சில விசயங்கள் - 14

      எதிர்பாராமல் கிடைக்கின்ற அதிர்ஷ்டம் அல்லது வாய்ப்புகளின் சுகமே அலாதியானதுதான். அந்த வகையில் அண்மையில் எனக்குக் கிடைத்த ஒன்று உடையார். இதைப் பாதி அதிர்ஷ்டம், மீதி நல்ல வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். காரணம் இதுவரை நான் பாலகுமாரன் அவர்களின் எழுத்தை வாசித்தது கிடையாது. அதிகமாக அவரைப்பற்றியும் அவரது எழுத்துக்களைப் பற்றியும் படித்திருக்கிறேன். இருந்தாலும் அவரது படைப்பை இதுவரை வாசித்திருக்கவில்லை.

      லா.ச.ரா வின் எழுத்தைச் சில மாதங்களுக்கு முன் வாசிக்க ஆரம்பித்தபோது இருந்த மன நிலையை மீண்டும் என்னுள் ஏற்படுத்தியவர் பாலகுமாரன் அவர்கள். நான் முதன்முதலில் லா.ச.ரா வை படிக்கும்போது இதுவரையில் தமிழில் வாசித்தும், வாசிக்கும் பழக்கம் இருந்தும் இவரது படைப்பை எப்படித் தவறவிட்டுக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதே எனது வருத்தம். அந்த வருத்தம் அடுத்து வந்த காலத்தில் லா.ச.ரா வையே சுவாசித்ததில் போய்விட்டது. இப்போது பாலகுமாரன்.

      இந்த இருவருக்குமே பொதுவான ஒரு ஒற்றுமை இருக்கவே செய்கிறது. காரணம் லா.ச.ரா வை மனதில் வாங்கி வாசித்தவன். கிட்டதட்ட மனதை அவரின் எழுத்தில் அடகு வைத்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். அதே ஒரு உணர்வை மனதில் ஏற்படுத்தியது பாலகுமாரன் அவர்களின் எழுத்து. இந்தவகையான உணர்வு வாசிப்பவர்களின் மன நிலையைப் பொறுத்து மாறும் ஒன்றாக இருப்பினும், நான் உணர்ந்ததைத் தான் இங்கு எழுத முடியும்.

லா.ச.ரா.

    இவரது  எழுத்தென்றால், அதில் வரும் சூழ்நிலை அல்லது அதில் வாழும் கதாபாத்திரமாகவே மாறி, கதையோடு செல்வதுதான் எனது வாசிப்பு. சில சமயங்களில் இவரது எழுத்து புரியவில்லை என்பதை வாசிக்க நேர்ந்ததுண்டு. சற்று ஆச்சர்யமான விசயம் இந்த விளக்கமான, ஆத்மாத்தமான எழுத்தே மனதுக்குள் கிரகிக்கவில்லையெனில் வேறெது? என்ற கேள்வியே எனக்குள் மீதமிருந்தது.

      அத்தோடு நிற்காமல் ஏன் புரியாமல் போனது என்ற காரணத்தையும் அறிய முயன்றபோது என்னுள் எனக்கே பதிலளித்து என்னையே நான் தேற்றிக்கொண்ட பதில்: “வாசிப்பவர்கள் படைப்பை எழுதியவர் ஒருத்தர்(லா.ச.ரா), அதில் வாழ்பவர்கள் சிலர், அதைப் படிப்பவன் நான்” என்று இருப்பதே காரணம். ஆனால் யாரொருவர் இதில் இரண்டைத் தவிர்த்து “நான் வாசிக்கிறேன் அதனால் அந்தப் படைப்போடு ஒத்துப்போய் மனதளவில் சிலமணிநேரங்கள் அதாகவே வாழ்கின்ற நிலையில் அவருக்குப் புரியாததென்று ஏதும் மிஞ்சியிருக்க வாய்ப்பேயில்லை.

இலக்கியமென்பதும் இதுதானே(இந்த உணர்வு) இல்லியா?

     இப்போதெல்லாம் இதுதான் இலக்கியம், இது இலக்கியத்தில் சேராது என்ற செய்தியை படிக்கும்போதே ஏதோவொரு சகிக்காத உணர்வுதான் எழுகிறது. எப்படி இவர்களால் இலக்கியமென்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடிகிறது என்ற கேள்வி என்னுள் இன்னமும் இருக்கிறது.

         இதே வகையில் சில கேள்விகளும் பல வருடங்ககளாகத் தேங்கி நிற்கின்றன. அவற்றில் சிலவற்றை நான் இங்குச் சொல்வதின் மூலம் என்னுள் இலக்கியமென்பது எந்த வகையில் புரிந்ததாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
1.    கடவுள் இருக்கிறாரா? இருந்தால் எப்படித் தெரியும் அல்லது எப்படி உணரமுடிகிறது அந்த உணர்வை எனக்கும் விளக்க முடியுமா?
2.    மற்ற உணவுகளையாவது ஓரளவு விளக்கிவிட முடியும், இந்தக் காதல் என்றால் எப்படி இருக்கும்? மனதில் அதன் பிம்பம் என்ன என்பதைக் கொஞ்சம் சொன்னால் என்னுடைய பல கேள்விகளுக்கான விடை இதிலேயே அடங்கிக் கிடக்கின்றன.

        இந்தக் கேள்விகளுக்கு என்னைத் திருப்திபடுத்தும் வகையில் பதிலளித்துவிட்டால் அவர்கள் இலக்கியமென்று எனது எழுத்தைச் சொன்னால் கூட நான் நம்பத்தாயர்
.
      இலக்கியமென்பது வாழும் வாழ்க்கையின் சூழ்நிலை சார்ந்த தன்மையின் வெளிப்பாடோ அல்லது மொழி சார்ந்த அல்லது அதன் கலாச்சர தாக்கத்தின் வெளிப்பாடக இருக்கலாம் என்ற கருத்து இலக்கியமென்ற முடிவில்லா புத்தகத்துக்கு ஒரு பத்தியாகக் கொள்ளலாம்.

சரி விடுங்கள் கொஞ்சம் தடம் மாறிவிட்டது இல்லையா...? இதை மற்றோர் தனிப்பிரிவாகப் பார்க்கலாம். இப்போது பழைய தடத்திற்கு வருகிறேன்.

          கடைசியாக மனம் முழுதும் லா.ச.ரா வும் தமிழில் வாசிக்க வேண்டிய சில படைப்புகளைத் தேடித்தேடி வாசித்துக்கொண்டும் இருந்த ஒரு தருணத்தில், தாம்பரத்தில் ஒரு பழைய புத்தகக் கடையில் “உடையார் பாகம்-1” என்று கையினால் எழுதப்பட்ட பதிகப்பகத்தார் வெளியீடு இல்லாத ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். எப்போது அந்தப் பக்கம் போனாலும் எதவாது உபோயோகமான ஆங்கிலப் புத்தகங்கள் அந்தக் கடையில் கிடைக்கும் என்பதற்காகவே அந்தக் கடையில் சிறிது நேரம் செலவிடுவது எனது வழக்கம்.

      கையில் எடுத்தபிறகுதான் தெரிந்தது அந்தப் புத்தகத்துக்குப் பின்னால் அதனுடைய மற்ற பாகங்கள் இருந்தன. அதாவது உடையார் பாகம்-2, & 3 & 5 ஏனோ நான்காம் பாகம் இல்லை. கொஞ்சம் முன்னுரையில் வாசித்ததில், தஞ்சை பெரியகோவில் மற்றும் இதை இன்னும் பெரிய அளவில் எழுதப் போவதாகப் பாலகுமாரன் அவர்கள் சொன்னது அதற்குச் சான்றாக அங்கு அதே படைப்பின் பல தொகுதிகளைப் பார்த்தது போன்றவைகளே அந்தப் புத்தகத்தை ஒருமுறை வாசிக்கத் தூண்டியது.

        ஒரே மூச்சில் வாசித்தேன். என்னுடைய பழக்கமா? அல்லது அந்ததந்த படைப்பின் தாக்கமா? என்றெல்லாம் எனக்குத்தெரியாது. சில படைப்புகளையே இந்த மாதிரி வாசித்ததுண்டு. லா.ச.ரா. வின் அபிதா, சிந்தாநதி, பாற்கடல் மற்றும் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் போன்றவைகள்.

       சிலமணி நேரம் பண்டையத் தமிழ்ச்  சமூகத்தில் வாழ்ந்தேன் என்ற உணர்வை என்னுள் விட்டுச் சென்ற ஒரு படைப்பு. கனமான புத்தகம் வாசிக்க வாசிக்க அந்தக் கனம் மனதில் ஏறிவிடுவதுதான் அதன் சிறப்பு.

      முடித்தபிறகு நான் அறிந்து கொண்டதெல்லாம் ராஜராஜ மன்னர் தஞ்சை பெரியகோவிலை கட்டினான் என்பது மிகத்தவறு கட்டினார் என்பதே சரியான ஒன்று. இதன் அர்த்தம் முழுதும் புரிய நீங்களும் என்னைப்போலப் பாலகுமாரனின் எழுத்தின் மூலம் அந்த மன்னரின் ஆட்சியில் சிலமணி நேரமாவது ஒரு சாதாரணமான குடிமகனாக வாழ்ந்து பார்க்க வேண்டும். அல்லது என்ன நடக்கிறதென்பதைத் தூரத்தில் நின்றுகொண்டு வேடிக்கையாவது பார்த்திருக்க வேண்டும்.

         மீண்டும் அதே பழைய கடைக்குச் சென்று மற்ற தொகுதிகளைக் குறைந்த விலைக்கு வாங்கும் எண்ணம் மனதில் துளியும் இல்லாமல் போக, அதன் முழுத்தொகுதியும் கிடைக்கிறது என்பதை அறிந்தேன். என்னைப் பொறுத்தவரையில் கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தக வரிசையில் இதுவும் இருக்கிறது.

இப்போது பாலகுமாரனின் பிற எழுத்துக்களையும் வாசிக்கிறேன்.

      என்னுள், வாசிப்பென்றால் வெறுமனே பக்கங்களை வேகமாகப் பொழுதுபோக்கிற்காகப் புரட்டுவது இல்லையென்பதை உணர்த்தியவர் லா.ச.ரா. எழுத்தின் தாக்கம் மனதில் வின் வின்னென்று இருக்கவேண்டுமேன்பார். நெருப்பு என்றால் வாய் சுட வேண்டுமென்பார். ஆம் எனக்கும் சுட்டது. அந்தவொரு மன நிலையைத் தனது எழுத்தின் மூலம் உருவாக்கிய பின்னர், மற்ற படைப்புகளை உள்வாங்கிக் கிரகித்துச் சந்தோசிப்பதில் எந்தவொரு தேக்கமும் இருக்கப் போவதில்லை.

எனக்குமில்லைதான். சந்தோசத்தைப் பகிரும் ஒரு  நிகழ்வுதான் நீங்கள் மேலே வாசித்தது. வேறொன்றுமில்லை.

1 comments:

சுபத்ரா said...

உன்னை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது...