கானல் காலம்

       சந்தித்து அதிக நாளாகியிருந்தது, ஆய்வுக்கூடத்தில் இருந்த கணேஷை சந்திக்கலாம் என்று சென்றேன். பெரும்பாலும் அவன் அங்குதான் இருப்பான். என்ன செய்கிறான், செய்யப்போகிறான் என்பது அவன்கூடவே படித்த எங்களுக்கே தெரிவதில்லை என்பதைவிட சொல்ல மாட்டான். அதிகமாக கேட்டால் கொஞ்சம் அடிப்படை விசயங்களை மட்டும் சொல்லுவான்.

     சிறிய ஆய்வுக்கூடம் ஒரு ஓரத்தில்  உட்கார்ந்து எதையோ படித்து கொண்டு இருக்க மற்றொரு இடத்தில்  அவனால் உருப்பெற்ற ரோமி எனும் இயந்திர பெண் நின்று இருந்தாள் சலனமில்லாமல். அனேகமாக கணேஷின் கட்டளையாக இருக்கும்.வந்ததை பார்த்தவுடன் பெரியதாக பொருட்படுத்தவில்லை.  ஒருமுறை அங்கு சுற்றி இருப்பதை பார்த்தேன் ஒரு விண்கலம் ஒன்று மூடி வைக்கப்பட்டு இருந்தது, இன்னும் சில கருவிகள் சிதறி கிடந்தன கூடவே புத்தகங்களும்.

"நான் வந்தது கூட தெரியாம என்ன படிக்கறே?" என்றேன்

    வெறுமனே படிக்கும் புத்தகத்தின் அட்டையை என்பக்கம் திருப்பி காட்டினான். வேற்றுகிரக வாசிகளோடு  எவ்வாறு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம், அதற்கான சாத்தியம் என்ன? என்பதைப்பற்றிய புத்தகம் அது.


  "ஆமா நீ கூட சொன்னியே கடைசியா நீ போன ஒரு கிரகத்துல கூட ஜீவராசிகள் இருக்காங்கன்னு அதுவும் வெறும் பெண்கள் மட்டும் பார்த்தேன்னு?" கேட்டேன்

"ஆமாம் அதுக்கென்ன இப்ப?" என்றான்

    "நீ படிச்சிட்டு இருக்கிற இந்த புத்தகமும் அது சம்பந்தமா இருக்கிறதானால  கேட்டேன்...சரி சொல்லு அது உண்மையா என்ன?"

     "நீ நம்பலன்னா அது பொய்யா என்ன? நான் போய் பர்த்துட்டுவந்துதான் சொன்னேன்" என்றான்

" கண்டிப்பா தெரியுமா அங்க வெறும் பெண்கள் மட்டும்தான் இருக்காங்களா என்ன?"

     "நான் பார்த்தவரைக்கும் அபப்டித்தான் ஆனா பெண்கள்னு சொல்ல முடியாது அதே அமைப்பு, உடை வேறமாதிரி இருந்துச்சி ரெம்ப நேரம் அங்க இருக்கல"

"போட்டோ ஏதும் எடுக்கலியா?"

      "எடுத்தேன்" என்று சொல்லியபடி மேஜையில் இருந்து ஒரு கவரை எடுத்து என் முன் போட்டான் உள்ளே சில வித்தியாசமான ஒளி அமைப்புடன் கூடிய புகைப்படங்கள் இருந்தன. அதில் சில தூரத்து உருவங்கள் தெரிந்தன. ஒருசிலவற்றில் தெளிவாக காண முடிந்தது. ஆமாம  அவன் சொன்னது சரிதான் உருவ அமைப்பில் அப்படியே பெண்களை போலவே இருந்தார்கள் உடைக்கு பதிலாக எதோ ஒன்று தடிமனாக பரவி இருந்தது ஒருவேளை அவர்களின் தோல் அமைப்பாக இருக்கலாம்.

"நீ ஏன் கிட்ட போய் பார்க்கல?" கேட்டேன்

    "போலாம்னுதான் இருந்தேன் ஆனா என்னோட விண்கலத்தை இங்கு ரோமியின் கட்டுபாட்டில் விட்டு இருந்தேன். குறிப்பிட நேரத்தில் விண்கலம் திரும்பவரவில்லை என்றால் அதை திரும்ப அழைக்கும் பொறுப்பு ரோமிக்கு. நான் அங்கு அவர்களை பார்த்த சில நிமிடத்தில் ரோமி என்னை திரும்ப அழைத்துக்கொண்டது அதான் பிரச்சினை" என்றான்

அந்த பக்கம் நின்ற ரோமியை வெறுப்பாக பார்த்தேன் அதில் சலனமில்லை..

"திரும்ப போகும் எண்ணம வரலியா உனக்கு?"

"போகணும் அதுக்குத்தான் தயாராகி கொண்டு இருக்கிறேன்"

"நானும் வரட்டுமா?"

"ஏன் அலையுற அது நம்ம பெண்களாக இருக்க வாய்ப்பு இல்ல"

"இருந்தாலும் பரவாயில்லை அங்க வந்து பார்த்துக்கிறேன்"

"அதோட விண்கலம் ஒரே ஆளுக்கு மட்டும் வடிவமைத்துள்ளது"

    "அப்ப நான் மட்டும் போறேன் நீ இங்க இருந்து இயக்கு உனக்கு தேவையான தகவலை கொடுக்கிறேன்" என்றேன்

"ஏண்டா இப்படி?" என்று சொல்லி முறைத்து பார்த்தான்

     "எனக்காக இந்த ஒருதடவை..ஒன்னாவே படிச்சி இருக்கோம் இந்த உதவி கூட செய்ய மாட்டியா"

     "அங்க போய் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நடக்க முடியாது அதோட ஆராய்ச்சிதான் முக்கிய நோக்கம். அதோட எதுவேண்டுமானாலும் நடக்கலாம் உனக்கு வேற திருமணம் ஆகிடுச்சி அதனால ஒத்துவராது"

     "நானே சரின்னு சொல்றேன் பின்னே என்ன வாழ்க்கைல இந்த மாதிரி எதாச்சும் செய்யணும் ரெம்ப நல ஆசை"

      "உன் ஆசை என்னனு எனக்கு நல்லாவே தெரியும். சரி எனக்கும் இதுல கொஞ்சம் பயன் இருக்கு நான் இங்கு இருந்து கவனித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி செயுறேன் ரோமியால் அந்தளவு  செய்ய முடியாத ஒரே காரணத்தால் உன்னை அனுப்புறேன் ஆனால் என் கட்டளையை மீறி எதுவும் செய்யலைனா"

    "சரி செய்ய மாட்டேன் ஆனா அந்த கிரகத்துல எந்த ஒரு ஆபத்தும் இல்லைன்னா என் இஷ்டப்படியே விடனும்?"

    "அதுல எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல.. உன்னோட மனைவி சம்மதம் வேணுமே."

"பொய் சொல்லிடலாம் நீ  எதுவும் சொல்லாம இருந்தா போதும்"

"எதாச்சும் ஆச்சுன்னா?"

"எனக்கு நம்பிக்கை இருக்கு எதுவும் ஆகாது சென்று திரும்புவேன்" என்றேன்

"சரி அப்ப அடுத்த வாரம் விடுப்பு எடுத்துக்கோ உன் பயணம் தொடங்கும்" என்றான்

      எனக்கு ஆச்சரியம்  எப்படி சரி என்றான்  தெரியவில்லை.



அன்றைய இரவில் சாப்பிடும்போது மனைவியிடம் சொன்னேன் அதற்கு அவள் ..

"சயங்காலம் சொல்லவே இல்ல?" கேட்டாள்

     "சொல்ல மறந்து இருப்பேன் ஒருவாரம் தான் அதுக்கு மேல இல்ல அலுவலக முக்கிய வேலை நானே போகணும்" என்றேன்

"சரி கிளம்ப என்ன தேவைன்னு சொல்லுங்க நான்  எடுத்து வைக்கிறேன்?"

"இல்ல நானே பார்த்துக்கிறேன்" என்று சொல்ல ஒரு மாதிரி பார்த்தாள்.

    படுக்கை அறையில்  இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. பேசினால் நான் பொய் சொல்லியதை  எப்படியாவது கண்டுபிடித்துவிடுவாள் என்ற பயம் எனக்கு. அப்படியே உறங்கி போனோம்.

     விண்கலம் அந்த கிரகத்தில் இறங்கிய போது அதிக எடையின் காரணமாக மண்ணில் கொஞ்ச ஆழம் பதிந்து இருந்தது. இறங்கினேன்  காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது ஆனால் சுவாசிக்க எந்தவித சிரமும் இல்லாமல் இருந்தது.

       கணேஷ் சொன்னதுபோல கிட்டத்தட்ட எல்லாமே பூமியை போலவே  இருந்தது. காற்றில் அதிக ஈரப்பதத்தின் காரணமோ என்னமோ மண்ணின் மேற்பரப்பில் ஒரு பசுமை நிற பாசி போல பரவி இருந்தது. நான்  நடந்த இடத்தில் அந்த பாசிகள் விலகி மண் பழுப்பு நிறத்தில் தெரிந்தது.

     மரங்கள் பூமியில் இல்லாத ரகம். அவன் சொன்னது போல ஆய்வுக்கு ஒரு குடுவையில் மண்ணை எடுத்து கொண்டேன். அடுத்து அங்கு இருக்கும் சில தாவர மாதிரிகள், கொஞ்சம் மண், பாறை துகள்கள் இவற்றை சேகரிக்க வேண்டும். கிளம்பும் முன் அங்கு ஒருவித படம் பிடிக்கும் கருவியை வைத்துவிட்டு வரவேண்டும்.

    இந்த வேலைகளை செய்யும்போதே என் மனம் அங்கு இருக்கும்  பெண்களின் மீது சென்றது. கொஞ்சம் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை.

       எல்லா வேலைகளையும் முடித்து இருந்தேன். இன்னும் அதிக நேரம் இருந்தது கிளம்புவதற்கு உலவினேன் பெண்களை தேடியபடி.    உயர்ந்த மரங்களுக்கு நடுவில் செல்ல பயமாகவே இருந்தது. புதிய கிரகம் என்ன  எப்போது வெளிப்படும் என்பது தெரியாது. ஆனால் கணேஷ் சொல்லி இருக்கிறான் வேறு கொடிய மிருகம்  அங்கு வசிக்க வாய்ப்பு இல்லை என்று அந்த தைரியம் எனக்கு.

     விண்கலத்தை விட்டு சிறிது தூரம் சென்ற போது தூரத்தில் சில உருவங்கள் அசைவது தெரிய அதை நோக்கி போனேன். அவன் சொன்னது உணமைதான் எல்லாமே பெண்கள். அதுவும் பூமியில் உள்ளதைபோல. ஆடை ஒன்றும் பெரிய அளவில் இல்லை. அது அவர்களுக்கு இயற்கையாக இருக்க வேண்டும். ஒரு மெல்லிய வலை போன்று  பரவி இருக்க உடல்  அமைப்பு அதில் வெளியில் தெரிந்தது. மெல்ல என்னை  நானே கிள்ளி பார்த்தேன் உண்மையா என்று.

     அருகில் சென்றேன் மனதுக்குள் பயம் இருந்தாலும் ஒரு நம்பிக்கை இருந்தது. கிழே சரிந்து கிடந்த மரம் ஒன்றில் அமர்ந்து இருந்தார்கள். நான் தயங்கியபடி அவர்களை நெருங்க பயத்தில் எழுந்து மொத்தமாக கொஞ்சதூரம் நகர்ந்து சென்றாகள்.

       சிறிது நேரம் எதுவும் பேசவில்லை அவர்களும் சரி நானும் சரி மாறி மாறி பார்த்து கொண்டோம். அவர்களுக்குள் எதோ பேசிகொண்டார்கள். பின் எல்லோரும் ஒரே மாதிரி பார்வையில் என்னை பார்த்தார்கள். இப்போது கொஞ்சம் பயம்  தொற்றி கொண்டது.

"நீ எங்கள் இனம் இல்லையே?" அவர்களில் ஒருவள் கேட்டாள்

"ஆம் நான் வேற்றுகிரகத்தில் இருந்து வந்து இருக்கிறேன் " என்றேன்

      மீண்டும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள் இப்போது அவர்களை கொஞ்சம் நெருங்கி போய் இருந்தேன்.தலையில் முடி இருந்தும் அதன் மீதும் ஒருவித வலை போல இருந்த்து. உடல் அமைப்பு அனைவருக்கும் ஒரே மாதிரி இல்லை வேறு பட்டு இருந்தது. கதைகளில் கேட்ட தேவதை போல இருந்தார்கள்.

"ஏன் வந்தாய்? எப்படி தெரியும்?"

"என் நண்பன் ஒருவன் ஏற்க்கனவே வந்து போய் இருக்கான் இப்போதும் ஆய்வுக்குத்தான் வந்தேன்" என்றேன்

அமைதி நிலவியது ...

"இங்கு வெறும் பெண்கள் மட்டும்தானா என்ன ?" கேட்டேன்

"ஆமாம்" என்று சொல்லி மெல்ல சிரித்தாள் ஒரு தேவதை

வந்ததின் புண்ணியம் கிடைத்த மாதிரி இருந்தாலும் ஒரு சந்தேகம் கிளம்பியது கேட்டேன் ..

"பின்னே எப்படி நீங்கள் பல்கி பெருகுகிறிர்கள்?"

அவர்களிடத்தில் மௌனம்  பதில் சொல்லாமல் கொஞ்சம் குழப்பமாக இருப்பது தெரிந்தது...

"நான் அதற்கு உதவட்டுமா நான் வந்ததின் ஒரு நோக்கமும் அதுதான்" என்றேன் எதோ ஒரு தைரியத்தில்.

"ம்ம் சரி...."

     "என்னது சரியா .... மெல்ல என்னை நானே மீண்டும் கிள்ளி  பார்த்து கொண்டேன் இது கனவா இல்ல உண்மையா என்று.

     "இன்னும் சொல்லி முடிக்கவில்லை ம்ம் சரி அதற்கு தகுதியானாவாரா இல்லையா என்பதை முதலில் நாங்கள் முடிவு செய்கிறோம். அதோடு ஆண்கள் இந்த பகுதியில் இல்லையென்று சொன்னோம் ஆனால் அவர்களுக்கு என்று பணிபுரியும் இடம் இருக்கிறது அவர்கள் அங்கு மொத்தமாக  இருப்பார்கள். இனபெருக்கம  செய்ய சில தகுதி உடையவர்களை நாங்கள் அதற்க்கென்று தேர்ந்து எடுத்து இருப்போம். மற்ற ஆண்கள் எல்லாம் பணிவிடைகள் செய்வார்கள். குழந்தைகளை கவனித்து கொள்வது, இருப்பிடத்தை சுத்தம் செய்வது இன்னும் பல அன்றாட வேலைகள்.

"என்ன சொல்றிங்க?"

"ஆமா இப்போது கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும் நீங்கள் எதுக்கு லாயக்கு என்று"

     கொஞ்சம் வேர்த்து இருக்க இப்போதும் கிள்ளி பார்த்து கொண்டேன்.அவர்கள் பேசியதை வைத்து பார்க்கும் போது  என்னை திருப்பி அனுப்பும் எண்ணம் இல்லை என்பது தெரிந்தது. விண்கலம் வேறு வெகு தொலைவில் இருக்க என்ன செய்வதென்று அறியாமல்  திகைக்க ...

      அதில் இருந்து வந்த சில பெண்கள் என்னை பிடித்து தூக்க ஆரம்பித்து இருந்தார்கள். ஒன்றும் செய்ய முடியாமல் அவர்களின் கை பஞ்சு போல மெதுவாக இருந்ததை மட்டும் உணர முடிந்தது. இப்போதும் இது உணமையாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற நம்பிக்கையில் கிள்ளி பார்த்தேன். ஆனால் அவர்கள்  தூக்கி போவதை நிறுத்தவில்லை என்பது தெரிந்தது . அவர்களின் உடம்பில் இருந்து ஒருவித  நறுமணம் வீசியதை உணரமுடிந்தது. அவர்களின் நடையில் இப்போது வேகம் அதிகரித்து இருந்தது.


    படுக்கை அறையின் திடீர் வெளிச்சத்தில் எழுந்து இருந்தேன். மனைவி   தனது கையை தடவிய படி நின்று இருந்தாள் ........என்னவென்று கேட்டேன் ..

"ஒரு வாரம் வெளியூர் போறீங்க சரி ....... பக்கத்துல தானே படுத்து இருக்கேன் .......அதுக்காக என்னை அப்படி கிள்ளனுமா என்ன ?" என்றாள் கோபமாக கையை பார்த்து கொண்டே ......