சில விசயங்கள் - 15


       முழுதும் கற்பனையில் கதையை ஒருவரால் எழுத முடியாது என்பதை சுஜாதா எழுதி வாசித்ததாக நினைவு. இது உண்மையும் கூட. அந்த வகையில் நான் அதிகம் பயன்படுத்தியது எங்கள் ஊரில் உள்ள பெருமாள் கோயிலும், ஊரைச் சுற்றி ஓடும் ஆறும் தான். என்னதான் அதீத கற்பனை இருந்தாலும் அதனைக் கொஞ்சம் உயிருள்ளதாக மாற்ற நாம் கண்ணில் கண்ட நிகழ்வுகளின் பாதிப்பு, மனிதர்களின் குணங்கள், அல்லது நாம் ரசித்த அல்லது நம்மை  பாதித்த இடங்கள் இவற்றில் ஏதாவதொன்றை  கண்டிப்பாக நமக்கே தெரியாமல் ஒரு இடத்தில் வெளிப்படுத்தியே விடுவோம்.

   அந்த விதத்தில் நான் சேர்த்தது சிறுவயதில் அதிகமாக நான் ரசித்த இரண்டு விசயங்கள். ஒன்று ஊரை ஒட்டியே ஓடும் ஆறு, வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோயில். இந்த இரண்டுக்கும் ஒரு மிகப்பெரிய சம்பந்தம் உண்டு. கொஞ்சம் கதைபோல இருந்தாலும் இறுதியில் உணமையான ஏதோ ஒன்று தனித்து இருப்பதை உணரமுடியும். முதலில் அந்த ஆற்றில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.

    வைப்பாறு என்ற பெயருடன் கேரளத்தில் இருந்து உருவாகி எங்கள் ஊர் வழியாகப் பயணித்து கடலில் சேரும். ஆறு என்றால் எப்போதும் நொங்கும் நுரையுமாக தண்ணீர் செல்லாது. வருடத்தில் எப்படி ஒரு தீபாவளி,ஒரு பொங்கல், ஒரு பிறந்த நாளோ அதே மாதிரி வருடத்திற்கு ஒரு தடவை வெள்ளம் வரும். அப்படி வந்தால் நாங்கள் புண்ணியவான்கள். ஒருவகையில் காட்டாறு என்று கூட சொல்லலாம். ஆனால் அதனையொட்டியக் கிராமங்களுக்கு ஒரு ஜீவநதி. தண்ணீர் வரும் நேரம் மட்டுமில்லாமல் திறந்த மணல்வெளியில் தனக்குள் நீரை தேக்கிவைத்து கோடை காலங்களில் விவசாயத்திற்கும், குடிக்கவும் நீர் வழங்கும் ஓர் ஜீவ நதி.

   ஆனால் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தண்ணி வரவே இல்லை யார் பெற்ற சாபமோ தெரியாது. இடையில் நடந்த மணல் கொள்ளையில் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் போல மாறியது. ஆம்  ஆடை கிழிக்கப்பட்டு கந்தல் கோலமாக கிடக்கும் ஒரு அபலையை விட மோசமாக ஆக்கிவிட்டார்கள். உயிரோடுள்ள  உடலை ஒரு இரும்புக்கரம் கொண்டு துளைத்து ஒவ்வொரு உறுப்பாக வெளியே எடுத்து விற்ற பிறகுத் தூக்கிப் போட்ட ஒரு சடலம்தான் இப்போது இருக்கும் நான் ரசித்த ஆறு.

  முதலில் எங்கும் ஒரே சமமான சமவெளி. கடைசியாக வந்த வெள்ளம் வரைந்து விட்டுச்சென்ற ஓவியமாக சிறு பள்ள மேடுகள். அந்த ஓவியத்துக்கு வண்ணம் சேர்க்கும் விதமாக வெள்ளையான குருமணல், கொஞ்சம் மங்கலான சரல், கருப்பான கூழாங்கற்கள் என அங்கங்கே பரவிக்கிடக்கும். கரையில் இருந்து பார்த்தலே கால் வைப்பதுக்கு முன் கொஞ்சம் ரசிக்கத் தூண்டும் அழகு. கரையோரம் உள்ள ஊர்களின் குடிநீர் தேவைக்கு ஆங்காங்கே போடப்பட்டக் கிணறுகள். இதைத்தவிர ஒரு காக்கா நின்றால் கூட துல்லியமாகத் தெரியும் அளவுக்கு இருந்த ஆற்றின் நிலைமைதான் நான் மேலே சொன்ன உயிரோடு உறுப்புகளைப் பிடுங்கி போடப்பட்ட உடலைப்போல மாறியிருக்கிறது. மாற்றிவிட்டோம்.

    பனைமரத்தின் பாதியளவுக்குக் குதறி மணலை எடுத்துவிட்டார்கள். அதற்கு மேல் சுண்ணாம்புப் பாறைகள்  கண்ணில் பட்டதால் அத்தோடு நிறுத்தியிருக்கிறார்கள். இல்லையென்றால் பூமியின் மறுபக்கம் வரைத் தோண்டியிருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சுத்தமான ஆற்றுமணலில் பெரும்பாலும் எந்தவித மரமும் அதிகமான செடிகளும் முளைக்காது. அதிக பட்சமாக நாணல் எங்காவது பார்க்கலாம். மரங்கள் வளர வாய்ப்பில்லை. ஆனால் இப்போது ஆறு அங்கே இல்லை வெறும் மரங்கள் அதுவும் வேலி மரம் எனப்படும் கருவேலம் மரங்கள் இறந்த உடலை மொய்க்கும் புழுவைப் போல ஆற்றை படர்ந்திருக்கின்றன.

   காரணம், வெறும் மணலாக இருந்தால் இந்த மரம் வராது, அதிக ஆழம் தோண்டியதில் ஆற்றுமணல் முடிந்து சாதாரண மண் வெளியில் வந்ததுதான் இவை அதிகம் வளர்ந்ததுக்கு கரணம். தூரத்தில் இருந்து பார்த்தால் கரையெது ஆறெது எனத் தெரியாமல் போய்விட்டது.ஆற்றுமணலைப் பார்ப்பதென்பது அங்கே முடியாத காரியம்.    

   சரி இதுக்கும் அந்த பெருமாள் கோயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், சம்பந்தமில்லாத விசயத்தைதான் இதுவரையில் உங்களை வாசிக்க வைத்திருக்கிறேன். மணல் கொள்ளைக்கும் அந்த கோயிலுக்கும் சம்பந்தமில்லை ஆனால் ஆற்றுக்கும் அதுக்கும் இருக்கிறது. அதைச் சொல்ல வரப்போய்தான் கொஞ்சம் நிகழ்காலம் நீண்டுவிட்டது. ஆம் நான் சொல்ல வேண்டிய சம்பந்தப்பட்ட விஷயம் இறந்தகாலத்தில் நிகழ்ந்த ஒன்று. அதாவது எனது காலத்துக்கு முன் நடந்தது ஆனால் எனது காலத்தில் என்னால் செவிவழிக்  கேட்கப்பட்டது.

    அதே ஆற்றில் ஒருமுறை வெள்ளம் வரும்போது வெள்ளமென்றால் அக்கரைக்கும் இக்கரைக்கும் நொங்கும் நுரையுமாக நீர் ஓடியதாம். வெள்ளம் வடியும் காலத்தில் ஏதாவது ஒரு கரையோரத்தில் குறைந்த அளவு நீர் சென்று கொண்டிருக்கும். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவரால் ஒரு பெரிய கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் சோதனை செய்துவிட்டு அது ஆற்று நீரில் அடித்துவரப்பட்ட ஒரு கற்சிலை என்பதை உறுதி செய்துகொண்டு ஊருக்குள் தெரியப்படுத்தியிருக்கிறார். வந்து அதனை கரைசேர்த்துவிட்டுப் பார்க்கும்போது அந்தச் சிலையில் இருந்து ஒரு ஓலைச்சுவடி பிரியாமல் மாட்டிக் கொண்டிருந்திருக்கிறது. அதில் எழுதியிருந்த விசயம் என்னவென்றால்,” ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இந்த ஊரின் அழிவு இந்த ஆற்றால்தான்” என்றிருந்ததாம்.

   அப்படியெடுத்து வரப்பட்ட சிலை பெருமாள் சிலை. பெருமாள் என்றால் ஒரு பொதுவான பெயரல்லவா அதனால் அந்தக் கடவுளின் பெயர் வெங்கடாஜலபதி அதாவது திருப்பதியில் இருக்கின்ற அதே சாமி என்று எனக்கு புரியும்படி எளிதாகச் சொன்னார்கள். அதனை வைத்துச் சிறியதாக ஒரு கோயில் கட்டினார்கள்.  ஆனால் அந்த ஓலைச்சுவடியை பற்றி யாரும் எதுவும் கண்டுகொள்ளவில்லை போல. அது கிடைத்த விசயத்தோடு அதன் பங்கு முடிந்திருந்தது.

    ஆனால் அந்தச் சிலை இன்னும் கம்பீரமாய் ஒரு பெரிய கோயிலை தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டுள்ளது. பெரிய கோயிலைக் கட்டியது அப்போதைய எட்டையபுர ராஜாவாம். அவர் அதிகமான ஆன்மிக திருப்பணிகளை எட்டையாபுரத்தை சுற்றிச் செய்திருந்தாலும் மிகப்பெரியவைகளில் ஒன்று இந்தக் கோயிலும் அடங்கும்.   

    கோயிலைக் கட்டியதோடு இல்லாமல் ஒரு பெரிய தேர் மற்றும் அதனை இழுக்க ஒரு யானை என அந்தக் கோவிலுக்கு கொடுத்திருக்கிறார். வருடாவருடம் நடக்கும் திருவிழாவின் போது யானை கட்டித் தேர் இழுத்திருக்கிறார்கள். அந்தத் தேர் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்வரை தேரடியில் இருந்தது. பின்னர்தான் அதனை பிய்த்து அடுப்பெரித்து விட்டார்கள். மிகப்பெரியது. கலைநயம் கொண்டது. 

    தேர் ஊரைச் சுற்றும்விதமாக வழித்தடங்கள் இருக்கும். அதாவது ஊருக்கு வெளியில் ஒரு நீள்வட்ட வடிவிலான ஒரு பாதை. திருவிழாக்கள் நடக்கும்போது மிக சிறப்பாக இருக்குமாம். அந்த ஊரில் அக்ரகாரம் ஒன்றும் இருந்தது. அந்த காலத்தில்தான் திருவிழா மிகச் சிறப்பாக நடந்ததாம். போகபோக கால மாற்றத்தில் மனிதர்கள் இடம்பெயர்ந்து அக்ரகாரம் காலியானது. அதன்பிறகு அந்தக் கோயிலை கண்டுகொள்ளாமல் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விட்டது.

    இந்தக் கோயிலைப் பற்றி அதிகமாவே கதைகளில் வர்ணித்து இருக்கிறேன். அவ்வளவு அழகான அமைப்பைக் கொண்டது. எனக்கு மிகப் பிடித்தமான ஒன்றும் கூட. ஆனால் மனிதன் அதையும் விட்டுவைக்கவில்லை. அதன் கோபுர கலசங்கள் கூட திருடப்பட்டன.வெளிப்புற சுவர்கள் இடிந்து விழ சிலரால் அது மீண்டும் கட்டப்பட்டது. இப்போது சென்று பார்க்கும்போது கோயில் கூரையில் உள்ள பெரிய அளவிலான பாறைகளால் செதுக்கப்பட்ட கற்கள் சரியும் நிலையில் உள்ளன. கோயிலைச் சுற்றியிருக்கும் இந்த மாதிரியான கற்களில் அதிகமான சிற்பங்களைக் காணமுடியும்

    இப்போதைக்கு இங்கு நிறுத்திவிட்டு, அந்த ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட விசயம் நடந்த விதத்தையும், அந்த ஆற்றைப் பற்றிய பல விசயங்களையும் அடுத்த பதிவில் எழுதுகிறேன். உண்மையில் நான் சொல்ல வந்த விசயம் ரெண்டு பத்திகளில் அடங்கும் என்றுதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஆறு போல நீண்டு பாய்ந்தது எப்படியென்றுதான் தெரியவில்லை. கண்டிப்பாக அடுத்த பதிவில் கடல் சேர்த்துவிடுகிறேன். .



3 comments:

இளங்குமரன் said...

வாசகனைப் படிக்கத் தூண்டுவதாகவும், எதிர்பார்த்துக் காத்திருக்க வைப்பதாகவும் உள்ளது. வாழ்க... தொடரவும்.

இளங்குமரன் said...

என் கிராமத்தில் ஊற்றில் நீர் இறைத்த நினைவு....

கணேஷ் said...

நன்றி ஐயா. மீதி நாளை பதிவிடுகிறேன்.