சில விசயங்கள் - 12

       இதில் என் சுயபுராணம் மட்டும்...இந்தமுறை ஊர்பயணம் மற்றதைவிட நன்றாகவே இருந்தது. ஒருவேளை பொங்கல் பண்டிகை காலமாக இருந்திருக்கலாம். பண்டிகைகளை வெகு விமர்சியாக கொண்டாடுவதில் சுத்தமாக ஆரவம் இல்லைதான். இந்த நேரத்தில் எல்லா குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக கூடி இருக்க கிடைக்கும் ஒரு அறிய வாய்ப்பு அதுதான் என்னை பொருத்தவரைக்கும் பெரிய சந்தோசம்.இந்த காரணத்துக்காகவே இந்த மாதிரியான பண்டிகைகள் தொடங்கப்பட்டு இப்போது திசைமாறி போய் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

     அனேகமாக நான்கு வருடங்களுக்கு பிறகு இந்த பொங்கலுக்கு நான் ஊரில் இருந்தேன். அதுவும் புதிய வீட்டில் பொங்கல் கொஞ்சம் இனிப்பாகவே இருந்தது. ஏற்க்கனவே நினைத்தது போலவே காலை நான்கு மணிக்கே அடித்து எழுப்பி விட்டார்கள். இருந்தாலும் அசையவில்லை இதோ வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு தூங்கும் வேலையை தொடர்ந்தேன். கடைசியாக கையில் தண்ணி கொண்டுவந்து முகத்தில் தெளித்த பின்னர்தான் குளிர் தாங்காமல் எழுந்திருக்க வேண்டியதாயிற்று.

     முன்பெல்லாம் காலையில் சீக்கிரம் எழுந்துதான் வாசலில் கோலம போடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் இரவே வெகுநேரம் முழித்து இருந்து புத்தகத்தை பார்த்து போட்டுவிட்டு காலையில் சௌகரியாமாக எழுந்திருக்கும் வித்தையை எனதூரில் காண முடிந்தது.ஆனால் எங்கள் வீட்டில் காலையில் என்னை எழுப்பியது கோலத்துக்கு வண்ணம் கொடுக்குவாம்.

    முந்தைய நாள் இரவில் முழித்து இருந்து கோலம போட்டவர்கள் எல்லோரும் யாருக்கும் தெரிந்து இருக்காது என்ற நினைப்பில் ஏதோ இப்போதுதான் போட்டது போல பொங்கல் வேலையில் இருந்தார்கள். இன்னும் கொடுமை என்னவென்றால் இரவு போட்ட கோலத்துக்கு பாதுகாப்பாக பெரிய பெரிய கற்களை அதை சுற்றி வைத்து இருந்ததுதான்.யாரும் வாகனத்தை மேலே ஏற்றிவிட்டால்?. அதுவும் சாலையில் என்பதால் எத்தனை பேர் விழுந்தார்களோ அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

     நான் வெளியே வந்து பார்க்கும்போது போர்டிகோவில் மண்போட்டு பானைவைத்து எல்லாம் தயாராகி இருந்தது.எல்லோரும் அவர்களின் வேலையில் மும்மரமாக இருந்தார்கள். இப்போது போய் காபி கேட்டால் அடிவிழும் என்பதால் பொங்கல் பொங்கும்வரை வரை காத்திருந்து அப்புறம் சாமிகும்பிட்டு மாடியில் காக்கைக்கு முதலில் வைத்துவிட்டு பின் காத்திருந்த வேலையை முடித்தேன்.

      அதேநாள் காலையில் அறிவியல் வளர்ச்சியின் சாதனையை கண்கூடாக காணமுடிந்தது.சில வீடுகளில் காஸ் அடுப்பை வீட்டின் வாசலில் வைத்து பொங்கல் வைத்துக்கொண்டு இருந்தார்கள். என்னதான் இது முன்னரே பல இடங்களில் நடந்து இருந்தாலும் நான் நேரில் பார்ப்பது இதுதான் முதல்முறை. அடுத்த தடவை மின்அடுப்பு (induction) வைத்து பார்க்க நேர்ந்தாலும் ஆச்சர்யப்படமாட்டேன்.



     அடுத்து யோசிக்க வைத்த விசயம் கோலங்கள். முதலில் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்றுதான் நினைத்து இருந்தேன். என்னதான் கொஞ்சம் ENG. DWG ல் தேறியிருந்தாலும் சிலவற்றை நான் முயற்சித்தபோதுதான் உண்மை தெரிந்தது. முடிக்க முடியும்தான் ஆனால் அதற்கென்று போடுகிற முறையில் இருக்கும் ஒரு தரம் அழகு வராது. தனி தனியாக போட்டு எல்லாத்தையும் இணைக்க்முடியும் ஆனால் முறைப்படி போடுபவர்கள் ஒரே தொடர்ச்சியாக போடுவதால் இடையில் வெட்டு குத்துக்கள் நடந்த சுவடுகள் தெரியாமல் இருக்கும். கோலம எல்லோராலும்  அழகாக போடமுடியாது அது பெண்களாக இருந்தாலும் சரி.

                                     *********

        டெல்லி திரும்புவதுக்கு இரண்டு நாள் முன் இரவில் நடந்து வரும்போது கால் ஒரு இடத்தில் சருக்கென்று வழுக்கியது பின்திரும்பி மொபைல் வெளிச்சத்தில் என்னவென்று பார்த்தால் ஒரு பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. இதயம் சில வினாடிகள் துடிதததா தெரியவில்லை. நல்லவேளை பாம்பின் ஏதாவது ஒரு பகுதியை மிதிக்கவில்லை.

    அதாவது அதன் வால் பகுதியை மிதித்து இருந்தால் நிலமை வேறாக இருந்து இருக்கும். நடந்து வரும் அதிர்வுக்கு முதலிலேயே அது சுருண்டு இருந்திருக்கிறது. அதன் உடல் பகுதியினை மொத்தமாக சேர்த்து மிதித்து இருக்கிறேன். அதனால் உடனே ஒன்றும் செய்ய இயலாமல் நான் காலை எடுத்தபிறகு தலையை தூக்கி வலியால் ஓடி ஒரு ஓரத்தில் போய் மீண்டும் சுருண்டு நகர முடியாமல் கிடந்தது. அதற்கு என் எடை காரணமாக இருக்கலாம். கொஞ்ச நேரம் பார்த்துகொண்டு இருந்தேன் நகர்கிறதா என்று இல்லை அது இருந்த இடத்திலியே நெளிந்தது.பாவமாக இருந்தது. பெரிய பாம்பும் இல்லை. ஒரு இரண்டடி இருக்கும்.

     வீட்டில் போய் சொன்னால் அலறியடித்து காலை கழுவ சொல்லி ரத்தம் எங்கும் வருகிறதா என ஆள் ஆளுக்கு பார்த்தார்கள். எல்லா சோதனையும் முடிந்த பிறகு நான் எந்த காலால் பாம்பை மிதித்தேன் என்பதை மறந்துவிட்டேன் என்று சொல்ல எதிலும் விளையாட்டுத்தான் என செம கோபமாகி......... சரி அவை வேண்டாம். அப்புறம் அது என்ன பாம்பு என்று பார்த்து வரச்சொல்ல கிளம்பி போய் அந்த இடத்தில் லைட் அடித்து பார்க்க சில வினாடிகள் நின்ற இதயம இப்போது நிமிட கணக்கில் நின்றது. காரணம் அங்கு இரண்டு பெரிய பாம்புகள் அதனை சுற்றி இருந்ததுதான்.

     நான் லைட் அடித்ததும் அந்த வெளிச்சத்தில் வேகமாக நகர்ந்தது. நான் மிதித்த பாம்பு அந்த இடத்தை விட்டு நகராமல் அங்குதான் நெளித்து கொண்டு இருந்தது. அவ்வளவுதான் ஓடாத குறையாக வீடு வந்து சேர்ந்து நடந்ததை சொன்னால் முதலில் கொஞ்சம் அதிர்ச்சியானாலும் பின்னர் நான் கதைவிடுகிறேன் என நம்ப மறுத்தார்கள்.  வாருங்கள் போய் பார்க்கலாம் என்று சொல்ல வேண்டாம் நம்பிட்டோம் என்று முடித்தார்கள்.

     கொஞ்ச நேரம் கழித்து அங்கு என்ன நடந்தது என்பதை ஒருவழியாக அனுமானிக்க முடிந்து. அக்கம் பக்கம் எங்காவது வீடு கட்ட சுத்தம் செய்து இருப்பார்கள். அங்கு இருந்த ஒரு பாம்பு குடும்பம் இடத்தை காலி செய்துவிட்டு போகும்போதுதான் நான் அதனை மிதித்து இருக்கிறேன். மறுநாள் காலையில் போய் பார்த்தால் ஒன்றுமே அங்கு இல்லை. ஒருவேளை கொஞ்ச நேரம் கழித்து அது போய் இருக்கலாம். இல்லை காலையில் பூனைகள், பறவைகள் இவற்றிக்கு இரையாகி இருக்கலாம். என்னை பார்த்த  பாம்பு நாற்பது நாள் விரதம் இருந்து என்னை தேடி வருமா? அப்படி வரும்னு சொல்வாங்களேன்னு வீட்டில் கேட்க அப்படி வந்தால் உன்னுடைய முகவரி கொடுத்து பிளைட் ஏத்தி அனுப்பி வைக்கிறோம் என்றார்கள். 

                                           *******

      ஊருக்கு போனால் கண்டிப்பாக நான் போகும் இடம் பழைய புத்தக்கடை.  சிலவருடங்கள் முன்பே அதன் இருப்பிடம் அறிமுகமாகி இருந்தது. பிரபல VVR கடலை மிட்டாய்கடைக்கு இடது பக்கம் கொஞ்சமாக ஒரு இடத்தில  அலமாரிகள் நிறையா அடிக்கிய புத்தகங்களை கொண்டிருக்கும். ஒரு முதியவர்தான் இருப்பார். பழைய புத்த்கங்கள் மட்டுமே அங்கு இருக்கும் மற்றபடி பேப்பர்கள் அவர் சேகரித்து வைப்பது இல்லியாம்.அன்றைய தினத்துக்கு அரைப்புக்கு போட்டுவிடுவாரம். காரணம் கடைசியில் சொல்கிறேன்.

     ஒருவனின் சில ரகசியங்களை தெரிந்துகொள்ள அவனது குப்பை தொட்டியை பார்கவேண்டும் என்பார்கள். அதே போல ஒரு ஊரில் என்னமாதிரியான புத்த்கங்கள் படிக்கிறார்கள் என்பதை பழைய புத்தககடையின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி பார்த்தால் கோவில்பட்டியில் பெரும்பாலும் கல்வி சம்பந்தமான புத்தகங்கள்தான் அதிகம். காரணம் கல்லூரிகள் பள்ளிகள் அதிகம்.

     பெரியவரிடம் பாடப்புத்தகம் தவிர வேறுவகை கேட்க அலமாரியின் ஒரு வரிசையில்  அடுக்கில் இருந்த புத்தகத்தை மட்டும் காண்பித்து அதை எல்லாம் எடுத்து வெளியில் போட்டார். தேடியதில் பெரும்பாலும் பக்தி ததும்பும் புத்தகம்தான். இரண்டாவதாக யோகா செய்வது எப்படி என்ற மாதிரியானவை. நிறையா பேர் சும்மா இருக்கிறார்கள் போல. இறுதியாக சில நாஞ்சில் நாடன் சிறுகதைகள் உட்பட தமிழ் இலக்கண விளக்கங்கள் நிறைந்த புத்தகங்களோடு ஒரு எட்டு தேறியது. 

     அதில் திருவள்ளுவரும் சிவப்பிரகாசரும் என்ற புத்தகத்தை படிக்கும் முன்னரே சில விசயங்கள் தெரியவந்தது.  கோவில்பட்டி என்பது கோயிற்பட்டி என்றுதான் சொல்லி வரப்பட்டு இப்போது மாறியிருக்கிறது. பெரியமாற்றம் இல்லையென்றாலும் எனக்கு தெரியாத விசயம். அதுவும் இல்லாமல் திருவள்ளுவர் மன்றம் என்ற ஒன்று இருந்து இருக்கிறது நிறைய இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் இந்த மன்றத்தில் புலங்கபட்டு இருகின்றன என்பதை அதன் முதல் பக்கத்தில் ஒட்டியிருந்த அந்த மன்றத்தின் குறிப்பு சீட்டில் இருந்து தெரிந்து கொண்டேன்.      இப்போதும்  இருக்கிறதா தெரியவில்லை.


      கடைசியாக  எடுத்த புத்தகங்களை அங்கு வைத்தே புரட்டி கொண்டு இருக்க தம்பி கடையை மூடனும் என்று தயார் செய்தார் அந்த பெரியவர்.  துட்டை கொடுக்கும்போது இந்த மாதிரி புத்தகங்கள் வந்தால் எடுத்து வைங்கள் என்று சொல்ல போனமுறை வந்து இதைத்தான் சொல்லிட்டு போனே பார்த்தில்லே இவ்வளவுதான் வந்தது அப்படி வந்தால் நான் எடுத்துவைக்கிறேன் என்றார்.

      அவர் இந்த மாதிரியான புத்தகங்களையும், பள்ளி சம்பந்தமானவைகளையும் அரைப்புக்கு அனுப்பாமல் வைத்து இருப்பது யாராவது ஏழை மாணவர்கள் வந்து கேட்பார்களாம். கொடுக்கிற காசை வாங்கிக்கொண்டு அல்லது இலவசமாக கொடுத்துவிடுவார். ஆச்சர்யம் இன்னொன்று அவர் கடைக்கு பூட்டு போடுவதில்லை. காரணம் கேட்டேன் என்ன தம்பி கேள்வி இது இங்கு வந்து திருட என்ன இருக்கு என்றார்.என்னை பற்றி சரியாக தெரியவில்லை போலும்.  





  

2 comments:

HVL said...

பாம்பென்றால் நடுங்கித் தானே ஆகவேண்டும்!

பொங்கலுக்கு இது பரவாயில்லை! நாங்கல்லாம் சூரியன் வருவதற்கு முன்னே பொங்கல் வைத்துவிட்டு வேலைக்கு ஓடுகிறோம். இந்த வருடம் ஞாயிறு வந்ததால் சாதாரணமாய் கொண்டாட முடிந்தது!

கணேஷ் said...

பாம்பை கண்டால ஏன் நடுங்குகிறார்கள் என்பதை அன்றுதானே அனுபவித்தேன் ))

எங்கள் வீட்டிலேயும் சூரியன் வருவதுக்கு முன்னாடியே வைத்து விட்டார்கள் அப்படி வந்துவிட்டால் நல்ல நேரம் பார்த்துதான் வைக்கனுமாம் அதான் பொங்கல் வைத்துவிட்டு சாமி கும்பிடுபோது மட்டும் சூரியன் வந்த பிறகு ))

அப்ப்டின்னா அடுத்த தடவையும் பொங்கல் சண்டே வரட்டும் ))