பட்டு இருக்காது வெவ்வேறான அளவுகளில் தேவைப்பட்டு இருக்கும் அதை எப்படி அவங்க சரியா வெளியிட்டு இருக்க முடியும்? அதோடு இல்லாம அவங்க அதை செய்யும்போது குறிப்பா அந்த ஒரு நபரை மட்டும் எப்படி அதுபோய் சேர்ந்து மாற்றுது இடையில் உள்ளவங்களும் பாதிக்க படுவாங்கள்ள?" என்றான்


     "நீ சொல்றது புரியுது ஆனால் இதுலே எதாச்சும் நமக்கு தெரியாம இருக்கலாம்ல?"

     " நம்ம புத்திக்கு தெரியாதது எல்லாம் கடவுள் செயல்னு முடிவுக்கு வர்றது இப்ப மட்டும் புதுசா என்ன இதை முன்னாடி இருந்தேதான் செஞ்சிக்கிட்டு வர்றோம் "


      "நீ என்ன சொல்லு கணேஷ் இதுக்கு பின்னாடி கண்டிப்பா ஒரு அறிவியல் காரணம் இருந்துதான் ஆகனும் அதுவும் இல்லாம நம்ம ஊரில் பரவும் நோய்க்கும் அந்த ஆசிரமத்துக்கும் கண்டிப்பா காரணம் இருக்கும்னு தோணுது?"

     "இருந்தாமட்டும் நீ என்ன செய்யபோறே? போய் கண்டுபிடிச்சு சொல்ல போறியா என்ன? இன்னும் கொஞ்ச நாள்ல படிக்க போயிருவே? அதுக்கு எதுக்கு இப்ப நம்ம சந்திச்சு காதலிக்கிற நேரத்தையும் அதைபத்தி பேசி வீணடிக்கணும் சொல்லு?"


     "கண்டுபிடிக்கேறேனோ இல்லியோ நாளைக்கு நம்ம சுகாதார மையத்துக்கு போய் என்னன்னு பார்த்துட்டு வர்ற போறேன் குறைஞ்சது பரவுற நோய் பத்தியாச்சும் தெரிஞ்சா நிம்மதியா இருப்பேன்"


   "எப்படியோ இன்னைக்கு கிடைச்ச நேரம் இதுலே போயிருச்சி..நான் எதெல்லாம் கிடைக்கும்னுவந்தேன் கடைசில ஒன்னுமே கிடைக்கலை"


"அலையாதே நாளைக்கு நீயும் வர்றியா அங்க?"

"நான் வரலை இப்பயே தலை சுத்துச்சு நீதான் போய் ஆராச்சி செய்" என்றான்


     கொஞ்சம் மங்கும் இருட்டு சூழ்ந்து இருக்க இருவரும் எழுந்து மண்ணை தட்டியபடியே கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அந்த அமைதியில் புனியின் மனதில் நாளைக்கு சுகதாரமையத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது.




    அந்த ஆசிரமத்தில்  சீரமைப்பு பணிகள் என்ற பெயரில் சில வடிவமைப்பு வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. முக்கியமாக அந்த சாமியாரின் அறையில் காற்று புகும் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு பிராதன வழியிலும் புதியத சில கருவிகள் பொருத்தப்பட்டன.இப்போது அந்த அறைக்கு ஒரே வழி. அதுவும் சில சாதனங்களின் முழுச்சோதனைக்கு பின்னே யாரும் உள்ளே வெளியே போகும்படி இருந்தது. இது அங்கு வருவோருக்கு எந்தவிதத்திலும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தனர்.ஒருபுறம் வேலைகள் நடந்து கொண்டு இருக்க இன்னொரு தனி அறையில் சாமியார் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார்.....


"இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாது"

"..........................."


    "நீங்கதானே சொன்னிங்க இதனால மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராதுன்னு இப்பயே நிறையே பேர் நோய்வந்து சந்தேகம் நம்ம பக்கம் திரும்பிரிச்சு"


".............."


   "நீங்க சொல்ற மாதிரி அந்த நோயெல்லாம் கடவுளின் தண்டனைன்னு போய் சொல்லி  மாற்றினாலும் அதுவும் ரெம்ப நாளைக்கு தாங்காது"


"..............."



    "இதுதான் கடைசி முயற்சி இந்த சுத்தபடுத்தும் கருவிகள் பயனளித்தால் நான் இதற்கு மேல் இந்த வேசத்தை தொடருவேன் இல்லை என்றால் என்னால் இங்கு தொடர்வது கஷ்டம அப்புறம் உங்களது எல்லா திட்டங்களும்,முயற்ச்சிகளும் வீண்தான்"


"......"


   "சரி நம்பிக்கை இருக்கு..நான் இப்ப வைக்கிறேன் யாரோ வர்ற மாதிரி இருக்கு" என்று சொன்னவர் அலைபேசியை  மறைத்தார். 




                                                 இன்னும் நிழல்கள் நிஜமாகும் ......